Wednesday 28 November 2012

நினைவில் வைத்திருங்கள்..


கானகத்தின் மூச்சாய்
கடலலையின் அசைவுகளாய்
மானம் எனும் உயிரின்
மார்பாய், எம்தேச
வானத்தின் கீழ் நிற்கும்
வளியாய், வரலாறாய்
ஊனுடம்பின் ஆசைதனை
உதறி எம் மண்ணில்
மானுடம் வாழ்ந்ததென
மார்தட்டிச் சொல்ல வைத்த
எமதிருப்பின் சுவடுகளே!
எமக்காக உம் வாழ்வை
அமரத்துவமடைய வைத்த
ஆற்றல்மிகு நல்லுயிர்காள்!

தீபமாய் ஒளிருமும்
தியாகத்தின் வெளிச்சத்தில்
தாபமாய் எமக்குள்ளே
தகிக்கின்ற மண்காதல்
கலங்கரை விளக்கம் போல்
கட்பார்வைத் தூரத்தில்
துலங்குகின்ற விடுதலைக்கு
துயர் தாங்கி நடக்கிறது

இந்தக் கடல், காடு
எம்முடைய வயல்வெளிகள்
முந்தையொரு நாளிலெம்
முதுசமெனச் சொல்லும் நிலை
வந்ததெண்ண நெஞ்சின்
வயிறு பற்றி எரிந்தாலும்
சந்ததிகள் நிமிர்ந்தென்றோ
சரித்திரத்தைப் படிக்கையிலே
வந்த வழி அறிந்துங்கள்
வழியூடு நடந்து செல்ல
விந்தை நிகழ்ந்தொருநாள்
விடியும், சீக்கிரமாய்
எந்தை நிலம் எமதாகும்
என்கின்ற வாக்கினை நாம்
இந்தத் திரு நாளில்
ஏற்றுகிறோம் உம் முன்னே

கட்டிளம்வயதை காதலை உங்களின்
இட்டம் மிகுந்த வாழ்க்கையை - விட்டு நீர்
எமைக்காத்தீர் இங்கெப்படியும் நாமெழுந்து
அமைப்போமும் தேசத்தை ஆம்

சிரிக்கப் பழகுதல்..


வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய்விட்டுச் சிரிக்கின்றோம்
காய்த்திருக்கும் விடுதலைப் பூ
கனியாகும் நாட்களிடை
எழுகின்ற அழுத்தங்கள்
எமைக் கொல்லும்,அக்கணத்தில்
அழுதிருப்போம் ஆனாலும்
அடுத்த நொடி சுதாகரித்து
நாமே எமைத்தாங்கி நடந்து செல்வோம்
இடைவெளியில்
வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய் விட்டுச் சிரிக்கின்றோம்

அயர்லாந்தைத் தழுவுகின்ற
அட்லாண்டிக் கடற்கரையின்
உயரத்தில்  குருசுருவாய்
உடல் மின்னிக் கொண்டிருக்கும்
விண்மீன்களென் கண்ணில்
விழுந்தால், ஊர் வளவில்
நண்பர்கள் சேர்ந்திருந்து
நாமறிந்த கோளறிவை
அண்ணாந்து பார்த்தெமக்குள்
அடையாளம் காட்டியது
ஆண்டுகளைக் கண்டத்தை
அறித்தெறிந்து நிழலாட
கண்கலங்கும்,மறுநிமிடம்
கடைவாயில் சிரிப்பூரும்
என்னினத்தின் விதியிது தான்
என்கின்ற பெரு மூச்சில்
அக்கணமும் அறுந்து விழ
அடுத்த கணம் உருவாகும்
இக்கணம் மட்டுமே
இங்குண்மை என்கின்ற
நிமிடம்வரை நீளும்
நிலையாத தெளிவொன்றில்
வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய்விட்டுச் சிரிக்கின்றோம்

உயிரின் செவிக்கரையை
உதட்டாலே கவ்வுகின்ற
மயிர் குத்திட்டெழுந்து நிற்கும்
மண் பாட்டில்,

கடலுதட்டை
தொடுவான் கடிக்கின்ற
தொலைவில் படகொன்று
கடைசி ரெத்தச் சூரியனைக்
கடக்கின்ற பேரழகில்,

பலலெட்சம் மைல் கடந்து
பறந்து திரும்பித்தன்
நிலத்துக்கே வந்துவிட்ட
நிம்மதியில் பறவையதன்
கூட்டத்தோ டிசைக்கின்ற
குதூகலப் பாட்டுகளில்,

பாசாங்கறியாத
பால்வாயின் சிரிப்பதனில்

எம்மையறியாமலேயே
எமை மறந்து நாம் சிரிப்போம்
சிரிக்கும் போதூரின்
சில காட்சி வந்து விட்டால்
அரைச் சிரிப்போடெம் வாய்
அணையும், ஆனாலும்
வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய்விட்டுச் சிரிக்கின்றோம்..

Monday 12 November 2012

நிலவாய் தொடர்கிறதென் நிலம்..


அடிக்கின்ற புயல் நடுவே
ஆடுகின்ற மரத்தினது
உடைகின்ற கொப்பாக
ஓர் வாழ்வு, கள்ளடியில்
அடைகின்ற மண்டியைப் போல்
அதிற் தனிமை, ஆனாலும்
விடிவெய்தும் என் தேச
விடுதலையின் எழுகதிரை
கையிரெண்டும் அகட்டி
கால் மடக்கித் தாளிட்டு
மெய் சிலிர்க்க நாடியினை
மேற் தூக்கி அண்ணாந்து
அப்படியே கண்ணால்
அதை நுகர்ந்து பருகியெந்தன்
இப்பிறப்பைத் துறக்கோணும்
என்பதொன்றே தீராத
ஆசையடி எந்தனுக்கு
அதற்குள்ளே என் வாழ்வு
ஓசையின்றி எங்கேனும்
ஓர் கண்டத் தகட்டிடுக்கில்
ஒடிந்து வீழ்ந்துடைந்து
உரு மறைந்து போயிடலாம்

எங்கெங்கோ நானோடி
இழுபட்டுத் திரிந்தாலும்
அங்கங்கெல்லாம் என்
அழகு மண்ணின் விடுதலையை
எங்ஙனம் நானெட்டுவேன் என்பதே
என் கனா மூச்சு எல்லாமும், அடிக்கடி
வாழுகின்ற இடம் வேறாய்
இருந்தாலும் பாதைகளாய்
நீளுகின்ற வழியெல்லாம்
நிறைந்திருப்பதென் மண்ணே

மாழுகின்ற போதிலுமென்
மனதாய் நினைவாக
சூழ்ந்தெங்கும் மண் மணமே
சுற்றி வரும், ஆதலினால்
எங்கே நான் வீழ்ந்தாலும்
என் மண்ணில் தான் வீழ்வேன்
அங்கே தான் உரமாவேன் அறி..