Thursday 23 February 2012

குஞ்சு பறந்த முட்டைக் கோது..

பரந்த வானத்தின் கீழே
இராணுவ வண்டிகளும்
குண்டுச் சிதறல்களும்
பிணங்களுமாய்க் கிடக்கின்ற
வீதியின் நடுவே
நமக்கு வழங்கப் பட்ட
வாழ்க்கை
நடந்து செல்கிறது..
பழைய நினைவுகளும்
கவிதைகளும், சில பாடல்களும்
பின்னிருந்து தள்ள
அப்பழுக்கற்று
நெஞ்சால் சிரிக்கிற
பல்லின்னும் முளைக்காத
பால் வாயின் புன்னகையில்
கிறங்கி
முன்னால் அடி எடுத்து வைக்கிறது
பாதம்
குஞ்சு பறந்த முட்டைக் கோதாய்
திரும்பலுக்கான
சாத்தியங்களற்று வழுகிப்போன
வாழ்க்கை
ஆயிரம் அவலங்களின்
நடுவிலும்
சிலிர்க்க வைக்கிற இப்படியான
சின்னச் சின்ன
உணர்வுகளுக் காகத்தானோ
இன்னமும்கூட
சீவித்துக் கொண்டிருக்கிறது..?

No comments:

Post a Comment