வெள்ளி, 10 ஜூலை, 2026
காலம் மட்டுமே அறியுமோ..
செவ்வாய், 23 ஜூன், 2026
மறமெனும் அறம்..
நீதியென்பது
வெறும் மன்றங்களின் மரமேசைகளில்
முத்திரை விழுந்த பத்திரமன்று,
மண்ணை இழந்த மக்களின்
மூச்சுக்குள் இன்னும் அணையாத
சூடான சாம்பல்.
ஓரினத்தின் தேசம்
வரைபடக்காரனின் கருநிறக் கோட்டால் மட்டும்
பிறப்பதில்லை,
அதன் முதுகெலும்பில்
நூற்றாண்டுகள் நடந்த காயங்கள்,
அதன் மொழியின் பற்களுக்குள்
கடித்துப் பிடிக்கப்பட்ட நினைவுகள்,
அதன் இறந்தவர்களின் பெயர்களை
மறக்க மறுக்கும் குழந்தைகளின் நாக்கு
இவற்றால்தான் அது கருவுறுகிறது.
“இனிச் சாத்தியமில்லை” என்றார்கள்,
உலகம் தன்
இரும்புக் கணக்குப் புத்தகத்தைத் திறந்து
தேசிய இனங்களின் கனவுகளை
எண்ணிக்கைக்கு வெளியே தள்ளியது,
விடுதலை என்பது
பெரிய அரசுகளின் அனுமதிச் சீட்டு,
தேசம் என்பது
வல்லரசுகளின் மேசையில்
மீதமிருக்கும் உப்பு.
ஆனால் வரலாறு
அதிகாரத்தின் வாயால் மட்டும் பேசுவதில்லை,
சில வேளைகளில் அது
அடக்கப்பட்ட ஒரு தாயின்
அடுப்புச் சாம்பலில் கையெழுத்திடுகிறது,
சில வேளைகளில்
சிறைக்கதவின் இரும்பில்
ஒரு நகத்தின் கீறலாய்த் தொடங்குகிறது,
சில வேளைகளில்
மரணத்தைக் கடந்துபோன இளைஞர்களது
என்பின் அமைதியிலிருந்து
மின்னலாக எழுகிறது.
நியாயம் மட்டுமே வெற்றியாய் ஆகாது
காலத்தையும் கணக்கையும்
புவியின் குளிர்ந்த அரசியலையும் கடக்க வேண்டும்.
மண்ணின் உண்மைக்குக் குரல் வேண்டும்,
குரலுக்குத் தொடர்ச்சி,
தொடர்ச்சிக்கு உடைக்க முடியாத உள்ளெரி.
அந்த உள்ளெரியே
மாவீரர்களின் ஆன்மா.
அவர்கள் இறந்தவர்கள் அல்ல,
மண்ணுக்குள் வைத்துவிடப்பட்ட
தீக்கற்கள்.
ஒரு தலைமுறை தடுமாறும் பொழுது
அவர்கள் அடியிலிருந்து வெப்பம் தருவார்கள்.
ஒரு மொழி பயத்தில் நடுங்கும் பொழுது
அவர்கள் எழுத்துகளுக்குள் இரும்பு சேர்ப்பார்கள்.
ஒரு கொடி காற்றில்லாமல் தொங்கும் பொழுது
அவர்கள் காணாத மூச்சால்
அதை மீண்டும் அசைப்பார்கள்.
அரசியல் பலம் படைகளை எண்ணும்,
ஆன்ம பலமோ
எந்தத் தராசிலும் நிறுக்க முடியாதது
மண்ணில் புதைந்த பெயர்களின் உறங்காத ஒளி.
தமிழீழம்
தோல்வியின் பெயரல்ல,
அது இன்னும் நிறைவேறாத
அறத்தின் நிலப்பெயர்.
கடல் அதைச் சூழ்ந்திருக்கலாம்
முள்வேலிகள் அதைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்
ஒப்பந்தங்களின் காகிதம்
அதன் குருதியை உலர்த்த முயன்றிருக்கலாம்.
ஆனால் ஒரு தேசம்
முதலில் நிலத்தில் அல்ல
நினைவில் உயிர்வாழ்கிறது.
நினைவில் உயிர்வாழும் தேசத்தை
எந்த ஆட்சியும் முழுதாய் வெல்ல முடியாது.
மறமென்பது வெறும் சினமன்று
அநீதியின் கழுத்தில் வைக்கப்படும்
அறத்தின் சூடான கை.
மண் மறுக்கப்பட்ட மக்களுக்கு
மறமும் ஓர் அறம்தான்,
மீண்டும் மனிதராய் நிமிரும்
முதற் பிரார்த்தனை.
ஆகவே,
நாம் காத்திருப்பதில்லை
குருதியை கொள்கையாக்கி,
இழப்பை மொழியாக்கி,
மரணத்தை மண்ணின் உரிமைச் சான்றாக மாற்றி
தொடர்கிறோம்
ஒரு நாள்
அரசியல் தன் குளிர்ந்த கைகளைப் பின்வாங்கும்,
ஒரு நாள்
வரைபடம் தன் பொய்யைத் திருத்தும்,
ஒரு நாள்
மண்ணின் கீழெழும்
பல்லாயிரம் அமைதிக் குரல்கள்
ஒரே ஓசையாகி
உலகின் செவிப்பறையைத் திறக்கும்.
அந்நாள்
விடுதலை வெறும் கொடியாய் ஏறாது ,
தேசிய இனங்களின் திறவு கோலாய்
பட்டொளி வீசிப் பறக்கும்..
திங்கள், 15 ஜூன், 2026
மலையென எழுக..
வேர்கள் இருளில் துடிக்க
வீழ்ந்த பெருமரம்
பெருங்காற்றால் சாய்ந்ததல்ல,
மண்ணுக்குள் பதுங்கிய
கரையான்களின் சூழ்ச்சியால்
உட்குடைந்து சரிந்த மூச்சு
நிழலருந்திப் பசியாறிய சிறகுகள்
வீழ்ந்த மரத்தின் வேர்களை
பழுதென்று பழித்துச் செல்லும்,
முளைத்தால் மட்டுமே
விதையெனக் கொண்டாடும்,
பனியில் கருகிய முளையைப்
பிழையெனத் தூற்றும்.
சந்தை மனிதர்களின்
துருப்பிடித்த தராசுகளில்
உன் காயங்களில் வழியும்
செங்குருதியை நிறுக்க முயலாதே,
வெற்றிக்கு மலர்தூவும்
குருட்டு விழிகள்
தோல்வியின் கையறு விம்மலை
மரணமென்று சுட்டும்
இது பொதுமனத்தின் பெருவியாதி
வரண்ட நிலம் பிளந்து பூத்த
செங்குருதிப் பூவே
அவர்கள் உன் வியர்வையை
பிழையென அளக்கட்டும்,
நீ அதை அடுத்த பெருங்காட்டின்
மழைநீர் என நம்பு,
இழப்பின் சாம்பலை
நெற்றியில் பூசாதே,
அது உன் வேர்களைக் காக்கும்
கவசப் படலம்.
காட்டுமகன் எறிந்த கூர்வேல்
இலக்கைத் தவறவிட்டால்
வேலின் கூரே பிழையாகாது
திசையை வளைத்த
பெருங்காற்றின் சூழ்ச்சி அது
முறிந்த வாளின் எஃகினை
உன் மார்புக்குள்
நீயே குத்திச் சிதைக்காதே,
கூட்டுமனத்தின் கூச்சல்களைப் புறந்தள்ளு,
நெருப்பு அணைவதில்லை
அது கனன்று உறங்குகிறது
மீண்டும் பெருநெருப்பாய்
வெடித்தெழக் காத்திருக்கிறது,
நீ இழந்தது விடுதலையையல்ல,
வெறும் காலத்தின் ஒரு துளியை மட்டுமே
உன் பாதங்களில் படிந்த
செம்மண்ணின் மீது ஆணையாய்
உன் குருதியின் திசை பிழையற்றது
மலையென எழுக..
வியாழன், 11 ஜூன், 2026
விண்மீனுக்கான பதில்..
உன் கடிதம்
இன்றிரவுதான் வந்து சேர்ந்தது
நீ அணைந்து
எத்தனை ஊழிகளோ…
இருந்தும் வாசிக்கிறேன்
ஒளியின் கையெழுத்தில்
ஒரு பிழையும் இல்லை
நான் ஒன்றும் பெரியவன் இல்லை
கடற்கரையில் நின்று
அலைகளை எண்ணத் தொடங்கி
இடையிலே மறந்தவன்
உலகம் என்னும் ஏட்டை
ஒருமுறை புரட்டி,
மொழி தெரியவில்லை என்று
மூடி வைத்தவன்.
என்றாலும் சொல்கிறேன்
புரியாததால்தான்
இத்தனை அழகு,
விடை தெரிந்த புதிரை
யார் மறுமுறை கேட்பார்?
தெருவில் நடக்கிறேன்:
ஒவ்வொரு முகமும்
எழுதி முடிக்காத கடிதம்,
எவரும் இங்கே
முழுமையாய் வாசிக்கப்படவில்லை,
உனக்குத் தெரியுமா விண்மீனே
இங்கும் உன்னைப் போல்
எத்தனையோ பேர்..
வலை பின்னிய கைகளில்
சிலை தூங்கியது
சோறு வடித்த விரல்களில்
யாழ் மறந்து கிடந்தது
எவரும் அறிந்திலர்
தாமுமே அறிந்திலர்.
ஆதலால்,
உன் காலங்கடந்த ஒளியை
முகம் நிமிர்த்தி ஏற்கிறேன்.
நான் மறையும்போது
எங்கோ ஓர் இருண்ட கண்ணை நோக்கி
என்னிடமிருந்தும் ஏதோ ஒன்று
புறப்படும்
புரிதல் எனக்கு வாய்க்கவில்லை
அன்பு செய்யத்தான் தெரியும்.
இதோ
உன் ஒளி விழுந்த இடத்தில்
என் கண்களின் ஓரத்தில்
ஒரு துளி உப்பு..
சனி, 6 ஜூன், 2026
இரெத்தம் தோய்ந்த செஞ்சட்டை
அவர்கள் அணிந்த செஞ்சட்டை
விடியலின் நிறமன்று,
எங்கள் வீதிகளில் உறைந்த
பழைய குருதியின்
காய்ந்த செதில்.
எங்களின்
துயரப் பாடல்களைத் திருடி
தமக்கான மகுடத்தின் இசையை
மீட்டிக்கொண்டார்கள்.
அரியணை ஏறியதும்,
செம்போர்வையைக் கிழித்து
பழைய நச்சுப்பற்களை நீட்டுகிறார்கள்.
துக்கத்தின் சுவடுகளுக்கு
விலங்கிடுகிறார்கள்
எங்கள் நடுகற்களின் மேல்
தார் ஊற்றி
பெருவீதி சமைக்கிறார்கள்.
உதடுகளை இரும்புக்
கம்பியால் தைக்கலாம்
ஆனால் குரல்வளைக்குள் புதைக்கப்படும்
பாடல் அழிவதில்லை.
அது குருதிக்குள் இறங்கி,
எலும்புகளைக் கூராக்கும்
உப்பாய் உறைகிறது,
தொண்டையை நெரிக்கும்
உங்கள் அதே விரல்கள்தான்
பாறையைப் பிளக்கும்
வேர்களின் தீராச் சினத்தையும்
மண்ணுக்குள் மூட்டுகின்றன.
எங்கள் அமைதி
ஓய்ந்துபோன மூச்சல்ல
அது உங்களின்
இரும்புச் சங்கிலிகளைத் தின்னக் காத்திருக்கும்
கூர்மையான துரு..
சனி, 16 மே, 2026
மறம் துயிலும் நிலம்..
உப்பங்காற்றில் தேய்ந்து கரைகிறது
பெருங்காலம்
நந்திக்கடலின் உவர்ச்சேற்றில்
புதைந்த எம் வேர்களின் என்புகள்
ஊழியின் சுழற்சியில்
சிதைந்து சுண்ணமாகிவிட்டன.
வையத்தின் நடுவண் மன்றங்களில்
நடுவுநிலையை நிறுக்கும்
தராசுத் தட்டுகள்
துருப்பிடித்து அறுந்து வீழ்ந்து
பல பருவங்கள் ஆகிவிட்டன
வல்லாதிக்கத்தின் செவிகளில்
உறைந்து கிடப்பது
பாறையினும் இறுகிய
பெருஞ்செவிடு,
கருகிப்போன பனைமரங்களின்
பட்டையான நெஞ்சில்
தன் தலையையடித்து
முட்டி அழுகிறது நாதியற்ற காற்று
அது கடந்து செல்லும்
பாழடைந்த முற்றங்களில்
எம் பிதாக்களின் பெருமூச்சு மட்டுமே
புழுதியாய்ப் படிந்திருக்கிறது.
எல்லாவற்றையும் இழந்து
எரியுண்ட சுள்ளிகளாய்
உலகப் பெருவெளியில் வீசப்பட்டுவிட்டோம்
நாக்கு அறுபட்டவர்களின்
மௌனப் பெருவலியோடு
வெறுமையின் சாம்பலைத் தின்றுகொண்டிருக்கிறது
எஞ்சிய தலைமுறை,
எம் குருதியின்
ஈரம் காய்ந்த நிலத்தில்
அறம் கேட்டு முளைத்த
பசும்புற்களும் பட்டுப்போயின.
கேட்பாரற்றுக் கிடக்கும்
எம் ஏதிலி நிலையைப் பார்த்து
இந்த அண்டவெளியின் கண்கள்
குருடாகியிருக்கக்கூடும்
இல்லையேல்
எம் துயரத்தின் எடையைத் தாங்க
இந்த ஒற்றைக் கடலின் ஆழம்
எங்ஙனம் காணும்… ?
திங்கள், 4 மே, 2026
மைபடு விரல்..
மைபடு விரலால் முறியாது இரும்பு
பொய்ப்பெட்டி ஓலையில்
பிறக்காது புயல்,
தாள்எண்ணித் தளையறுத்த
இனம் உண்டோ வையத்தில் ?
எண்ணிக்கை அவையில்
எரியாது விடுதலை,
எஃகுரசு, அனல்விதை, தளையறு
இரப்போர் வழியே பிழை
வீணவை விடுத்து வெளிவா
களமே வழி, குருதியே விதை
காண்..
திங்கள், 13 ஏப்ரல், 2026
என்னுயிர் நிலை..
முந்நீர் நீந்தி முழுமலை யிறந்து
நீருறை யாகும் பனிப்படு துருத்தியில்
உயவுமரப் பட்டையாய் உலர்ந்ததென் யாக்கை
இழப்பதற் கினியோர் எஞ்சிய தில்லை
அறுத்த வேரொன் றடிமண் விழைந்து
துடிக்குமாப் போல் தொல்வள நாட்டில்
செந்நிலந் தழுவியென் சில்லுயிர் விளிய
நல்குவை யாயின் நன்றென நலியும்
எல்லுழந் தழுங்கிய என்னுயிர் நிலையே..
புதன், 8 ஏப்ரல், 2026
ஈரானே தொன் நிலமே..
நந்திக்கடலின்
குருதியுறைந்த அலைகளிலிருந்து
நின் சாக்ரோசு மலைகளின்
தகிக்கும் பாறைகளைத் தழுவுகிறேன்
ஈரானே..
அயலாரின் உதடுகளில் விரியும்
புன்னகையை நம்பாய் என நம்புகிறேன்
அது, மரப்பட்டையெனப் பாசாங்கு செய்யும்
உளுத்தலின் மென்மை.
அமைதி என்னும் வெள்ளைத் தாளை
அவர்கள் மரமேசைகளில் விரிக்கையில்
உன் பின்னறைகளில்
அவர்கள் இரும்பைத் தீட்டும்
அரத்தின் ஓசை
நின் செவிகளுக்கும் கேட்டிருக்கும்
இந்த உரையாடல் நினக்கானதில்லை
தம் எஃகு நுரையீரல்களில்
பெருமூச்சை நிரப்பிக் கொள்ள
அரக்கப் பொறிகள் இட்டுக்கொண்ட
கால நீட்சியென்பதை
நீயும் அறியாமல் இராய்
உன் நிலவியலின்
அடுக்குகளுக்குக் கீழே
தொடர்பற்றுப் புதைந்துகிடந்த
அவர்களின் ஒற்றர்களான
பாலைவனத் தேள்களுக்கு
மீண்டும் விடம் பாய்ச்சத் திறக்கப்பட்ட
இருட்டுப் பாதையே
இந்த இணக்கப் பேச்சென்பதை
நீயும் அறிவாய்
நெஞ்சின் உரத்தை
உள்ளிருந்து அரிக்கும்
வெம்மையற்ற தீயே இந்த உறவாடல்.
அவர்கள் நினக்கு நீட்டும்
அப்பத்தில் கலந்திருப்பது
நம்பிக்கையைச் சிதைக்கும்
இரும்புத் துகள்கள்,
எம் ஈழக் காடுகளில் நாங்கள் முத்தமிட்ட
அதே வஞ்சம்..,
ஒன்றிணைந்த நின் பெருங்காட்டை
தனித்தனி விறகுகளாய்ப் பிளக்கவே
அவர்கள் கோடரிகளோடு சிரிக்கிறார்கள்.
அவர்கள் போரை நிறுத்தவில்லை
தொன் நிலமே..!
தம் படைக்கலன்களின்
குழல்களைக் குளிரவைக்கவும்
நாளை வீசவிருக்கும் பெருநெருப்பிற்காய்
நின் மக்களின் எலும்புகளின்
திண்மையை அளக்கவுமே
இந்த அமைதியைப் போர்த்திருக்கிறார்கள்.
இது பெருங்காற்றின் ஓய்வன்று
சுழலின் மையத்தில் இறுகிப்போன
மூச்சுத்திணறடிக்கும் வெற்றிடம்.
வானிறங்கும்
எஃகுப் பறவையின் சிறகை
அமைதிப் புறாவென எண்ணி
ஏமாறாய் என்பதை அறிவேன்
இருப்பினும்
எம் கழுத்தை அறுத்த
அதே பட்டுநூலோடு அவர்கள்
வரும்போது வாயடக்க முடியவில்லை
இணக்கப் பேச்செனும்
அந்த இனிக்கும் நஞ்சை
உமிழ்ந்துவிடு
எம் பனைவேர்களில்
உறைந்திருக்கும் மெய்மையைப்போல்
நின் அடிமண்ணின் ஆழத்தில்
முளைத்த நெருப்பையும்,
அவர்களின் வழவழப்பான பொய்களால்
எக்காலத்தும் அழித்துவிட முடியாது..
ஞாயிறு, 5 ஏப்ரல், 2026
சுடப்படாத செங்கற்களின் அழுகுரல்..
பனிபடர்ந்த அந்நிய நிலக்கூரையின்கீழ்
உறக்கம் தொலைத்த தோழனொருவன்
பறிக்கப்பட்ட நம் நாட்காட்டியின்
கிழிந்த தாள்களை
அன்றாடம் அனுப்புகிறான்,
அவை வெறும் நிழற்படங்கள் அல்ல
களத்தில் வீழ்ந்த பெருவீரர்களின்
உறைந்துபோன மூச்சுக்காற்று.
அவர்களின் சுருண்ட முடிக்குள்
நமது ஊர்க் காற்றாடியின் சுழற்சி
இன்னும் நிற்கவில்லை,
விரிந்த மார்புகளில்
எதிர்காலக் குழந்தைகளின் தொட்டிற் கயிறுகள்
அறுபட்டுத் தொங்குகின்றன.
சிமிட்டாத அந்த அழகிய இமைகளுக்குள்
சுடப்படாத செங்கற்களைக் கொண்ட
கட்டப்படாத வீடுகளின் ஈரம்
காயாமல் கிடக்கின்றது,
பல்லாயிரம் இளம்பூக்களைப் பிழிந்து
நிலத்திற்கு உதிரம் ஊட்டியும்
இன்னும் சிவக்கவில்லையே
நம் வைகறை?
தமது வேர்களை மறந்துவிட்டு
நினைவுகளைத் தின்று செரித்த
பொருளற்ற வெற்றுடல்களின்
ஊர்வலத்தைப் பார்க்கையில்
வெறுப்பின் கூரிய நகங்கள்
என் விலா எலும்புகளைக் கீறுகின்றன.
அறம் என்பது
எரியும் காட்டின் மீது பறந்து செல்லும்
செவிடான பறவையின் சிறகசைப்புத் தானா ?
மீண்டும்
அந்த ஒளிரும் முகங்களை
உற்று நோக்குகிறேன்,
அவர்களின் கருமணிகளின் ஆழத்தில்
பழங்காலக் கிணறொன்றின்
குளிர்ந்த அமைதி குடிகொண்டிருக்கிறது,
அந்த இருளில் இருந்து வழியும்
ஒளியின் மெல்லிய நூலிழையைப்
பற்றிக்கொள்கிறேன்,
அந்தப் பார்வையின் துவாரத்தினூடாக
ஒரு பாதை திறக்கிறது
அது, சாவு என்ற சொல்லே இல்லாத
நிலத்திற்குச் செல்லும்
இரகசியப் பாதை..
சனி, 4 ஏப்ரல், 2026
பேருயிராய் வந்தாள்..
விண் வறள கண் சுருள
வெம்மையிலொடுங்க
மண் நெகிழ மெய்தழுவ
மென்மழைய தாகி
மென்நரம்பில் செம்புனலும்
மெல்லலையாய் மீள
பெண்ணுருவாய் விண்மழையாய்
பேருயிராய் வந்தாள்..
மண்ணடியில் மரவேரும்
மென்வலையைப் பின்னி
மென்னதிர்வில் நெடுநிலமும்
இன்னுயிரைப் பகிர
புண்ணுளத்தில் மின்நரம்பு
புல்முனையாய் முளைக்க
கண்ணுருவாய் வான்மழையாய்
பேருயிராய் வந்தாள்..
உள்ளெலும்பில் உறைபனியும்
மென்தழலில் உருக
மண்சுவரில் மென்விரிசல்
வேர்முனையும் நுழைய
விண்பளுவாய் கண்ணிறுகும்
வன்சுமையும் விழவே
பெண்ணுருவாய் பெருஞ்சுடராய்
பேருயிராய் வந்தாள்..
மண்பளுவில் நின்றவுடல்
மென்மிதப்பாய் எழும்ப
உள்நரம்பில் நின்றசுழல்
இன்னொலியாய் இயங்க
கண்முனையில் தேங்குநிறம்
மென்னொளியாய் முயங்க
பெண்ணுருவாய் பெருவிசையாய்
பேருயிராய் வந்தாள்..
உள்ளறையில் ஓய்ந்தவொலி
உள்ளதிர்வாய் முழங்க
மென்செவியில் ஊமைவலை
மென்னொலியாய் புழங்க
விண்ணதிரும் வன்மழையும்
மென்பனியாய் இறங்க
பெண்ணுருவாய் பெருமிதமாய்
பேருயிராய் வந்தாள்..
புதன், 25 மார்ச், 2026
சிறகுகள் சுமக்கும் நிலம்..
உதிர்ந்த சிறகுகளின் குருதியில்
நனைந்து கிடக்கிறது நிலம்
வண்ணங்களின் சித்திரங்களுக்குப் பின்னால்
யாரும் வாசிக்காத ஒரு பழைய கதை
மண்ணின் மடிப்புகளில்
நெளிந்து கொண்டிருக்கிறது.
ஆகாயத்தின் நீலத்தை
நீ இப்போது குடிக்கிறாய்
ஆனால் உன் கால்களில்
இன்னமும் ஒட்டியிருக்கிறது
புழுதியோடு மல்லுக்கட்டிய அந்தக்
கடின உழைப்பின் ஈரம்.
தசைகள் கிழிபட்டு
முதுகெலும்புகள் நொருங்கி
உன் மெல்லிய சிறகுகள்
ஒரு கூண்டுக்குள் ஒடுங்கியது
திசைகளை அளப்பதற்காக அல்லவா?,
‘மறதி ஒரு துரோகம்’ என
உன் சிறகின் ஓரத்திலிருக்கும்
கரும்புள்ளி சொல்லாமல் சொல்கிறது.
நீ பூக்களில் தேன் தேடித் திரிகிறாய்
அந்தப் பூக்களோ
உனக்காகத் தன்னுயிர் ஈந்த
ஒரு கம்பளிப்பூச்சியின்
கல்லறையிலிருந்து முளைத்தவை
சிறகடிப்பின் ஒவ்வொரு அதிர்விலும்
மண்ணுக்குள் புதையுண்டவர்களின்
மூச்சுக்காற்று இருக்கிறது
வானம் உனக்குச் சொந்தமாகலாம்
ஆனால் உன் அடியில் ஓடும்
நிலத்தின் நரம்புகளில்
உன் பழைய வடிவத்தின்
தழும்புகள் இன்னும் ஆறவில்லை.
விடுதலை என்பது
வெறும் பறத்தல் மட்டுமல்ல
பறக்கும் திசையெங்கும்
தான் ஊர்ந்து திரிந்த பாதையையும்
உதிர்ந்து போன வாழ்வையும்
நெஞ்சில் ஏந்திச் சுமப்பதே
நினைவிருத்தல் என்பது சுமையல்ல
அதுவே சிறகுகளுக்கு
வலிமையைத் தரும் காற்று,
பட்டாம்பூச்சி ஒருபோதும்
கம்பளிப்பூச்சியை மறப்பதில்லை
ஏனெனில்,
அந்த மரணத்தின் சாம்பலிலிருந்துதான்
இந்த வாழ்வின்
வண்ணங்கள் உயிர்த்தெழுந்தன..
புதன், 18 மார்ச், 2026
உடைந்த பிரார்த்தனை..
காலை
உடைந்த ஒரு கடிகாரத்தின் உள்ளே
இன்னொரு நாளாக விழித்துக்கொள்கிறது
நகரம்
ஆன்மா அகற்றப்பட்ட உடல்,
அங்கங்கள் இயங்குகின்றன
இதயம் நினைவாக மட்டுமே துடிக்கிறது.
சாலைகளின் ஓரங்களில்
கேள்விகள் காத்திருக்கின்றன
பதில் என்பது
இன்னொரு அடைபட்ட கதவின் பெயர்.
கோயில்களின் மாடங்களில்
மழை பெய்கிறது,
ஆனால்
பிரார்த்தனைகளின் தொண்டை
உலர்ந்தே கிடக்கிறது.
நாம் கடவுளை நோக்கிக் கூவுகிறோம்
எதிரொலி மட்டும் திரும்புகிறது
அதுவும்
நம் குரலின் சிதைந்த வடிவமாக.
வரலாறு
நொருங்கிய எலும்புகளைப் போல
காலத்தின் மூலையில் கொட்டப்பட்டுள்ளது
அவற்றிலிருந்து
எதிர்காலம் கட்ட முயல்கிறோம்.
மனிதர்கள்
ஒருவரையொருவர் கடந்து செல்கிறார்கள்
முகங்கள் நிறைய முகமூடிகள்
கண்கள் தப்பிக்க வழிகள்.
நாம் கேட்கிறோம்
ஏன் இருக்கிறோம்?
உலகம் பதிலளிக்கிறது
‘இருப்பதற்கான காரணம்
இருப்பதே’
இந்த வெறுமையில்தான்
என் உயிர்
ஒரு சிறிய தீப்பொறியைப் போல
அர்த்தத்தைத் தேடித் தேடித்
தன்னை எரித்து விட முயல்கிறது.
உலகம் கவனிக்காமல்
அபத்தத்தின்
மிகவும் ஒழுங்கான இயந்திரமாக
தன் சுழற்சியைத் தொடர்கிறது
நான் மட்டும்
அந்த இயந்திரத்தின் நடுவில்
ஓர் உடைந்த பிரார்த்தனையாக
நின்றுகொண்டிருக்கிறேன்..
சனி, 14 மார்ச், 2026
மூச்சின் தூர்வை..
வாழ்வென்பது
நேர்ப்பட்ட பெருவழியன்று,
அஃது உவர்காற்று
அலைக்கழித்துச் சிதைத்த
கிழிந்த பாய்மரம்,
நினைவுகளின் தையல்களொவ்வொன்றும்
உடம்பின் வடுக்களோடு
உரசிக்கொண்டு
புதிர்ததும்ப திசையற்று நிலைகொள்கிறது,
துணையெனத் தொடர்ந்த முகங்கள்
பெருவெள்ளம் வடிந்தபின்
எஞ்சிநிற்கும் மணல் திட்டுகளாய்
ஈரமிலா நிலத்தில் புதைந்து மறைந்தன,
சந்திக்கவே இயலாதெனக்
கருதிய உறவுகள்
முன்னறியாத் திசையின் காற்றாய்
வேற்று நகரின் நிழலில்
தோல் தீண்டித் திகைக்க வைக்கிறது
இவ்வுடல்
இப்போது வெறும் ஊனன்று
சிதைந்து கிடக்கும் நிலத்தின்
வரைபடம்,
இதில் தழும்பாய் எஞ்சிக் கிடக்கும்
நினைவுகளென்பது
ஆறிய காயமல்ல,
உறக்கமற்ற இரவுகள்
கடித்துக் குதறிய
காலத்தின் தடம் அழிந்த
நிலப்பரப்பு,
மெல்ல மெல்ல உட்கசிந்து
உவர் நீர் நிலத்தை அரிப்பதாய்
நினைவுகள் உள்ளிருந்தென்
இருப்பின் ஆழத்தைத் தின்னுகின்றன
தொடர் சங்கிலியாய் நீளும்
வாழ்வின் இந்த வளையத்தை
நினைவின் இரைச்சலற்று,
துயரத்தின் கறை படிந்த நிழலற்று,
வலி இன்றி மெல்லக் கழற்றிவிட
இப்போதோர் ஆசை எழுகிறது
வாழ்க்கை இப்போது
கேள்வியாகத் தெரியவில்லை
அது கரை தேடாத மெதுவான
உயிப்பு அலையாய்…
திங்கள், 2 மார்ச், 2026
அரை மீசையின் தீர்க்கதரிசனம்
செதுக்கிச் சீராக்கிய
அந்தச் சிறு மீசையின் ஓரத்தில்
தாய் நிலத்தின் நடுக்கம் குடியிருந்தது
அவன் தனது சொந்த மண்ணின்
வேர்களைத் தடவுகிறான்
ஆனால் அங்கே ஈரம் இல்லை
வங்கியின் இரும்புக் கதவுகளும்
மை படிந்த காகிதங்களும்
அவன் காற்றைத் திருடிச் சென்றிருந்தன.
வந்தேறிப் பறவைகளின் சிறகுகள்
அவன் வானத்தை மறைத்து நின்றன
அவன் காலடியில் இருந்த மண்
அவனுக்கே அந்நியமானதை எண்ணியபோது
அவனது நரம்புகளில்
அடக்கப்பட்ட ஆவேசத்தின் கசப்பு
கரும்பாறையெனத் திரண்டது.
கடல் அலைகளின் ஓசையை விட
அவர்களின் கூச்சல்கள்
தனியாக உரக்கக் கேட்கின்றன
வெள்ளித் திரைகளில் அவர்கள்
காயங்கள் மட்டும்
மினுமினுக்கும் வைரங்களாய்
விற்கப்படுகின்றன,
ஆனால் உலகப் போர்களில்
மடிந்து போன பெயரற்ற மனிதர்கள்
எங்கே போனார்கள் ?
மண்ணோடு மண்ணாய் போன
கோடிக்கணக்கான எளியவர்களின்
குருதி காய்ந்த சுவடுகள் எங்கே ?
இவர்கள் கொல்லப்பட்டதாய்
காட்டப்படும் கழிவிரக்கக் கணக்கில்
எண்ணிக்கையின் நீளம்
உண்மையானது தானா ?
அடிக்கப்பட்ட முத்திரைகளும்
அடகு வைக்கப்பட்ட துயரங்களும்
அவர்கள் வலியை மட்டும்
புனிதமாக்கிச் சிரிக்கின்றன
மற்றவர்களின் கண்ணீர்
உப்புக் கடலில் கலந்த
வெறும் நீர் தானா ?
அந்தப் பாதி மீசைக்காரன்
இவர்களை நான்
ஏன் கொன்றேனென
இனி வரும் உலகு அறிவதற்காக
மீதமிருந்த சிலரை விட்டுச் சென்றான்
ஏன் அவன் இவர்களை மட்டும்
மரணத்தின் பள்ளத்தாக்கிற்கு
துரத்தினானென்ற
கேள்விக்கான விடை..,
பாலஸ்தீனக் குழந்தைகளின்
அப்பாவிக் கண்களில்
திட்டமிட்ட போர்களால்
அழிக்கப்படும் ஏதுமறியா மக்களின்
வழிந்தோடும் குருதியில்
உலகின் ஒவ்வொரு மூலையிலும்
இடம்பெறும் சகல வகையான
சதிகளிலுமென
அறமற்ற அத்துணையிலும்
நிறைந்து போய்க் கிடக்கிறது
வரப்போகும் காலத்தின் கைகளில்
அது குருதி தோய்ந்த சாட்சியமாய்
இருக்கட்டும்..
வெள்ளி, 13 பிப்ரவரி, 2026
கரைதலின் வரைபடம்..
வியாழன், 12 பிப்ரவரி, 2026
நத்தின் கூடு..
புத்தன் ஏகினான்
அவனகன்ற திசை இப்போது
பாரமான ஒளியால் நிறைந்திருக்கிறது.
காலம் தன்
பருப்பொருட் போர்வையைக் களைந்துவிட்டு
சிறு நத்தையின் சுரிவளைக்குள்
நிர்வாணமாய் நுழைந்து கொண்டது.
இந்தச் சிறு சுண்ணச் சுருள்
வெறும் ஓடல்ல,
அண்டத்தின் பேரிரைச்சல் வடிகட்டப்பட்டு
மௌனமாக உறைந்துபோனதோர்
உள்வெளி,
புற உலகைத் தின்று தீர்த்த
மகா தாகம் இப்போது
இச்சிறு ஈரப்பதத்துள்
தன்னைத் தானே கண்டடைந்து
அடங்கியிருக்கிறது.
இப்போதில்
நத்தையின் கூட்டுக்குள் இருப்பது
அமைதியல்ல,
அஃதோர் உருவம் இழந்த பிரபஞ்சத்தின்
மீள முடியாத் தியானம்.
யாரும் அற்ற அந்தப் பீடத்தில்
இன்மை முடிசூடிக் கொள்கிறது..
ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026
நிழற்கரங்கள் ஆட்டும் நிலம்..
வறண்ட நிலத்தின் வெடிப்புகளுக்குள்
இரத்தம் கசிவதைச் செதுக்கிச் செதுக்கி
ஒளித்து வைத்திருக்கிறது
வணிகப் பேனா.
-
வரைபடத்தில் விழும் ஒவ்வொரு கோடும்
கூர்வாளின் நுனியால்
வரையப்பட்டதல்ல,
பங்குச் சந்தையின்
புள்ளிகளால் இழுக்கப்பட்டவை.
-
மகுடங்கள் இங்கே மரத்தாலானவை
அவற்றைச் சுமக்கும் தலைவர்களோ
நூல் பிடித்து ஆட்டப்படும்
நிழல் உருவங்கள்.
-
யார் எப்போது
அழ வேண்டும் என்பதையும்
யார் எப்போது
எரிய வேண்டும் என்பதையும்
கடலுக்கப்பால் அமர்ந்திருக்கும்
தங்க நகங்களை உடைய
அந்த மாயக்கரங்கள்
ஏற்கனவே எழுதி மூடிவிட்டன.
-
அமைதிப் புறாக்கள்
ஆயுதத் தொழிற்சாலையின்
புகைபோக்கிகளாக மாற்றப்பட்டுவிட்டன,
குண்டுகள் விழுமுன்னரே
சிதைந்த சுவர்களைக் கட்டியெழுப்பும்
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விடுகின்றன.
-
இங்கே
வெற்றியும் தோல்வியும்
ஒரே நாணயத்தின் இருபுறங்கள்
அந்த நாணயம் மட்டும்
எப்போதும் அதிகாரத்தின்
பையிலேயே இருக்கும்
-
தனித்தொரு மனிதனின் கண்ணீர்
இங்கே ஒரு புள்ளிவிவரம் மட்டுமே,
உலகெனும் பெரும் பலகையில்
நாம் காய்கள் கூட அல்ல
காய்கள் நகரும் போது
தெறித்து விழும் தூசிகள்
இல்லை அது கூட இல்லை,
-
வரலாறு என்பது இங்கே
நடந்தவற்றின் தொகுப்பல்ல
நடத்தப்பட வேண்டியவற்றின்
முன்கூட்டிய வரைபடம்
-
துப்பாக்கிக் குழல்கள்
நிதியைத் துப்புகின்றன
சிதறும் சதைத்துண்டுகள்
யாரோ ஒருவனின் வங்கிக் கணக்கில்
இலாப இலக்கங்களாய் மாறுகின்றன.
-
அவர்கள் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்
ஏனெனில்
தோல்வியையும் அவர்களே
கட்டமைத்திருக்கிறார்கள்..
புதன், 28 ஜனவரி, 2026
இருளின் தையற்காரனும் எரியும் நரம்பும்..
வதைப்பவன் கைகளில்
இருள் ஒரு கருவியாகத் திரள்கிறது
ஒவ்வொரு அடியிலும் அவன்
தனது அகத்தின் சாளரங்களை
நிலக்கரி பூசி அடைக்கிறான்.
-
அவன் ஆன்மா
ஈரமில்லாத ஒரு பாழ்ங்கிணறு
வீழ்ந்த கற்களின் ஒலியைக்கூட
வெளியே விடாத கருங்குழி
அவன் குருதியில் இப்போது
நிழல்கள் உறைகின்றன
அவன் தொடும் இடமெல்லாம்
காலம் தன் நிறத்தை இழக்கிறது.
-
வதைப்பவன் என்பவன்
தனது விதியால் கைவிடப்பட்ட
ஒரு தையற்காரன்
பிறர் வலிகளால் அவன் தைப்பது
தனக்கான சவக்கோடியை மட்டுமே
-
ஆனால், வதைபடுபவன்
அவன் உடலின் ஒவ்வொரு திறப்பும்
இப்போது ஒரு சுடரின் வாசல்
தசைகளைக் கிழிக்கும்போது
வெளியேறுவது குருதியல்ல
காலங்காலமாகத் தேங்கியிருந்த
ஆழ்மன இசை.
-
நரம்புகள் அறுபடும் கணத்தில்
அவை நரம்புகளாக இருப்பதில்லை
யாழின் தந்திகளென மீட்கப்படுகின்றன
வலியில் துடிக்கும்போது
அவன் ஆன்மா
தன் கூட்டைத் துறந்து
வானத்தின் அதீத நீலத்தைத் தொடுகிறது.
அங்கே சொற்கள் இல்லை
அங்கே வதைப்பவன் இல்லை.
-
தூய்மையான ஒளியால் நெய்யப்பட்ட
ஒரு பறவையின் சிறகசைப்பாய்
வதைபடுபவனின் உள்ளொளி
தன் சிறைநீங்கி விளிக்கிறது.
-
இருள் என்பது வதைப்பவனின் முகவரி
ஒளி என்பது வதைபடுபவன்
கண்டடைந்த ஒரு புதிய திசை..
செவ்வாய், 27 ஜனவரி, 2026
மீதமுள்ள பொருட்கள்..
மேசையின் மேல் ஒரு உடைந்த திசைமானி,
அதன் முள்
எந்தத் திசையையும் காட்டாமல்
தன்னையே சுற்றிக்கொள்கிறது.
-
சுவரில் தொங்கும் வரைபடத்தில்
கடல்கள் காய்ந்து கறை படிந்திருக்கின்றன,
நாடுகள்
பெயர்களற்ற வெறும் கோடுகளாகச் சுருங்கிவிட்டன.
-
இழப்பதைக் கற்றுக்கொள்வது
ஒரு கலைதான் என நாம் அறிவோம்
முதலில் சாவிகளைத் தொலைத்தோம்
பிறகு அந்தப் பெயர்களை,
இப்போது
நாமாகவே உருவாக்கிய
அர்த்தத்தின் கடைசி இழை அறுந்து விழுகிறது.
-
துருவேறிய ஒரு சாவி
எந்தப் பூட்டையும் திறக்கப்போவதில்லை
ஆயினும் அதனை நாம்
கவனமாக மெருகேற்றுகிறோம்,
-
தூசு படிந்த அலமாரியில்
பயன்படுத்தப்படாத கோப்பைகள்
ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளும் சத்தம்
வெறுமையின் துல்லியமான இசை.
-
வெளியே,
பறவை ஒன்று
அடையாளம் தெரியாத ஒரு மரத்தில் அமர்ந்து
தன்னுடைய பழைய பாடலை
மறந்துபோன தொனியில் இசைக்கிறது
அதன் அலகுகளில்
ஈரம் எதுவுமில்லை
வெறும் உலர்ந்த காற்றை அது
தன் சுவாசமாக மாற்றிக்கொள்கிறது.
-
இந்தக் குடிமையின் சிதைவு
ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை
ஒவ்வொரு கல்லாக நகர்ந்து
இறுதியில்
எதுவும் தாங்காத ஒரு அத்திவாரமாய்
வெற்றுத் தரை மட்டும் எஞ்சியுள்ளது.
-
முற்றத்தில் கிடக்கின்றன
சிதைந்த பொம்மைகளும்
திறக்கப்படாத கடிதங்களும்,
அவற்றின் மேல் பெய்யும் மழை
மண்ணை நனைக்கவில்லை,
மாறாக,
இருக்கின்ற கொஞ்ச ஈரத்தையும்
உறிஞ்சி எடுத்துச் செல்கிறது.
-
நாம் எதையோ தேடுகிறோம்
ஒருவேளை,
தொலைந்துபோதொரு
சிறுதுளிப் பொருளை அல்ல,
பொருள் எதுவுமே இல்லை என்கிற உண்மையை
எளிதாக ஒப்புக்கொள்ளும்
அந்த ஒரு கணத்தை..
வியாழன், 22 ஜனவரி, 2026
உதிரத்தின் திணை விழிப்பு..
எங்கிருந்தோ எழும் பேரோலம்
உன் செவிப்பறையைக் கிழிக்கையில்
உன் உண்ணாக்கு அதிர்ந்து
முள்ளந்தண்டு சில்லிடுகிறதா
ஆயின்
அயல் நிலத்தில் பெயரற்று வீழ்ந்தவன்
உன் குருதி வழி உறவு
எங்கோ ஓர் எளியவனின்
பசிநரம்பு தெறிக்கையில்
உன் வயிற்றுச் சுவர்கள்
உள்நோக்கிச் சுருங்கிப் புலம்புகிறதா
வா..
என் கைகளைப் பிடித்துக்கொள்
நீயும் என் உடன் பிறப்பு
விழிப்பு என்பது
தூக்கம் கலைந்த விழிகளின் வரவு அல்ல
அது
அநீதி எரியும் திசையெல்லாம்
தன் சதையைப் பிய்த்து
நெருப்பாய் வீசும்
ஒரு ‘திணைத் துளக்கம்’
பனந்தோப்புக் காற்றினூடே
பாயும் தோட்டாக்களின் ஈனச் சிரிப்பு
முள்வேலிக் காடுகளில்
தொங்கி நிற்கும்
எம் மக்களின் கிழிந்த கனவுகள்
இவை உன்னைத் தூங்க விடாமல்
உள்நின்று உலுக்குமெனில்
உன் அரசியல் என்பது
வெறும் சொல்லல்ல
அது சூல் கொண்ட நிலத்தின்
பேரெழுச்சி
நூறு நதிகள்
வெவ்வேறு திசைகளில் ஓடினாலும்
அநீதியின் உவர் நிலத்தில்
அவை சங்கமிக்கும் பெருங்கடலே
நம் தோழமை..
ஞாயிறு, 18 ஜனவரி, 2026
நிலமெனும் உயிர்மூச்சு..
ஏதிலாளனே..!
நிலைகொள்ளாச் சொற்களுக்கிடையே
கடந்து செல்வோயே
இதனை எழுதுக
எம் உடலென்பது
இம் மண்ணின் நுண்துகள்
எம் உயிர்ப்பென்பது
இக் கடற்காற்றின் சீற்றம்
யார் நல்கியது இவ்வுரிமை
யாரும் ஈந்ததல்ல இது
கருவறைக் குருதியோடு கலந்துயிர்த்து
தொப்பூள் கொடியால்
இந்நிலத்துள் வேரூன்றி
பிறப்பொடு வந்த பெரும்பொருள்
வேரூன்றிய பனையின் செம்மாப்பில்
கருகிய மடல் சுமந்த
தீயெனக் கொதிக்கிறது
எம் முன்னோர் புதைத்த
ஈமப் பெருங்கற்கள்
இந்நிலத்தின் உரிமையைப்
பேசாப் பெருமொழியால்
எக்காலத்தும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்
அமைதி என்பது
எம் நாவறுந்த நிலையும் அன்று
அஃதெம்
புதைக்கப்பட்ட சாம்பலினின்று
மீளத் துளிர்க்கும் ஆதி விதையின்
ஆழத்து அடக்கம்
எழுதுக..!
நாங்கள் நிலமற்ற நிழல்கள் அல்லர்
சிதைக்கப்பட்ட நிலத்தின்
மாறாச் சான்றுகள்
எம் குருதி தோய்ந்த இந்நிலவரைபடம்
கடலலைகள் தீண்டத் தீண்ட
கூர்மைபெறும் பெரும்வாள்
எங்கள் விடுதலை என்பது
வேறெங்கும் உளதன்று
அதுவே எம்மூச்சின் முதலசைவு
எம் வாழ்வின்
முடிவிலாத் தொடர்ச்சி..