Tuesday 7 February 2012

’சா’ பற்றி எண்ண(ச்) சஞ்சலங்கள்..

என் பின்னால் சா தொடர்ந்து
இழுபட்டு வருகிறது
பிறந்தது முன்னிருந்து
பிறப்பறுக்க வென்றெந்தன்
பின்னாலே சா தொடர்ந்து
இறப்பதற்கு வருகிறது,

நான் பெரியாள் ’நான்’ என்று
நாட்டாண்மை காட்டையிலும்
பதவிக்கதிரை புகழ் பகர்கையிலும்
இழவொன்றில்
அனாவசியச் சாவென்று
அலசையிலும்,பிடரியின் பின்
சந்தர்ப்பம் பார்த்தபடி
சாலத்தில் நிற்கிறது,

உள் உருக்கும் உடல் நோயில்
ஓடுகின்ற வாகனத்தில்
மெல்ல மெல்ல குறி தேரும்
குழல் இரும்பு விசைநுனியில்
முக்கியமாய் என் வாயில்
வாழ்க்கை வரைந்திட்ட
வண்ணக் கனவுகளை
வழித்துத்துடைத்தபடி வருகிறது
வருகிறது..

நான் பிறக்கும் போதே
உடன் பிறந்து போகையிலும்
ஒன்றாக உடன்கட்டை
ஏறிடுவேன் என்பதுவாய்
எனது சகபயணி ஆகிச் சா வருகி்றது

ஆயிடினும், ஊழிவரை
ஆண்டு என் வாழ்வு
அனுபவிக்கு மெனுமெண்ணம்
அடிக்கடி என் நடத்தைகளில்
தெரிகிறது, மனுசமனம்
தொல்லைகளைத் தோண்டித்
தோளாக்கிச் சுமைகனத்தும்
இருப்பென்றால இன்மை யென்றறிந்தும்
இருக்காமல்
ஓடுப்பட்டெங்கும உலைகிறது.
ஒரு கணத்தில்..

விடை பெறுதல் பற்றி
வீரர்கள் வரலாறு
உடைபட்டோடும் காலக்
காட்டாற்றில் அடிபட்டு
தடையங்களே இன்றித்
தாழும் வகை பற்றி 
ஒளிப்படங்கள் போல் முன்னால்
ஓட..
இமைப்பொட்டில்
உண்மைத் தீ பற்றி
ஓங்கி எரிகிறது...

No comments:

Post a Comment