Thursday 23 February 2012

சுதந்திரத்தின் பின்னான சோகம்..

நேற்றையைப் போலவே
இன்றுமோர் காலையும்
மாற்றமே இன்றி விடிந்தது
ஆயினும்
தேற்றவோ அன்றித்
தேம்பி நின்றுருகவோ
வெற்றியைப் பற்றி
விளக்கவோ விடுதலை
வென்றமை பற்றி
விண்ணாணங்கள் பேசவோ
நாட்டிலே யாருளார்
நம்முடன்..?

பெற்றதைப் போற்றுதல்
யாருடன்? பீற்றுதல் யாருடன்..?
காற்றினில் சுதந்திர
கானங்கள் கேட்பினும்
வீற்றுளார் யாரினி
எம்மிடை..? இச்சுவை
சாற்றிட ’சம காலத்திலெம்முடன்
போற்றிட வாழ்ந்தவர்
போரிடை போன பின்”

பூத்தான் வளர்ந்தென்ன ?
புல் தான் மலர்ந்தென்ன ?
ஆர் தான் ஆண்டென்ன
அடுத்தென்று ஓர் வெறுமை
போர்வைக்குள் என்னைப்
புதைத்தாலும், மறு நொடியே
ஏர் பூட்டி இன்னும்
உழுவதற்கும், பாத்தி கட்டி
நீர் பார்த்து உள்ளே விடுவதற்கும்
இளம் பயிர்கள்
எந்தத் தடையுமின்றி எழும் வரையும்
உந்தனுக்கு
சொந்தச் சுகமுமில்லை ஓய்வில்லை
என்றன்று
போனவர்கள் சொன்ன கதை
போர்வையினை இழுத்தெறிய
நானிரவைக் கிழித்தபடி
நகருகிறேன்.. நகருகிறேன்..

No comments:

Post a Comment