Wednesday 8 February 2012

உயிர் போயும் மறப்பேனோ..

பொய்யாகக் கோவித்துப்
பின்னர் அணைத்து முத்தம்
மெய்யாக உன் உதட்டில்
மீட்டிவிட மாட்டேனோ..!

உதட்டோடு உதடு வைத்து
உயிர் வாங்கும் வேளையிலுன்
இதழ் மீது கடித்தெடுத்துன்
இதழ் ரசிக்க மாட்டேனோ..!

இறுக்கி எலும்புடைத்து
இன்னு மின்னும் உன்னிலெனை
அறுக்க முடியாமல்
அத்வைதம் அடையேனோ..!

உடல் வேர்த்துக் களைத்து
உன் மார்பிற் சாய்ந்திருக்க
இடறி வரும் மூச்சொன்றை
இழுக்காமல் போவேனோ..!

நீ ஆணாய் நான் பெண்ணாய்
இடம் மாறும் வேளையிலுன்
உண்மைக் குணம் பார்த்து
உதட்டோரம் சிரிக்கேனோ..!

கண்மை கரைந்தோடிக்
கடைசியில் நீ அழும் வேளை
பெண்மை இது என்று
பெரும் மெளனம் காக்கேனோ..!

விடிந்தெழுந்தென் முன்னால்
வெட்கி நீ தலை குனிந்து
ஒடித்து விடும் புன்னகையை என்
உயிர் போயும் மறப்பேனோ..!

No comments:

Post a Comment