Thursday 23 February 2012

எங்களை மறந்து விடாதீர்..

நேற்றந்த நிலவினிலே
இருந்த ஈரம்
இன்றிந்த நிலவினிலே
இல்லை, பூக்கள்
எதனிலுமே உயிரில்லை
வாசமில்லை
புன் சிரிப்புக் கூட
பூக்க முடிவதில்லை

போரின் பின்
மயானம் போல் மனசு
மதகுடைஞ்சு கிடந்தாலும்
ஏன் எரிந்தார் தினமும்
என்கின்ற கேள்வியிலே
தான் எரிந்து கொள்கிறது
தன்னுள்ளே..

விடுதலைப் போராட்டம்
நெடிதென் றறிந்திருந்தும்
இடை நடுவில் விடை பெற்றும்
போய் விடலாம் என உணர்ந்தும்
கடைசி வரை விலகாமல்
கை கொடுத்தார், ஏன் கொடுத்தார்?

புகழ் வேண்டும் போற்றட்டும்
வருகின்ற சந்ததிகள்
புழுகட்டும் என்ற புனைவிற்கா
இல்லையடா
போரிட்டு ஏன் மாய்ந்தோம்
என்பதை நீர் புரிவதற்கும்
ஏன் மண்ணில் போராட்டம்
எழுந்ததென்று வருங்காலம்
தானுணர்ந்து தாகத்தின்
தாற்பரியம் அறிவதற்கும்
வானுணர்ந்து போனார்கள்
வல்லவர்கள், போகையிலே
ஒன்றை மட்டும் தான்
உங்களிடம் கேட்டார்கள்

வேறொன்றும் அல்ல அது
நீங்கள் ஒரு போதும்
’எம்மை மறக்காதீர்’ என்பது தான்
எம்முயிரை
ஏன் கொடுத்தோம்? என்பதனை
மறக்காதீர் என்பதுதான்
தியாகத்தை செந்நீரை
வாழ்விருந்தும் துறந்ததனை
ஏன் துறந்தோம்? என்பதனை
மறக்காதீர் என்பது தான்,

காப்புக் கழன்ற கைக் குண்டாகக்
கடக்கிற காலம் மீதிலே வாழ்கிற
வாய்ப்பும் தொலைந்து வளமும் சிதைந்து
வரண்டு போயுள என்னின மக்களே!

நார் நாராய்க் கிழிந்துள்ள
நம் மண்ணும், தினமிங்கே
சாவடிந்தே ஊர் விடியும்
சந்திகளும், மனம் விம்மி
வீங்கிச் சிவந்துள்ள கண்களையும்
மகன் வளர்ந்து
ஏன் என்று கேட்டெழுந்து
நிற்கையிலே சொல்லுதற்கு
மறக்காதீர் எம் கதையை
என்பது தான், வேறெதற்கு?

நடந்து விடாதென்பதையும்
நடத்துவித்துக் காட்டுதலே
உடைந்தும் உயிர் கொள்ளும்
உயிர்த் தினவு செறிந்தவொரு
திடம் மிகுந்த விடுதலைப் போராட்டத்
திருக் கீதை, மனஞ் சோரேல்!

வலி இன்றி ஒரு போதும்
வரும் கதவு திறக்காது
சுதந்திரமும் இலவசமாய்
ஒரு போதும் கிடைக்காது..

No comments:

Post a Comment