Monday 20 February 2012

அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்

இம் மண்ணின் விடிவுக்காய்
எழுந்துரத்த கரங்களுக்குள்
உன்னுடைய கையும்
ஓர் திருக்கை

எம்முடைய விடுதலையை
பெற ஆர்த்த குரற் சேர்வில்
உன்னுடைய குரல் நாணும்
ஒன்று

உன் பற்றி
ஏராளம் வீரக் கதைகளெல்லாம்
பெடியளிடை
பேசப் பட்டதுவாய் நினைவுண்டு
அதற்குள்ளே
ஏதோ சனி பிடிச்சாட்ட
நீ வழி மாறி இப்பொழுதில்
காதாற் கேக்கேலா வகையில்
உன் கதைகள்

உன் தரப்பு நியாயங்கள்
ஒரு பக்கம் இருக்கட்டும்
உண்மை யதார்த்த நிலை
என்ன..?
வான் கோள்கள்
ஒன்றின் ஈர்ப்பிற்தான்
வலம் வருது அதிலொன்று
சற்று நிலை மாறி
ஒழுக்குடைத்துத் தடம் புரளின்
எரி கல்லாய்த் தான் போகும்
ஈதுலக நியதியடா

எல்லாம் சொல்லி உனை வளர்த்த
பெருந் தலைவன்
எரிகல்லைப் பற்றி மட்டும்
ஏனுனக்குச் சொல்லலையா?

போராட என்று
புறப்பட்டு வந்திட்டு
வீரச் சாவின்றி
வீண் சாவாய் ஏன் போறாய்?

மண்ணுக்காய் பல காலம்
மார் தந்து நின்றிட்டு
மாவீரர் படுக்கையிலும்
மண்ணற்று ஏன் போறாய்?

சுத்தி உனை நிற்கும்
காரணத்தால் சுடப்படுவோர்
தறுதலைகள் என்றாலும்
தமிழ்த் தலைகள் அல்லோடா?

வேண்டாம் வீண்சாக்கள்
ஒதுங்கி விடு வெடி விழுந்தால்
தமிழ்த்தாயின் மகனெல்லோ
தலை சிதறிச் சாய்கின்றான்!

பின்னால் நிற்கின்ற
பெடியள் வீண் என்பதன்றி
உன்னால் இனி ஒன்றும்
ஆகி விடப் போவதில்லை,

பசை இருக்கும்வரை
பயன்படுத்தி வேசையினை
கசக்கிப் பிழிந்தெடுத்து,
காய்ந்தவுடன் கழற்றி விடல்
நீ அறியாததல்ல
நின் வாழ்வும் அப்படியே!

மாற்றுக் கருத்தெண்டும்
மயிரெண்டும் கதையளந்தே
காட்டிக் கொடுத் தழித்தோர்ஒரு பக்கம்,
நீ வேறு
கூட்டிக் கொடுத்தெம்மைக்
கொல்லுகிறாய்!

நாளைக்கே
விதை பிளந்து நாற்றுக்கள்
வீரியத்தோடெழும் போது
களை எடுத்தே தம் கதையைத்
தொடங்கும் அப்பொழுதும்
விலை கொடுக்கப் போவது யார்
விளங்கு,உன்னுடைய
இப்போதைக்கான
எழுமாற்று இருப்புக்காய்
தப்பாக பெடியள் போர்க்குணத்தை
உனக்காக
அப்படியே மாற்றி நசுக்காதே,

ஒரு வேளை
நீ இறந்து போனாலும்
உன் எலும்பை, பரம்பரையை
கட்டாயம் வரலாறு
காறித் தூக்கிலிடும்!
எட்டப்பர் எனச்சொல்லி
இகழும் மறவாதே!
வெடிபட்டு மண் வீழும்
வீரம் உனக்கில்லை
அடிபட்டுச் சாகாதே
அரக்கு ஒதுங்கி விடு..!

No comments:

Post a Comment