Thursday 6 August 2020

அகாலவெளியின் அசரீரி..

இழுத்து மூச்சிரைக்க ஓடி
இடர் கண்டம்பல தாண்டி
விழுந்தாலும் எழுவனென
வீரியமாய்ச் சொல்லி 
அழ நினைக்கும் கண்ணை
அண்ணாந்து மறைத்தபடி 
தொழாத தோள் நிமிர்தி 
தொடர்ந்து வந்த பாதைவழி
தூளாவும் விழி காணும்
தூசிப் படலம் பின்
எதுவுமே வருவதாய் 
இன்றுவரை தெரியவில்லை

பொதுவில் போனவை
போனவை தான் என்றாச்சு
முன்பின் நினைக்காத
முடக்கொன்றின் குளிர் மேட்டில்
என் பின், பக்கத்தில் 
எவருமுண்டா எனப்பார்த்தால்
சகலதிலும் தோற்றவன் சா
சஞ்சாரம் ஏதுமற்ற 
அகாலவெளி ஒன்றில் 
ஆகுமென்ற அசரீரி 
காதுகளைக் குடைந்து 
கடந்தப்பாற் செல்கிறது..