Monday 20 February 2012

வேரறுந்த சோக வலி..

எம்முடைய இரவுகளில்
எழுகின்ற வேட்டொலியில்
அம்பிட்டிருக்காது
அவன் வாழ்வென்கின்ற
நம்பிக்கை தடுமாறும்
நாதி அற்ற வேண்டுதலை,
விம்மி வெடித்தழுது
வீங்கி உள்ள முகங்களினை,
துண்டுகளாய்ச் சிதறியதால்
திறக்கேலாப் பெட்டிகளை,
எட்டாம் நாள் முடிந்து
எல்லோரும் போய் விடிய
எமக்கே எமக்கான
ஏதுமற்ற வெறு வெளியை,

இவை தவிர யுத்தம்
வேறெதனை நமக்கென்று
இயைபாக்கி விட்டு
வைத்துப் போயுளது..?
வெற்றிவரின்
வீரத் தமிழ்க் கதைகள்
பேசுவதும், வேளைகளில்
மற்றவனின் காற்று
மாறி அடித்திடையில்
பெற்ற மனம் பற்றிப்
புலம்புதலும் வழக்காச்சு!

’போரின் அகோரப்
பொறிக்குள் உணராத
வேரறுந்த சோக வலி எல்லாம்
விண் என்று
போரோய்விற் பொங்கி
வெடிக்கும், அப்பொழுதில்
பெற்ற சுதந்திரத்தின்
பெருமை இதன் முன்னால்
குற்றவாளியைப் போல்
குறுகிவிடும்’
உண்மையுந்தான்..

வீடே வெறிச்சோடிப்
போய் விட்ட பொழுதொன்றில்
நாடே தான் வந்தென்ன
நமக்கிங்கு, என்பதுவாய்
காடே அதிரும் படி
கதற மனம் சொன்னாலும்
ஆடிய தசைகளின் ஆட்டம்
அடங்குதில்லை
நாடிய வாழ்வும் நமக்கான
விடுதலையும்
தேடி அடையும் வரை
தீராதோ இவ்வுணர்வு..?
பாடையிலே போம் பொழுதும்
பற்றிடுமோ விடுதலைத் தீ..?

No comments:

Post a Comment