Wednesday 8 February 2012

பாவ மன்னிப்பு..

கறுப்பென்றால் எனக்கென்ன
கவர்ச்சியோ தெரியாது
உறுப்பாய் இருந்ததனால்
உயிர் கொடுத்து வளர்த்து வந்தேன்
சோறு கறி வச்சா பூமி
சுற்றுவதும் தெரியாமல்
கோவக்காரன் போல்
கூப்பிட்டும் கேக்காமல்
கடைசி அவிழ் முடியுமட்டும்
கண் திறக்காய் டேய் கறுப்பா..!

ஏன் நினைச்சம் அண்டைக்கு
இப்பிடி நடக்குமெண்டு,
உனக்குஞ் சொல்லாமல்
உற்றவளும் அறியாமல்
ஊரோட ஓடிப்போனம்
அஞ்சாம் நாள்
வீட்டிலுள்ள பொருள் பார்க்கும்
விடுப்பினில வந்தன் நான்
என்னைக் கண்டோண்ணை
அட ராசா..! ஓடி வந்து
கட்டிப் பிடித்தாய்
கண்டபடி முத்தமிட்டாய்
எட்டி எட்டி நான் போக
இன்னு மின்னும் இணைய வந்தாய்,

பசியாலே நீ வாடிப்போயிருந்தாய்
கையிலுள்ள பார்சல் தனைப் பறித்து
படபடன்று பிய்த்தெறிந்தாய்,
உந்தன் நிலை அறிந்தேன் நீ
உணவருந்தி முடிப்பதற்குள்
எந்த விதப்பட்டும் வர மாட்டாய்
என நினைத்து
மெல்லக் கழன்றேன் நான்
நடந்ததென்ன என் சொல்வேன்...

ஓடிப் போய்ச் சோற்றை
ஓர் பார்வை பார்ப்பதுவும்
தேடி எனைவந்து தீண்டுவதும்
இழுப்பதுவும்
உண்ணாமல் அங்குமிங்கும்
உருள்வதுமாய் எனைத் தடுத்தாய்,
நாளைக்கு வருவன் விடு
என மிரட்டிக் கம்பெடுக்க
வாடிப்போய்த் தள்ளி நின்றோர் பார்வை
பார்த்தாயே..
அந்தப் பார்வைக்கு
அர்த்தம் நான் சொல்வதென்றால்
எந்தச் சொல்லெடுப்பேன்..
எவரிடம் போய்ப் பொருள் கேட்பேன்?
என்ன தான் சொன்னாலும்
எவ்வளவு கதைச்சாலும்

சின்னச் சோத்துக்கு மடங்கிடுவாய்
என நினைத்த
பொன்னை மடையன் நான்
புழுத்தாலும் பாவமில்லை
கண்ணாலே நான் கண்ட கடவுளே
என் கறுப்பா..!
மண்டியிட்டுத் தொழுகிறேன்
மன்னிப்பாய்..


1994 இடப்பெயர்வின் போது நான் வளர்த்த கறுப்பனை எப்படியும் வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் கண்முன்னே விட்டுப்பிரிந்தேன் இன்றுவரை அவனைப் பார்க்கவே முடியவில்லை..

No comments:

Post a Comment