Wednesday 8 February 2012

நினைவுகளின் நெரிசல்..

கல்லூரி அரச மரம்
கனகதையள் சொன்ன மரம்
நில் என்று சொல்லி முந்தி
நிழல் நல்லாத்தந்த மரம்
அரச மரத்தடியில்
அன்பு விளை நிழற்பரப்பில்
பரவசமாய்ப் பந்தடிச்சு
நின்றோம் நினைவிருக்கா..?

குண்டலினி சக்தி
கிளம்பிடுமாம் எனச்சொல்ல கோயில்
மண்டபத்தில் ஆறேழு
மணி நேரம் அமர்ந்திருந்து
எதுவும் கிளம்பாமல்
இருந்திடவும் முடியாமல்
குண்டி நோவெடுக்கத்
திரிந்தோமே ஞாபகமா..?

சிறு நீர்கழிக்கையில
சின்னனில நாம் முந்தி
பொறு நில்,
போட்டி தொடங்கட்டும் எனச்சொல்லி
ஆர் தூரம் பெய்வமென
அளந்தளந்து பெய்து முதல்ப்
பேருனக்குத் தந்தேனே
பெம்மானே ஞாபகமா..?

பாலர் வகுப்பிருந்து
ஒன்றாவே கல்வி கற்றோம்
ஆலமரவிழுதாய்
அன்பைப் படரவிட்டோம்
பந்தை அடிக்கையிலும்
பல சண்டை செய்கையிலும்
முந்தியே ஒன்றாய்
முட்டி உதை கொடுத்தோம்
நல்லூரிற்கூட
நாம் ஒன்றாய்த்தான் உருள்வோம்
கல்லூரி மதிற்பாய்வா
கட்டாயம் ஒற்றுமைதான்,
ஒன்றாவே வாழ்ந்து
உயிர்விடுவோமென்கின்ற
திண்ணமுடன் நெஞ்சில்
தீ வளர்த்தோம் ஞாபகமா..?

விட்டில் கனவு கண்டா
விளக்கொன்றும் குளிர்வதில்லை
தொட்டில் செய்ததற்காய்
குழந்தைதான் பிறப்பதில்லை
சதி செய்யச் சரியான
சமயம் பாத்திருந்து
விதி வந்து எம்மை
வேறு திசை ஆக்கிரிச்சு,
ஏனோ இடம் மாறி
இரு வேறாய்த் தனி ஆனோம்
தேனாய் வெறும் அடையாய்
வெவ்வேறு திசையானோம்,
கூதற் பனிப்பொழுதில்
கும்மிருட்டில் நள்ளிரவில்
ஏதேதோ நீ
தொழில் என்று இப்பொழுது
உன் வேலை, உன் உழைப்பு
உன் குடும்பம் உன்பாடு..
துளியும் ஒவ்வாத
இடமொன்றில் நானும்
விழியைப் பிதுக்கி
விழித்திருந்தபடி இங்கு
என் வேலை, என் சோலி
என் பாஷை, என்பாடு,

காலமும் போயிரிச்சு
கடுகதியில் மாற்றவிசை
ஞாலப் பரப்பெங்கும்
நடந்திரிச்சு,

கல்லூரி அரசமரம்
கன கதையள்
சொன்ன மரம்
நில் என்று சொல்லி முன்பு
நிழல் நல்லாத் தந்தமரம்
போன வருஷத்துக்
கல்லூரி விஸ்தரிப்பில்
தானமாய்த் தன்னை
தந்து விட்டுச் சாஞ்சிரிச்சு..

No comments:

Post a Comment