Friday 28 February 2020

திருவை அழை உந்தன் திருவடிக்கே..

ஆற்றங்கரை மரம் போல் வாழ்வின்
அடுத்த நொடி அறியா அச்சம்
கூற்றுவனாய் என்னைக் கொல்லும்
கொடுமையினின்றென்னை மீட்டு
தேற்றி உளமாற்றி கரை மேல்
ஏற்றுவையோ நல்லூர் வேலா..?

காற்றிடையில் பட்டுலையும்
கலவரின் மனமாய் ஆன
நேற்றையும், இன்றும் இன்னும்
நீளுமோ வேலா? மேலும்
சாற்றவோர் வார்த்தை இல்லை
சக்தியும் இல்லை, பாராய்..

இருபாடும் எரிகின்ற கொள்ளியின்
இடைமாட்டி
எதுசெய்வதறியாது எரிகின்ற
எறும்பைப் போல்
ஒருதிக்கும் அறியாது உடைந்து
நொய்ந்துள்ளே
உருக்குலைந்து போகின்றேன்
வாழ்வு நாளைக்கு
தெருக்கிடந்துலையுமோ தெரிகிலேன்
அதன் முன்னர்
திருவை அழை உந்தன் திருவடிக்கே
என் வேலா..