Thursday 23 February 2012

காலமானார்..

கால்வாரிக் கழுத்தறுத்து
கண்டபடி விமர்சித்து
இருக்கும் போதில்
எம்மால்
இயன்றளவும் விலக்கி வைத்து
நேற்றோர் பெருங் கலைஞன்
நினைவு தப்பி இறந்து விட்டான்.

எல்லோரும் கூடி
ஒரு நிமிடம் மெளனித்து
பல் வேறாக அவன்
பெருமைகளைப் பறை சாற்றி
’எமக்குள்ளே பிரச்சினைகள்
ஆயிரந்தான் இருந்தாலும்
என்றிழுத்துக் குரல் நடுங்கச்
செருமலுடன் கண் துடைப்போம்!’

வெறுஞ் சொண்டால்
எம்முடைய
விளக்கமில்லாக் குழந்தைகட்கும்
விளக்குவோம்
அவன் பெரிய மனிதனென்று!

இறுதிவரை
’எந்தக் கொள்கைக்காய்
இயன்றவரை நடந்தானோ
அந்தக் கொள்கை வெறும்
கொள்கையாக இருந்தாலும்’

எந்தக் கனவுக்காய்
அவன் வாழ்ந்திறந்தானோ
அந்தக் கனவு
வெறுங்கனவாக மட்டுமல்ல
’இறந்தவனின் கனவாக
இருக்குதென் றறிந்தாலும்’

எங்களது பெருமைக்காய்
அவன் பெருமை பேசிடுவோம்
இறந்தவன் மீண்டு மென்ன
எழுந்தா வரப் போறான்..?
எங்களது பெருமைக்காய்
அவன் பெருமை பேசிடுவோம்..!

No comments:

Post a Comment