Wednesday 8 February 2012

காலம் பின்னிய வாழ்வு..

காலத்துகென்ன
கண்டபடி ஓடிவிடும்
சீலமாய்ச் சிறப்பாய்
இருந்த வரும் போய் விடுவார்,

ஏதோ ஒன்றிரெண்டு
வரலாறிழுபட்டு
’அம்பிட்ட பெயர்களென்று
ஆட்காட்டும்’ அது கூட
விமர்சகருக்கும் பேரனுக்கும்
வசதியன்றி
போனவருக்கெல்லாம் இது
தெரிந்திடவா போகிறது..?

இதற்குள்ளே எங்கள்
கல்வி முறைத்தேர்வை எய்த
இரவிரவாய் முழிச்சு
ஆசைகளை அடகு வச்சு
முச்சை கூட இல்லாப்
பட்டம் ஒன்றைப் பெற்றெடுத்து
வேலை தேடுவதை வேலை என்றாக்கி
கிடைச்சாலும் மேலை
உள்ளவன்ர மேம்போக்கால்
விரக்தியின்ர உச்ச
விளிம்புக்குச் சென்றாலும்
’சரி விடுவம்’ என்று
வழமையினை இயல்பாக்கி
உலகத்தில் வாழப்பழகி
மூச்சுவிட..
காதல் வயசெல்லாம் கடந்து விடும்
பின்னர்
கல்யாணம் எண்டும்
சொல்லேலா தென்பதனால்
சாட்டுக்கென்றொரு சடங்கு செய்வம்
பேந்தென்ன
சோத்துக்கும் சொதிக்கும்
சோரந்தான்,

இடக்கிடையில்
கரிச்சட்டி துடைக்காத
பேப்பரில ஏதேனும்
பேப்பருக்கெழுதிப்போட்டு விட்டு
ஒரு மாசம்
பெரியாளா நிமித்தித்திரிவம்
திடீரென்றோர் நாளில்
நினைவெல்லாம் மங்க
நிமிர்ந்த தெல்லாம்
படுத்துவிட
பேர் கூட இல்லாமற் பிணமாவோம்.

டேய் முருகா..!

இதுக்குப் பெயராடா
வாழ்க்கை..?

No comments:

Post a Comment