Sunday 26 February 2012

துயரப் பெருவெளி..

துப்பாக்கி வேட்டுகளுக்குப் பயந்து
ஐம் பூதங்களும் அன்று
அடங்கியிருந்தன

நீரின் ஆவி போதாதென்று
குண்டு துளையிட்ட
துவாரத்தின் வழியால்
மேலே மேலே தொடர்ந்தெழும்
வீரனின் ஆவிதனையும்
ஆசை மிகுந்து
அள்ளி அள்ளிக் கையால் வழிய
கொள்ளை விருப்பில் குடித்தது
வானம்

ஈரம் ததும்பி வழிந்தும் நிலமோ
இன்னும் அடங்காத் தாகம் நிறைந்து
ஓடிய குருதி வெள்ளம் முழுதும்
ஓவென திறந்த வாயால் குடித்தும்
அவா நிறைந்து இன்னமும் தேடி
குருதியை உறிஞ்சிக் குடித்தது

காற்றும்
உலகச் செவிகளிலே
உரத்துப் படும்படியாய் எங்கள்
அவலக் குரல்களை
அள்ளிச் செல்லவில்லை
வெடியின் அதிர்வில் காற்றுக்கும்
வெடித்துச் செவிப்பறை
கிழிந்தொழுகி
குழந்தை கதறும் அழுகை ஒலி
வழுகிக் காதால் விழுந்ததுவோ..

உள்ளே கனென்று எரிந்த தீயில்
நாடே அல்லவா எரிந்திட வேண்டும்
பாடை கூடப் பற்றிடவில்லை
சாம்பல் பூத்துக் கிடக்கலாம் உள்ளே..
ஊதி வளர்த்த ஓர்மக் காற்று
வாயே திறக்க மறுத்ததால் தீயும்
ஆர்வமற்று அடங்கிக் கிடந்ததோ..?

தேவை அற்ற பொழுதின் போது
தென்னை அளவு கிளரும் கடலும்
மூசிப் பேசும் வழக்கம் நிறுத்தி
மூச்சை நிறுத்திக் கிடந்தது
அலை தான்
கையைச் சுழற்றி எறிந்தால் அந்த
கரையில் வீழும்
கல்லெறி தொலைவில்
இருக்கும் எங்கள் தொப்புள் கொடிகள்
எத்தனை கோடி ஆயினும் அவர்கள்
கிராமக் கோடி ஒன்றில் தினமும்
அடி உதை வாங்கும் குடியன் மனைவி
எதுவும் பேசத்திராணி அற்று
அழுதும் தொழுதும்
விதியினை நொந்தும்
அறைக்குள் சுருண்டு படுப்பதைப் போல
எதற்கும் துணியா பழக்கம் வந்து
கடலும் தனக்குள் அழுது கொண்டு
அவர்களைப் போல கிடந்தோ
அறியேன்..?

உண்மையில்
நடந்த கொலைகளின்
வன்ம அழுத்தம்
மூச்சை அழுத்தி முழிகள் பிதுங்கி
பொறியும் சிதற ஐம் பூதமும்
கிளர்ந்து
புயல் அடித்தும் நிலம் பிளந்தும்
அதன் நடுவால் தீ எழுந்தும்
ஊடறுத்துக் கடல் புகுந்தும்
வானுடைந்து நிலம் விழுந்தும்
நாடே இரு துண்டாய்ப்
பிளந்திரண்டு நாடாக
ஆகி இருக்கோணும் அம்மாணை
ஆனால் எதுவும் நடக்கவில்லை..!

எந்த மண்ணிலே பிறந்தாரோ
எந்த மண்ணிலே வளர்ந்தாரோ
எந்த மண்ணினை ஒவ்வொரு துளியாய்
விரும்பிப் போரிட வந்தாரோ
எந்த வானினைப் பார்த்துத் தங்களின்
திசையினை அறிந்திடத் தெரிந்தாரோ
அந்த மண்ணில் ஒரு பிடி தன்னும்
கைகளால் தொட்டிட முடியாமல்
அந்த வானின் அழகு முகத்தை
ஆவி பிரிகையில் பார்க்காமல்
எங்கிருந்து மரணம் வருகுது
என்பதும் கூடத் தெரியாமல்
இருண்ட கண்களில்
எல்லாம் இருண்டிட
சுருண்டு வீழ்ந்ததை எண்ணுகையில்
ஒவ்வொரு மயிர்த் துளைக்
கண்களும் கண்ணாய்
அழுது துடிக்குது ஆற்றாமல்..

அவளின் வாழ்வோ
வார்த்தைகள் அற்ற துயரப் பெரு வெளி
இறுதிக் கட்டப் போரின் வெடிப்பில்
கடலின் களத்தில் கணவனை இழந்தாள்
அவனின் நினைவாய்  கையில் குழந்தை ,
பச்சை உடம்புப் பத்திரம் துறந்து
கண்ணைத் துடைத்து நடந்தாள்
குழந்தையும்
மாத்தளன் மண்ணில் சிதறி விழுந்தது
எல்லாம் போன நிலையிலும்
மண்ணை எண்ணி இன்னமும்
ஏறி நடந்தாள், இறுதியில்
கயவனின் பிடியில் காயம் வருந்தி
சிதைந்து சிதைந்து வருந்தி மடிந்தாள்

கொத்தாய் குலையாய்
குடும்பமாய் இன்னும்
எத்தனை கொடுத்தும்
விடியா மண்ணே..
என்ன தான் கேட்கிறாய் இன்னமும்..?

ஆனால்
இறந்த வீரரின் ஆடையைக் கழற்றி
பிறந்த உறுப்பினைப் பார்த்து ரசிக்கிற
அறுந்த கேவலச் சாதியே நீங்களும்
திறந்த மேனியாய் எங்களின் வீதியால்
பறந்து ஓடலைப் பார்த்ததன் பின்னரே
இறக்கும் என்னுடல் அன்றுதா னுடலினைத்
துறக்கும் என்னுயிர்த் தூசு.

No comments:

Post a Comment