Sunday 26 February 2012

பசுந்தரையாகப் படருவேன்..

நாட்களின் நீளமும்
நம்மிடை இடையெழும்
வாட்களின் நானுனி
வார்த்தையின் கீறலும்
கெளரவம் பார்க்கின்ற
காதலும் இற்றையில்
பேச்சறுந்த ஓர்
பெருவழிப் பாதையில்
மூச்சறுந்த ஓர்
முரண் நிறை வாழ்க்கையும்
வீச்சறுந்து வீழ்
விந்தினைப் போலவே
பாச்சொரிந்த வாழ்(வு)
பலமிழக்குதோ..?

என்னுடை
முள்ளுடல் தன்னிலே
முன்பெலாம் உன்னிதள்
முட்டினால் மொக்குகள்
தோன்றிடும், இன்று ஏன்
செவ்விதள் தன்னிலே
சிந்திடும் சொற்களில்
மொக்குகள் முட்களாய்
ஆகுது..?

கட்டிலில்
இன்னுமாய் இன்னுமாய்
என்னிலே உன்னுடல்
பின்னடா என்று நீ
மின்னையில் உன்னிமை
ஒவ்வொன்று மொவ்வொரு
உயிருடற் கைகளாய்
கவ்வி அழைத்தது கட்டி
இன்று பார்!
உன்னிமை வெட்டிடும்
ராவண வெட்டிலே
என்னுயிர் முண்டமாய்
வீழுது, ஒவ்வொரு
இமைகளாய்த் தொங்கிடும்
கத்திகள் எந்தனை
கனவிலும் தள்ளுதே
ஏனடி..?

கலவியில்
உன்னை நான் தயிரெனெ
என்னை நீ மத்தென
உருட்டி உணர்ந்துமே
கடைகையில் திருப்தியின்
அமிர்தமாய் ஓர் துளி
உன் கடை விழிதனில்
உருள்கையில் தெரிகிற
வானவில் பிரிகையின்
புதிர் நிறை முடிச்சினை
புன் சிரிப்பவிழ்த்திடும்
கதிர் நிறை காலமும்
கடந்ததோ..? இன்று உன்
கண்களை எண்ணினால்
கண்களை நிறைக்கிற
தன் களை இழந்திடும்
தாப நீர் முட்டியே
விண் களை இழந்ததாய்
விரக்தியாய், பார்க்கையில்
வெண் களை இழந்துபோய்
வெறுங்கரு நீலமாய்
கண் முழிக்கறுப்பதாய்
காட்சிகள் அற்றதாய்
என் விழி அறியுதே
ஏனடி..?

அன்பினால்
ஆசை நரம்பினை
இழுத்தெடுத் திருவரும்
பாச நரம்பினை ஒட்டிய
பதியமும்
வீசி வளர்ந்தது விருட்சமாய்
இடையிலே
மோசம் மிகுந்தவோர்
காலம் எழுந்தெமை
முக்கிப் பிரிப்பதைக் கண்டியோ..?
அறிவிலாய்!
பாச நரம்பினைப் பற்றியுன்
கைகளால்
கூசுதலின்றி முட்சுவரிலே
தேய்துமே
வாச நினைவினை அறுக்க
நினைக்கிறாய்
தேய்த்து தேய்த்து நீ
அறுக்க முயல்கையில்
தெறித்தெழும் கீச் ஓசையில்
பல்லெலாம்
கூசி உடைந்து சிதறுது
குழந்தையே!

பாலைவனமதாய் நிற்பதாய்
எண்ணி நீ
பதைப்பதை இங்கு நான்
பார்க்கிறேன், ஒரு முறை
கைகளை நீட்டி நீ
கண்களைக் காட்டினால்
எம்மிடை வீசிடும்
பெருமணற் புயலினை
என் மனமலையினால் தடுத்துமே
உன்னை நான்
பசுந்தரையாக்கிப் படருவேன்
பாரடி..!

No comments:

Post a Comment