Monday 20 February 2012

நானழுத கண்ணீரில்..

கோபமோ குறையோ
கொடுக்கல் வாங்கல்களால்
மனத்தாபமோ இல்லை
தவிர்க்கேலாச் சூழ்நிலையோ

எதுவாக இருந்தாலும்
என் நண்பன் எனச் சொன்னால்
பொதுவாக மூஞ்சைக்கு
நேராவே சொல்லிடுவேன்

நண்பன் போற் பழகும்எதிரி
எது செய்தாலும்
நேராவே பேசி அடித்திட்டால்
அவனும் பின்
உடை மாற்றும் அறைக்குள்ளே
உள் நுழைந்து படமெடுக்கும்
கடை கெட்ட காவாலி
என அறிவேன்
அதனாலே முன்னாலே சிரித்து
கை கொடுத்து வழி அனுப்பி
பின்னாலே தடம் போட்டு
வீழ்த்தி விட்ட நண்பனிடம்
மெல்ல விடை பெற்றேன் புன்னகைத்து..

அன்று முதல்
என்னை அறியாமல் அடி நெஞ்சுள்
விதை ஒன்று மெள்ள
முளை விட்டுப் பிளக்கிறது,

நாட்போக
ஆணிவேர் வன்மம்
தன்னை நினைப்படுத்தி
நன்றாகத் திட்டமிட்டு
கிளை அகட்டிப் பூப்பூத்து
நெஞ்சுள் இருந்த என் நஞ்செல்லாம்
அப்படியே பிஞ்சு பிடித்துப் போய்த்
தொங்கிற்று..
என்னை அவன்
அறுத்த கதை எண்ணி
நானழுத கண்ணீரில்
செழித்து வளர்ந்த மரம் பழுக்கிறது..

அதற்குள்ளே
எத்தனையோ வடுக்கள்
எல்லாமே கொதிப்படைந்து
இரத்தச் சிவப்பு பழமாகத் தொங்கிற்று
'உரிச்சுக் கழட்டி'
பழம் அவனைப் போலத்தான்
வெளியில் அழகாவும் உள்ள நஞ்சாவும்
'தோற்று வித்தோன் போற்தானே
தோன்றுவதும் இருக்கோணும்'

பழத்தின் மினுமினுப்பில்
அழகில் உருப்படியில்
அவ்வழியே வந்த எதிரி நண்பன்
வினைப்படியே
நானென்றறியாமல்
நாடகத்தைப் புரியாமல்
பழம் புடுங்கி நாவால் நீரூற
மென்று மென்று
அப்படியே விழுங்கி விட்டான்
சில நொடியில்
வாயாலும் மூக்காலும்
நுரை கக்க வாசல்கள்
எல்லாமே அடைக்க
என் முன்னே துடித்திறந்தான்..!

கண் முன்னே இறந்த
கவலை எனைச்சுட்டாலும்
எண்ணி நான் வருந்த மாட்டேன்
ஏனென்றால்
தோற்றுவித்தோன் தானே
தோளிற் சுமக்கோணும்..
மற்றபடி இப்போதும்

நல்ல ஓர் நண்பனாய்த் தான்
நான் இருக்க விரும்புகிறேன்
உமைப் பொறுத்து
மிகக் கெட்ட எதிரியாயும்
முடிகிறது..!

No comments:

Post a Comment