Tuesday 17 December 2013

நினைவிலெழல்..

இத்தனை ஆண்டாய்
நினைவில் வராமலும்
இருக்கிறாய் தானா
எதுவும் தெரியாமலும்
எங்கோ மனத்தின்
குகையில் இருந்த நீ
எதிரே தாண்டும் குழந்தையின்
கண்களில்
எந்தக் கபடமும் இல்லாச் சிரிப்பில்
மின்னல் போல தோன்றி மறையலாம்

அதனின் நீட்சி
உதட்டில் மெல்லிய சிரிப்பாய்,
வயிற்றை உப்பி
ஆழவிட்டிடும் மூச்சாய் அமையலாம்
சிலர்க்கு
கண்களில் லேசாய் ஈரம் கசியலாம்
நொடிகள் வானில்
நிலைக்குத்தியும் கூட
நிற்கலாம் விழிகள்
முடிந்தால்
சமூக இணையத் தளங்களில்
இருப்பை
தட்டிப் பார்க்கவும் செய்யலாம்
கண்டால்
எங்கே இப்ப? சுகமா?, கேட்க
தயங்கி விரல்கள்
தளர்ந்து பின்வாங்கலாம்
பொம்மை கேட்டுக் குழந்தை அழைக்க
அந்த வேளையும் மறையலாம்
ஆனால்

யாருமே இன்றி
ஆழ்ந்த வெறுமையாய்
அகன்று கிடக்கும் வெளியிடை
சட்டென
எங்கோ இருந்து பறந்து சென்றிடும்
ஒற்றைப் பறவை, சூன்ய வெளியை
உயிர்ப்புடைக் கவியாய் மாற்றுதல் போல

எந்தக் கண்டத் தகட்டின் மூலையில்
இருப்பினும் மண்ணை
தழுவிப் புணர முன்விளையாட்டை
மழை செய்திடும் போது
எழுந்திடும் கலவி வாசம் ஊரின்
மண் மணந்தன்னை
உருகும் படியாய் நாசியில்
மீண்டும் ஊட்டுதல் போல

எங்கே இருக்கிறாய் தெரியாதிருப்பினும்
எந்தத் தொடர்புமே இல்லாதிருப்பினும்
இத்தனை நாட்களாய் நினையாதிருப்பினும்
ஏதோ கணத்தில்
உந்தன் நினைவு எங்கோ யார்க்கோ
எழலாம், நீயும்
உயிரின் மனசால் நொடிகளெனினும்
நினைக்கப்படலாம்
ஆதலால்
ஒருவரிலேனும் ஒருகணம் தன்னும்
உருகும் நினைவாய்ப் பழகி
விடைபெறு
எதிர்வரும் சாவெனல்
ஓர் வெறுங்கனவே..

Sunday 1 December 2013

முகிலாய் நினைவும்..

சாளரத்தால் அறைக்குள் குதித்த சூரியன்
பல்லி போல
சுவரில் ஊர்ந்து செல்கிறான்

மாலைவானில் பார்த்த மேகங்களை
காலைவானில் காணக்கிடைக்கவில்லை
நேற்றுவரை என்னோடிருந்தவர்களை
அது நினைவுறுத்துகிறது

இன்று புதிதாய் எத்தனை மேகங்கள்!
எவையும் என்னை அறியா
கேள்வியுறல் அறிதலாகா
இன்னும் சில நாளி இருக்க முடிந்தால்
ஒரு சிரிப்பு, சில வார்த்தை
பயணத்தில் வேகமாய்க் கடக்கும்
நிலக்காட்சிபோல் துளியெனினும்
விழிக்குள் இவற்றின் ஞாபகவிம்பம்
விழுந்து விடலாம்

இன்றிருளும் வரைதான்
இது கூட,
அண்ணாந்த விழிகளும்
அசையும் முகில்களும்
அப்படியே நாளை
அவை வேறு

வாழும் காலத்தில் வாழ்ந்தவர்கள்
வாழும் வரைதான் நினைவு

ஆயின்
வரலாற்றினூடுணர்தலென்றால்..
பிணத்தைப் புணர்தல்
அல்லது
கோமா உடலுடன் முன்விளையாட்டு

இதனாற் தான்
நாலுபேரின்று நையாண்டி செய்யினும்
அவர்களோடொன்றாய்
களத்தில் கேட்ட கானங்களை
வெறிச்சோடிப் போயிருக்கும்
இற்றை வேளையில்
கேட்க நேருகின்ற போது

எச்சில் விழுங்க முடியாமல்
தொண்டை இறுகியும்
கண்ணை இமைக்க முடியாமல்
குளமாய் பெருகியும்
நெஞ்சுக்குள் ஓடும் நரம்புகளெல்லாம்
அறுந்த பல்லிவாலாய்
ஆகி விடுகிறது..

Saturday 26 October 2013

இன்றும் கூட இப்படியாய்..

தொடுவானத் தொலைவெனினும்
தொட்டிடலாம் என்றெண்ணி
காத்திருந்தும் இன்றுவரை
கையெட்டாக் கலக்கத்தில்
கடலில் மூழ்குகின்ற 
கடைசிக் கணச் சூரியனாய்
கண்கள்

விடைபெறுமந்தக் கண 
வேளையிலும் எற்றியெற்றி
அடிக்கின்ற அலைகளாய்
அவள் நினைவு, மூச்சடைத்து

வெடித்த நெஞ்சிருந்து
விசிறுண்ட குருதியின்
படிவாய் ஆங்காங்கே
பரவி முகிற் தசைகள்
வாழ்ந்திருந்த காதலின்
வழித் தடமாயும் தான்,

நேத்திரத்துள் நிழலாய்
நினைவினுரு கரைகையிலே
போர்த்துறங்கிப் போயிற்று அந்தி
சோர்த்த படி
வெறித்த என் மனம் போல்
வீழ்கிறது இன்றிரவு..

எதுவுமற்ற காலை..

எதற்கும் வணங்காத காலமொன்று
எமக்கும் இருந்தது

கடல் நோக்கிப் பறந்து செல்லும்
வெள்ளைப் பறவையொன்று
கலங்கி மறைவதைப் போல
மூன்று தசாப்தத்தின் கனவு
ஒருநாள் காலையில் பார்த்த போது
கந்தகப்புகையைக் காவிக்கொண்டு
முகிலாகிக் கலைந்து போனது

உடைந்தழுத படி
ஒருக்களித்துப் படுத்துவிட்டு
மூக்கை உறிஞ்சிக்கொண்டு
மறுபக்கம் திரும்பிய போது
ஆண்டுகள் ஓடிப்போயிருந்தன

கொடுத்து வைத்தவர்கள்
அமரர்,மாவீரரென ஆக
ஊழ்வினை முடியாதோர்
உழல உயிர்  பிழைத்தது
அப்போது தான் தெரியவந்தது

குண்டுகளை வானமன்று
குடையாகப் பிடித்திருந்தும்
தன்மான வாழ்வின்
தன்னிறைவில் இருந்ததனை
எப்படித்தான் நாம் மறந்து போனோம்?

இப்போதில்
கழுத்தை நெரித்த கவட்டுக்குள்
கன்னம் தேய்த்தல் தான்
இராஜதந்திரமெனும்
பொரிமாவை மெச்சும்
பொக்கை வாய்ச்சியின் காலம்
பாத்தீனியமாய் எம்முன்னே
படர்கிறது

மறதியும் காலமும்
மனுச வழிக்காவி தான்
அதற்காக
அறணையாய் எப்படி ஆனோம் நாம்?

வீங்கிச் சிவந்த கண்ணும்
வீறிட்டழுத வாயும்
ஏங்கிய மனமுமாய் நாளை
எழுந்து நாம் பார்க்கும் போது
தேங்கியிருக்குமோ எம்
தீராத கனவு கொஞ்சம்?, இல்லை
ஓங்கி அரசதையும் மேவி
உயர வளர்ந்திருக்கு மோடா?


Saturday 12 October 2013

காலத் தூரிகை

ஊர் நினைவில் மிதப்பதற்கு
உயிர் விரும்பிக் கேட்கிறது
யார் முகங்கள், எவர் நினைவு
எழுந்து வரும்!, என அறிய
ஆசை தான் எனக்கும்,
ஆனாலும் உடனடியாய்
யோசித்த மாத்திரத்தில்
யுகத்தை முன் கொணர்தலெலாம்
வாய்ப்பில்லை, எனினுமுயிர்
வாய்விட்டுக் கேட்ட பின்னால்
ஏய்த்து, இழுத்தடித்தல்
எனக்கியலாதெனச் சொல்ல

உதட்டைக் கடித்து
ஓரமாய் விழி உருட்டி
பதட்டமின்றி மனத்தாள்
பாதையொன்றை வரைந்தாள்
ஆளற்று நீண்டு செலும்
அப்பாதை முடிவினிலே
நீலக் கடல் அகன்று
நிலம் தொட்டுப் புரள்கிறது
வானிலிருந்தெடுத்துத் தான்
வண்ணத்தைச் சேர்த்திருப்பாள்

எழுந்துவரும் என்னுடைய
ஏக்கப் பெருமூச்சை
இழுத்தெறிந்தாள் கடல் மேலே!
ஏதோ சில வெண்கோடாய்
இதன் படிமம், அப்போதே
ஆவியாய் கடல் கொஞ்சம்
அசைந்தெழுந்து வான் முட்ட
காவியத்தின் அதியுச்சக்
கட்டம் போல் விழியிருந்து
அஞ்சனத்தை எடுத்து
அப்பி விட்டாள் முகில்மேலே
பஞ்சு வண்ண முகில்
பாரமாகிக் கருக்கட்டி
பன்னீர்க் குடமுடைந்து
பளபளக்கும் துளிகளெந்தன்
கண்ணீரோடு சேர்ந்தென்
கன்னத்தில் உருளுகையில்

ஒவ்வொரு துளிகளிலும்
ஊரும், உறவுகளும்
எவ்வளவு இயல்பாக
என் முன்னே!, உயிரென்னை
கட்டி அணைத்துக்
கை இறுகப் பற்றியது
விட்டுன்னைச் செல்லேனென
விம்மியது, பூவுலகின்
காலக் கரைப்பானிந்தக்
களிமழைதான் காணென்று
கண்ணைத் துடைத்தென்னைக்
கட்டியது, காதோரம்

மழையன் பாடல்கள்
மண்ணீர மணத்தோடு
அளைந்தென்னைச் செல்கிறது
அள்ளி..

Tuesday 8 October 2013

அனுக்கிரகம்..

அப்படி எதைத்தான் நீ
அகல இமை விரித்து
இப்படி உன்னிப்பாய்
எதையோ முன் தேடுவதாய்
கண்கரையில் ஈரம்
கசிந்தபடி காணுகின்றாய்?

வெண்பறவை அழகாய்
விரித்தடிக்கும் சிறகுகளில்
கண் தொற்றிக்கொண்டு
கடக்கிறதோ கடல்களினை!

வீணையை வானம்பாடி
மீட்டினால் எழுந்துவரும்
கானந்தான் ஏதுமுந்தன்
காதுகளிற் கேட்கிறதோ!

இதழாற் காதுமடல்
இழுத்துக் கடித்தபடி
பிடரிக்குள் விரலூரும்
பெருஞ்சுகத்தின் கிறுக்கத்தில்
கண்ணிருட்டிப் போவது போல்
காய்கின்ற அந்தியிலே
ஊறுகின்ற நினைவுகள் தான்
உனைக்கரைத்து விட்டதுவா!

கடற்தொடுப்பின் கரையிலுள்ள
கற்தூணில் மெல்லமெல்ல
உடற்பாரம் முதுகினிலே
ஊன்றி, தேய்த்தபடி
குந்திவிட்டாய் வினாக்குறியாய்
கூனி, கொதித்தெரியும்
எந்த வலியெனினும்
இடியாமல் அதன் சுவையை
அனுபவித்துச் சுகிக்கின்ற
அனுக்கிரகம் உனக்குளது
தனித்துப் போனாயெனும்
தடுமாற்றம் ஏதுமில்லை

யாருமற்ற கடற்கரையும்
அரையிருளும்,குளிர்காற்றும்
தூரத்தில் எங்கிருந்தோ
துமிக்கின்ற ஓரிசையும்
தாழ்ந்துயர்ந்து மிதந்து செலும்
தனித்தனிப் பறவைகளும்
வாழ்வுக்குப் போதாதா
வழி நெடுக, கை நிறைய
கட்டியணை முழங்காலை
கண் கலங்கும், பிறகென்ன
அழகான தனிமையடா
அப்படியே செத்து விடு..

Sunday 29 September 2013

இறக்கி விடு என்னை..

களைத்துப் போய் விட்டேன்
காலச் சாரதியே
என் மண்ணைப் பார்க்க முடிந்த
எங்கேனுமோர் திருப்பத்தில்
என்னை இறக்கி விடு

நேற்றெனும் நினைவு கலங்கலாய்,
இன்று இதோ கடந்து போகிறது
நாளை தெரியாது
இல்லாமைப் பெருங்கனத்தை
இருப்பாய்ச் சுமந்தபடி
எவ்வளவு தூரந்தான்..
இறக்கி விடு

ஓர்மம் என்னவாயிற்றென்பதுவாய்
உயர்த்தாதே புருவத்தை!
இரும்பு முட்களேறும் இருளறை,
வதையே சிதைகின்ற வதை,
ஆளில்லாத வெளி,
ஆறுதற்குத் தோள் சாய
உறவில்லாத ஊர்,
பிரிவெனும் பெருவலியினாற் பின்னிய
மின்சார நாற்காலி, அதிற் தினமும்
உயரழுத்த மின்சாரம் பாய்ச்சும்
கன்றினதும் பசுவினதும் கண்ணீர்
இப்படியோர் பாதை வழி
எனையேற்றி வந்து விட்டு
எப்படி மனம் வந்து
எனைப்பார்த்து ஓர்மமென்பாய்?
குலுக்கிய குலுக்கில்
குடல் பிரண்டு போயிற்று
இனியுமுன் வாகனத்தில்
இயலாது, இறக்கி விடு

எதுவுமே இல்லாமற் போகலாம்
இறுதியிற் போய்ச் சாய்கின்ற மரத்தில்
நிழலிருக்காதென்பதைத்தான்
நினைப்பதற்கே முடியவில்லை
அப்படியே முழுவதுமாய் வழித்தெடுத்து
இரெண்டு கைகளிலும் அள்ளி
உயிரூற்றி வளர்த்த மரமது
மலைபோற் தெரிந்த அதன் கனவை
குடைந்துள் நுளைகையில்
அது தொடுவானமாயிற்று

கடலதை விழுங்கியதாய்
கண்ணுக்குத் தெரிந்தாலும்
உடைத்துக் கொடுத்தது
உப கண்டம் தான்
ஒருநாளில்லை ஒருநாள்
தாகத்தின் தகிப்புத் தாங்காமல்
உபகண்டம் உடைய
உதிக்குமெம் கனவு
அருவமாய் இருந்தேனும்
அதையணைப்பேன், ஆதலால்
இப்போதைக்கென்னை
என் மண்ணிலிறக்கி விடு

குருதி வடியுமெம் கனவின்
காயத்துக்கு
கை மருந்துக் கவிதையால்
கட்டுப் போட்டு விட்டு
எட்டப் போய்விடுகிறேன்
போதுமினி, விரைவாக
இறக்கி விடு என்னை
இனிமேலும் இயலாது..

Thursday 26 September 2013

வாழ மறுக்கப்பட்டவர்கள்..

அட்லான்டிக் பெருங்கடலை நோக்கி
விரைந்துகொண்டிருக்கும்
யாருமற்ற தொடுகடல் நீரோட்டக்கரையில்
இளமை அவனிடமிருந்து
விடைபெற்றுச் செல்கிறது

எந்தக் கண்கசக்கலும் இன்றி
ஒரு தலையசைப்போடு
வழக்கம் போலவே
வழியனுப்பி வைக்கிறது
முதிர் மனது

உன்னது மட்டும் தானா?
என்னிளமையும் கனவுகளும் கூட
இந்தக் கரையிற்தானே களவாடப்பட்டதென
இன்றவள் அங்கிருந்து அழக்கூடும்
இல்லை
இப்போதெல்லாம் அவள் அழுவதில்லை
இறுகி, ஒடுங்கி, இயல்பாகி
பழகிப் போயிருக்கலாம் அவளுக்கும்

இத்தனை காலமாயும் இன்னுமேனென
நீங்கள் எண்ணலாம்
வெற்றி மமதையில் ஆர்ப்பரிக்கும்
எகத்தாள அலைகளின் இரைச்சற் காதுகளுக்கு
நீதி வேண்டும் குரல்கள்
ஒருபோதுமே கேட்பதில்லை

இம்மியளவும் இடைவெளியின்றி
கடல்,நிலத்தால் கட்டி அணைத்தபடி
ஒட்டியிருக்கிறது பூமி
இடைவந்த அதிகாரமும், பலமும்
தாம் நினைத்தபடி வேலிகளைத்
தாட்டு நட
ஏதிலிகளாய் ஆக்கப்பட்ட
எத்தனையோ லெட்சம் பேரின்
படிமமாய் அவளும், அவனும்

நாளை
இவர்கள் குழந்தையும்
பெயரறியாக் கரையொன்றிலிருந்து
இது போலொன்றை
எழுதுதல் கூடும்..

Saturday 17 August 2013

கண்டற்காடு பேசுகிறேன்..

ஊரினின் றொதுங்கி
ஒரு சிறிய காடாக
ஈரலிப்பாய் நிலப்பரப்பை
இதமாக வைத்தபடி
எத்தனையோ உயிர்க்கரணாய்
இருந்தோம், அப்போதில்
எத்தனை பேர் உணர்ந்திருந்தார்
எம்மாற்தானித் தேசம்
சத்துக் குறையாத 
சதைப் பிடிப்பாய் இருக்குதென்று.?
இருக்கும் போதுங்களுக்கு
எமதருமை புரியவில்லை
வருந்துகிறீர் இப்போது
வாய்விட்டு, வருந்துங்கள்

தேசத்தின் சமநிலையும்
தேங்கி இன்னும் மீந்திருக்கும்
வாசம் மிகுந்த மண்ணின்
வளமும், எம்மாற் தான்
காக்கப்பட்டதென்ற 
கதையை, வரலாறை
ஏக்கத்தோடு நாளை
எழுந்துவரும் குழந்தைகட்கு
எப்படி வளச் செழிப்பாய்
இருந்தம், எதனால் நாம்
இப்படி இன்றைக்கு
இருண்டு வறண்டெரிந்து
தப்பான கருந்துளையுள்
தவறி விழுந்தமென்றும்
எப்படி இதை நாம்
இனித் தாண்டி எழுவதென்றும் 
நிலைத்து நிற்கும் பசுமையெனும்
நிச வழியைக் காட்டுங்கள்

ஈர நிலம் இல்லையெனில்
எந் நிலமும் விடியாது
ஈர நிலம் வேண்டுமெனில்
எம்மிருப்பு வேண்டும், நீர்
சோரம் போயெம்மைச் 
சுரண்டி, தரிசாக்கி
நீரில்லா மண்ணாக்க 
நினைத்தால், உம் வாயில்
மண் மாரி பொழிந்து தான்
மரிப்பீர், விழியுங்கள்

எஞ்சிப் போய் ஆங்காங்கே
இருக்கின்ற எமைக்காத்து
அஞ்சாத தேச மொன்றை
அமையுங்கள், என்றைக்கும்
கண்டற் காடே தேசத்தின்
காப்பு.

Tuesday 16 July 2013

உயிர் காவும் பாடல்..

தலையணையில் மெல்லத்
தலை திருப்பக் காதோரம்
இலை வருடிச் செல்வது போல்
இதமான பாடலொன்று

இங்கேயிதை ஒலிபரப்ப
எவருமில்லை, வாய்ப்புமில்லை
எங்கிருந்தோ சாளரத்தால்
இறங்கி வரும் காற்றோடு
கால், இடுப்பு, தோள் தடவிக்
காதோரம் வழிகிறது,

கிளுவங்குளை நசிந்த
மணமும், நான் விரும்பும்
ஆட்டுப்பால் வாசனையும்
அதனோடு,

நினைவுக்கு வாசமுண்டோ?
நிசந்தானோ!, ஊரில் நான்
வீட்டுப் படியின் மேல்
இருந்தபடி வானொலியில்
கேட்ட பாடலும்
கிடந்துருண்ட வாசனையும்
நாட்டை வீட்டு வேறு ஒரு
நாட்டுக்கு, இடையினிலே
இத்துணை ஆண்டுகளும் தாண்டி,
இருக்குமோ! ஒருவேளை
சித்தம் கலங்கி உள்ளே
சிதைந்து காலமெனும்
வித்தைகளைக் கடந்து
வெளியில் மிதக்கிறதோ!

ஒருக்களித்து மறுபக்கம்
உடல் பிரட்டிப் படுக்கின்றேன்
வருகிறது மீண்டும் அதே பாடல்
வாசனையும், இப்போது
ஆளைச் சுழித்திழுக்கும்
ஆழிபோல் விழியிரெண்டும்
குழந்தையாய் என்னைக்
குழைய வைத்த உதடுகளும்
இரெட்டை நாடியும்
எழுந்திறங்கும் மார்பெடுப்பும்
காட்சியாய் இதனோடு
கலந்தபடி, எனை மறந்து
கொடுப்புக்குள் சிரித்தபடி
குப்புறப் படுக்கின்றேன்
உள்ளே நானில்லை
உடல் மட்டும் கிடக்கிறது
அள்ளியெனை சுமந்து
செல்கிறது அப்பாடல்

கூடு விட்டுக் கூட்டுக்கு
சித்தரன்று புகுந்தாராம்
நாடு விட்டு நாட்டுக்குள்
நானுமிங்கே புகுகின்றேன்
பாடல் காலத்தின்
பாதைகளைத் திறந்து விட
ஓடி நான் வந்து விட்டேன்
உயிர் வாழும் தெருவிற்கே..























Saturday 6 July 2013

உனக்கு நான் அல்லது எனக்கு நீ

எதுவுமே புரிந்திருக்கவில்லை
எல்லோரும் கூடி அழ
அவனும் சேர்ந்தழுதான்

கண்களை இறுக்கமாக மூடி
ஆடாமல் அசையாமல்
பெட்டிக்குள் அடங்கிப் போய்,
எப்படி அவனிதனை எடுத்துக்கொள்வான்?

முன்னைய நாட்களைப் போலவே
தன்னை
கண்ணாமூச்சியின் பின்
கட்டி அணைப்பாயென்றெண்ணுவானா?
அடிக்கடி ஓடி வந்து
உற்றுப் பார்க்கிறான் உன் முகத்தை
சிரிக்கிறான், அழுகிறான், ஓடித்திரிகிறான்

ஊர் அவனைப் பார்த்தே
ஒப்பாரி வைக்கிறது
ஒன்றும் புரியவில்லை அவனுக்கு
உடைந்தழும் தாயின் சூட்டில் ஒதுங்கி
பிதுங்க முழிக்கிறான்

சுவரில்
நீ தொங்கும் காரணத்தை
அவனறிகின்ற காலத்தில்
இளைத்துப் போனதொரு
மங்கிய கனவாய்
அவனுக்கு நீ, அவ்வளவே!

விடுதலைக்காக நானும்
வேலைக்காக நீயுமாய்
நீட்டிய துப்பாக்கி
உமிழ்ந்த குண்டுகள்
எம்மைத் துளையிட்டு
வீழ்த்திவிட்ட பின்னர்
இப்படியாகத்தான்
என் வீட்டில் என் மகனும்
உன் வீட்டில் உன் மகனும்..
-
விம்மி அழுவது
வீரனுக்கழகல்ல எனினும்
அம்மி அல்லடா
ஆழ் மனசு..










Wednesday 26 June 2013

அந்தராத்மா..

எல்லாம் முடிந்துவிட்டதென்று
தெரிந்த பின்னர்
இத்தனை வருடப் போராட்டத்தின்
இறுதி ஆசையாக
குண்டுகளால் துளைக்கப்பட்டு
இந்த மண்ணில்
தன்னுடலம் விழும் போது
வாழ்ந்த மண்ணை
இரு கைகளுக்குள்ளும்
ஒவ்வொரு பிடி இறுகப்பற்றிய படியும்
அகலக் கண் விரித்து
ஆசை தீர
தன் தேசத்தின் வானத்தைப் பார்த்தபடியும்
வீரச்சாவு நிகழ
அவன் விரும்பியிருந்தான்

ஆனால்
கைகள் பின்புறமாகவும்
கண்கள் துணியினாலும்
இறுக்கமாகக் கட்டப்பட்ட படி
கடைசி வரை
அவன் ஆசைகள் எதுவும்
நடக்கவே இல்லை..




தன்னிலை அறுதல்..

விலங்கு, இருட்டறை
உயிர் குதறும் வதை
அவனால் தாங்க முடிந்தது

ரோந்துக் கப்பல், சுடுகலன்,சிதைந்த உடல்
சிதையாத மனம்
கடலைத் தாண்டி இருந்தான்

மீண்டும் விலங்கு, வதை, சிறை
உயிரில் தினவு
கண்டம் கடந்தான்

அடர்ந்த பனி, அறியாத தேசம்
அடரிருட் சிறை, எப்படித்தானோ?
ஆனால் எழுந்து வந்தான்

தனித்த தீவு, முடியாத் தடுப்பு
நீளும் காலம், தொடரும் பிரிவு
நீண்ட தனிமை ஆமாம் மிக நீண்ட,
வெறுமையுந்தான்.

எதிலும் தடுமாற்றம்
எழுத்துகள் மறந்து போகிறது
கத்தியைப் பார்த்தால்
கழுத்தை அறுக்கவும்
கடலைப் பார்த்தால்
பாய்ந்து குதிக்கவும்
ஒருவேளை
மனதும் சிதையத் தொடங்கி இருக்கலாம்
எவ்வளவைக் கடந்திருந்தாலென்ன
திடீரென ஒருநாள் நிகழலாம்
தன்னிலை அறுந்து
தற்கொலை..







Tuesday 11 June 2013

வேண்டாம் போகாதே..

இறந்தே தான் போனாலும்
ஏனென்று கேட்பதற்கு
மருந்துக்கும் கூட ஒரு
மனிதரில்லா இத்தீவின்
எங்கோ ஓர் மூலையில்
இருட்டறையில் உன்னுடைய
அங்கங்களைப் புனைந்து
அளைந்தளைந்துயிர் கொடுத்து
வாழ்ந்திருந்த காலத்தை
வாழுகிறேன், இத்தருணம்
விடைபெற்றுச் செல்லாதே
வேண்டாம் போகாதே

அடரிருளை மெளனம்
அணைத்துக் குலவுகையில்
தடவியபடி மார்பில்
தவழ்ந்து முடிகோதும்
உன்னுடைய விரல்களுக்குள்
ஊர்ந்து, விரல் கோர்த்து
என்னுடைய விழிகளினை
ஏறிச்செருக வைக்க
என்னாலே முடிகின்ற
இவ்வேளை எனை விட்டு
விடைபெற்றுச் செல்லாதே
வேண்டாம் போகாதே

காதின் மடற்கரையைக்
கவ்வியுன் இதழிழுக்க
மோதி வெள்ளம் போல்
மூண்டுவரும் கூச்சமொன்றில்
ஆதிக் காதலின்
அடையுள்ளிருந்து சொட்டும்
வேதியற் தேனின்
வெப்பத்தில் மயிர்க்கால்கள்
ஓதி விட்டவை போல்
உடல் விறைத்து எழுந்து நிற்க
பாதியிலே உதறியெனைப்
பரிதவிக்க வைத்து விட்டு
விடைபெற்றுச் செல்லாதே
வேண்டாம் போகாதே

அரூபக் காலத்தை
அறுத்தறுத்து உட்குடைந்து
சொரூபத்தைக் கண்டடைந்தேன்
சுகவலியே! என்னுடைய
விழிக்கடலில் உன்னுடைய
விம்பத்தை நீந்தவைக்க
வழிவேறறியேனென் வாழ்வே!
என் மூச்சு
உன்மூச்சை உரைபெயர்க்கும்
உச்சத்தில் எனை நீங்கி
விடைபெற்றுச் செல்லாதே
வேண்டாம் போகாதே..


















Sunday 31 March 2013

கனவு காத்திருக்கிறது..

காலத்தை மீறிய
கனவொன்றும் இல்லையிது
வாழ முடியாததொன்றை
வாழ்வதற்கும் எண்ணவில்லை
ஆசைகள் கூட அந்தளவு பெரியதல்ல
நேசிக்கும் ஓரிரெண்டு
நெருங்கி நிற்கும் உறவோடு
வாசமிகு என் மண்ணில் வாழ்தல்
வாழ்தலென்றால்

மாரில் மகனும்
மறு தோளில் மனைவியுமாய்
ஈரம் சொரிகின்ற காற்றில்
எமை மறந்து
ஆழ்ந்துறங்கும் போதில்
ஆரேனும் கதவினிலே
தட்டுகின்ற ஒலியென்னைத்
தட்டுவதற்கல்ல, மாறாய்
கட்டிக் கை குலுக்க
என எண்ணும் ஓர் வாழ்வு!

பனங்கூடல் நீக்கலிடை
பழம் போலத் தொங்குகின்ற
மனதின் பிரதிமையாய்
மதி ஒழுகும் ராத்திரியில்
என் தேசப்படலொன்றை
எடுப்பாய் பெருங்குரலில்
கண்ணாலே மகிழ்வீரம்
கசிய, வீதியிலே
பாடிச் செல்கின்ற
பலனுள்ள ஓர் வாழ்வு!

கண் முன்னே கொத்தாகக்
கருகி விட்ட எம் மக்கள்
மண்ணுக்காய்த் தம்முயிரின்
மார்பு தந்து போனவர்கள்
இன்னும் எங்கெங்கோ
எமக்காக வாழ்ந்தவரின்
ஆத்மாவின் தாகத்தை
அனுட்டிக்கும் தினமொன்றில்
எம் மண்ணின் நினைவிடத்தில்
எல்லோரும் கூடி நின்று
ஆன்ம விளக்கேற்றி
அன்பொளிர்க்கும் ஓர் வாழ்வு!

தேகம் சிலிர்க்க வைக்கும்
தேசியக் கொடி ஏற
ஆகுதியாய்த் தம்மை
ஆக்கியோர் உயிரிருந்து
சொல்லெடுத்து வனைந்த எம்
சுதந்திர கீதத்தை
உள்ளன்பால் உணர்ந்து
ஒருமித்து எம் மக்கள்
இதயத்தால் பாடுகின்ற
எழுச்சிமிக்க ஓர் வாழ்வு!

வாழ்வோட இயல்பாக
வலிய விதி வந்தென்னை
சூழ்ந்தழைத்துச் செல்கையிலே
சுகமாக என் மூச்சை
ஆழ்ந்திழுத்து என் மண் மேல்
ஆறுதலாய் விடும் போது
வாழ்ந்ததன் அடையாளமாய்
வட்டச் சிறு குழியாய்
இறுதி மூச்சுப் பட்டென் மண்
இங்குமங்கும் அரங்குகின்ற
அசைவுக் காட்சியை நான்
அனுபவித்துப் பார்த்தபடி
கண்ணை மூடுகின்ற
கலாதீதம் பெறு வாழ்வு!


இவ்வளவு தான் கேட்டேன்
இன்றுவரை நல்லூரான்
எவ்வளவு கெஞ்சியும் இரங்கவில்லை
என் செய்வேன்..!







Wednesday 6 March 2013

தேம்பும் உயிரின் தினவு..



இதமான கனவுகளுடன் அழகொழுக
என் காலைகள் விடிவதாயும்
ஏதோ ஓர் தீவின் மூலையில்
யாரென்றே தெரியாதவர்களுடன்
வாழப் பணிக்கப்பட்ட இந்த அறைதான்
மகிழ்வு தரும் என்னுடைய வீடென்றும்
இப்போதெல்லாம் நான்
நம்பத் தொடங்கி இருக்கிறேன்
அப்பா என்பவர்
ஸ்கைப்பில் மட்டுமே வர முடியுமென
என் மகன் நம்பி இருப்பதைப் போல

குத்தும் குளிரம்புகளை ஏந்தியபடி
அட்லாண்டிக் பெருங்கடலைத் தேடி
ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில்
மிதந்துசெல்கின்ற பந்தொன்றைக் காட்டி
நாளை மாலை
மலைக்கு அப்பால் உள்ள மறுகரையில்
நாமிதனை எடுக்கலாமென
நம்பிக்கையுடன் சிறுவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
ஜோசியன் சொன்னபடி
இந்த ஐப்பசிக்குள் எப்படியும்
தன் மகனுக்கு விடுதலை கிடைத்துவிடுமென
அம்மா சொல்லிக் கொண்டிருப்பதைப் போல


மாற்றாடை இல்லாவிட்டாலும்
மனசுடையாமல்
உடற் சூட்டில் உலர்ந்து விடுமென்ற அனுபவத்தில்
மழையில் நனைந்து போன தன் சேலையை
உதறி உடுத்துக் கொண்டு
ஒருக்களித்துப் படுத்திருக்கும்
ஓர் ஏழைப் பெண்ணைப் போல
நனைந்து போய்க்கிடக்கும்
நள்ளிரவு வீதியின் நடைபாதை
நிலச் சூட்டில் உறங்கிக் கிடக்கிறது
களைத்த நினைவு
கண் செருகத் தொடங்க
ஒற்றைக் காலை
சுவரில் ஊன்றிக் கொண்டு
தேம்பும் உயிரை
தேற்றிக்கொண்டிருக்கும் என் காதில்
யாரோ சொல்கிறார்கள்

‘வதைப்பவனுக்கு ஆன்மா இருளும்
வதைபடுபவனுக்கே ஆன்மா விழிக்கும்’



அன்பெனும் தனிமை..


மஞ்சட்பூச் சணல்வயலின்
மத்தியிலே தனியாக
எஞ்சிப் போய் நிற்கும்
இருட் பச்சை மரம் போல,
வெட்டிரும்பாற் பிளக்கேலா
வீரியப்பாறையினை
தட்டிப் பிளந்துவிட்டுத்
தனியாக நிமிர்வோடு
எட்டிப் பார்க்கின்ற
இளங்குருத்துத் தளிர்போல
தனித்துவமாய் வாழ் பழகும்
தளராத மனமொன்றை
உனையே அறியாமல்
உள் அறையும் உன் தனிமை

தனிமையெனும் ஊற்றிற் தான்
தவிப்புயிர்க்கும் அன்பூறும்
தனிமையெனும் காற்றிற் தான்
தான் பறந்து தாமாகும்
தனிமையெனும் வானிற் தான்
தனையறியும் வெளி தோன்றும்
தனிமையெனும் தீயிற் தான்
தனைப் புடமாய்த் தான் போடும்
தனிமையெனும் நிலம் மீதே
தன்னலங்கள் அற்ற விதை
இனியநறு மணத்தோடு
எழும், இவ்வுலகில்

தனிமையெனும் தேன் சொட்டத்
தவம் செய்த ஒருவனுக்கே
புனிதமாய் அன்பு வரம்
பூக்கும், ஏனெனிலோ
அவனடையும் இன்பம்
ஆர் கொடுத்தும் வந்ததல்ல
அவனாய் அளைந்தளைந்து
ஆக்கியது, ஆதலினால்
எவர் வந்து,போனாலும்
இவன் மனது ஒன்றே தான்
அவர் வந்து அணைப்பதற்கும்
அகல்வதற்கும் சுதந்திரத்தை
இவன் தனிமை கடலாய்
இறைத்து முன்னே விட்டுளது

எவருமிவன் அடிமையில்லை
இவனெவர்க்கும் அடிமையில்லை
என்கின்ற மெய்ம்மையெனும்
ஏகாந்தப் பெருவெளியில்
கண் தின்னும் காட்சிகளை
கவிதைகளில் தைத்து விட்டு
வண்ணக் கனவுகளால்
வார்த்துள்ள பாதைகளில்
எண்ணம் செயலறுந்த
இருமையற்ற நிலை கூட
விண்ணாகி விரியும்
வெளியாகிப் போய் விட்டான்..


Wednesday 23 January 2013

கஞ்சாபோலாக்கும் கனநினைவு..

கஞ்சா நுகர்ந்த மனம்
காற்றாகி விண்ணேறி
தஞ்சம் அடைகின்ற
தாலாட்டும் மெல்லிசை போல்
பிஞ்சு பிடித்து வளர்
பெரு நினைவுச் சாகரமோ
கெஞ்சி உன் மடியிற்
கிடப்பதற்குக் கேக்குதடி

அழுக்கேதும் அண்டாத
ஆழ்மனது வீணையினில்
வழுக்கி வரும் உன்னுடைய
வலி போக்கும் விரல் மேவ
ஆனந்தக் கூத்தாடும்
ஆவியதன் அக்கணத்தீ
ஏனிந்த வாழ் முழுதும்
எனைத்தொடர வில்லையென
ஞானத்தில் தேடி
நனையுதடி மனக்கண்கள்

பூவை நினைத்த படி
பூட்டினால் கண்ணுக்குள்
பூந்தோட்டம் ஒயிலாகப்
புன்னகைத்து நிற்பதுவும்

காட்டை நினைத்தால்
காட்டோடு பச்சை மணம்
கூட்டாகக் கண் மூக்கில்
கொளித்துப்போய்த் தோன்றுவதும்

ஆற்றை நினைத்தாலோ
அவதார குணம் வந்து
தோற்றுவித்த சிவனின்
தொடர்ச்சியாய் தலைமுழுதும்
மலையும், சுனையும்
மதமதென்ற பத ஆறும்
நிலையொன்றை உணராத
நிலையும், உடற்பொறியில்
அலையின் தத்தளிப்பும்
ஆழ நீரோட்டமதும்
கலந்து புதிதாயோர்
காவ்ய நிலை தோன்றுவதும்

கஞ்சா வரைகின்ற
காட்சிகளால் மட்டுமல்ல
என் சா வரை நீளும்
எனையுடையாள் நினைவிலும் தான்..




Sunday 20 January 2013

துகளாய் ஆகிடினும் துடிப்பேன்..


அண்டத்தில் உள்ளது தான்
பிண்டத்தில் உண்டென்றால்
கண்டத் தகடிரெண்டு
கலந்திணைந்த பிதிர்வு வழி
உண்டாகி வந்தேன் நான்
ஒரு மலையாய், எவ்விடிக்கும்
கண்ணைக் கசக்காத
கரும்பாறை நெஞ்சோடு,
துன்பமென்ற சொல்லென்னைத்
தொட்டுவிட ஒண்ணாமல்
என் பாட்டிலெழுந்துயர்ந்தேன்
எதற்கும் வளையாமல்,

எத்தனை பேரென்னை
இடித்தார்கள்,இடிந்தேனா
குத்துகின்ற உளிகளால்
குடைந்தார்கள், குமைந்தேனா
செத்துப்போ என்றென்னைச்
சிதைத்தார்கள், சிதைந்தேனா
சத்தால் நிறைந்த என்
சாகாவர வித்து
எத்தனையைத் தாண்டி
இடியாமல் வந்ததடி!
இத்தனையும் பார்த்து
எழுந்த வெப்பியாரத்தில்
காலம் வாயுறிஞ்சிக்
கண் வைக்க அதனுடைய
கோலமாய் நீ வந்தாய்,
கொஞ்சங் கொஞ்சமாயெந்தன்
உள்ளீட்டை அதிற் கசியும்
உயிரீரம் தனை நுகர்ந்தாய்
அள்ளிக் குடித்தாயென்
அத்தனையும், சில ஆண்டில்
வறள் நிலமாய் வந்த நீ
வளம் கொளிக்கும் நிலமானாய்

கல்லாய் இருந்த மனம்
கனிந்த பழமான நாளில்
பல்லாள் அடித்தும்
பதறாத என்னை நீ
சொல்லால் அடித்து வீழ்த்திச்
சொல்லாமற் போய் விட்டாய்
வில்லாளால் வீழ்த்தேலா
வீரத்தை உன்னுடைய
சொல் வாளைச் சுழற்றி
சுக்கு நூறாக்கி விட்டாய்

எத்தனையோ கண்டும்
இளகாத மலையாக
இத்தனையும் கடந்த நான்
இன்றைக்கு
செத்தது போல் வீழ்ந்து
சிதறித் துண்டு துண்டாய்
பொடியாய், மண்ணாகிப்
போக வழி தெரியாமல்
அடிக்கின்ற காற்றில்
அலமலந்து பறக்கின்றேன்

என்னைத் தொலைத்து விட்டு
எடுப்பாக நீ திரியும்
விண் கீழ் நீண்டு செல்லும்
வெளியொன்றில், என்றைக்கோ
ஓர் துகளாய் பறந்து வந்து
உன் கண்ணுள் விழுந்திடுவேன்
நீர் திரளும் போது
நினைவாக நான் எழுந்தால்
உறுத்தாமல் உள்ளேயே
உயிர் கரைப்பேன், கன்னத்தால்
தெறிக்கின்ற கண்ணீரில்
தீர்ப்பேனென் நீர்க் கடனை
அறிக! எனை மொண்டு
ஆண்டவளே..!

Friday 18 January 2013

அடிப்பிடிச்ச வாழ்வும் அன்பும்..

அடிப்பிடிச்சு மணக்கிறது நிகழ்வாழ்வு
அன்போடும்
துடிப்புள்ள நாடி துவண்டு
துயரடைப்பால்
வெடிப்புண்டு கசிகிறது
வெங்குருதி, நாசிக்குள்
உடைப்பெடுத்த குருதி மணம்
ஊறி மணக்கிறது

அன்பென்ற மருந்து தனை
ஆறுதற் கரண்டியினால்
என்புருக ஊட்டி விடும்
இங்கிதத்தை எதிர்பார்த்து
என்புருகும் வாழ்க்கையிது
ஏதேனும் ஓர் சொட்டு
அன்பு மணக்காத்து
அடித்தால் பட்ட மனம்
இன்புற்றுத் தவிக்கும்
இதக் கணத்தின் வரத்துக்காய்
புண்ணாகிக் கொதிக்கும்
பொறுக்கேலாக் காயத்தை
இன்னும் ஆற விட
எண்ணாமல் இழுக்கிறது 

என்னாளிலெனை நம்பும்
ஏதேனுமோர் வார்த்தை,
என்னாளிலென் மனசின்
ஈரத்தை உணருகின்ற
உன்னால் முடிகின்ற
ஓர் சமிக்ஞை, உடல்மொழியில்
என்னைப் புரிந்து விட்ட
எதுவேனுமோர் அசைவு
என்றைக்கு உனிலெழுந்து
எனை வந்து அடைகிறதோ
அன்றைக்கே மனக்காயம்
ஆற எண்ணி அசடு வைக்கும்

பழங்காயம் ஆக விட்டால்
பதிந்து விடும் நோ, பின்னர்
உளம் திருந்தி ஒரு காலம்
ஓடி நீ வந்தாலும்
பழகி நோ பழகி
பட்டு விட்ட மனம் மீண்டும்
இளகுதற்கு முடியாமல்
இரும்பாயே இருந்து விடும்

வருந்தி நீ அன்று
வாய் விட்டு அழக்கூடும்!
புரிந்தேனுனை என்று
புலம்பலாம் நீ!, அன்றைக்கு
திரும்பி வர முடிந்த
திக்கினிலே நான் இருந்தால்
திரும்பி வரப்பார்ப்பேன்
இல்லையெனில் இப்பொழுதே
தேற்றிக்கொள் உன்னை, என்
தீச்சட்டி வாய்க்காரி..!








Monday 14 January 2013

அப்பனாக்கிய அழகனுக்கு.. (அகவை ஐந்து)


உந்தன் நினைவு வந்தால்
ஒரு கவியும் எழுகுதில்லை
எந்தன் இமை கவிந்து
இருள, துளியிரெண்டு
சிந்தி உன் சிரிப்பாய்
சிதறித் தெறிக்கிறது

எத்தனை யுகமாய் நான்
ஏந்தி வந்த புண்ணியமோ
இத்தினத்தில் இவ்வாண்டில்
எழுவன் என்று காத்திருந்து
அப்பனாய் எனைப்படைத்த
அழகேசா! எமக்கிடையில்
இப்படியே பேசாமல்
இரும்பாய் கடல் மலைகள்
தாச்சி விளையாடித்
தவிச்ச முயல் அடிச்சாலும்
நினைவுக்குள் நீயெழுந்து
நின்றால், உயிர் தவித்து
கூட்டைப் பிரித்துக்
குதித்துக் கடல் கடந்து
உன் காலைச் சுற்றித் தான்
ஓடித் திரியுதடா

உயிரங்கே போனபின்னால்
உதவாத ஐம்புலன்கள்
பதறுகின்ற புலம்பலினைப்
பற்றி, சொல்லாக்கி
ஏதோ பழக்கத்தில்
எழுதுதடா, மற்றபடி
உன்னைப் போல் மனசாகும்
உயிர் ததும்பும் கவிதையொன்றை
இன்றுவரை என்னாலே
எழுதிவிட முடியவில்லை

உன்னுடைய சிரிப்பில்
உறங்குகின்ற பேரழகில்
என்னை இழந்து விடும்
ஏதோவோர் உயிர்ப் பந்தம்
எத்தனை ஜென்மம் நான்
எழுதிக் குவித்தாலும்
பத்தியப் பட்டெனக்குள்
பாவாகா தென்பதனால்
ஆறாக உன் வாசம்
அடர்ந்து பெருகுகையில் வெறுங்
கீறு கூடப் பேனாவால்
கிழிக்க முடிவதில்லை

ஏனென்றே தெரியாமல்
இழுபடுமோர் இவ்வாழ்வில்
நான் படைத்த நல்ல உயிர்ப் பாட்டே
நீ இருக்க
வீண் தான் வெறும் பாட்டு
விடு..