Wednesday 15 February 2012

யார்க் கெடுத்துரைப்போம்...? (சிறை)

மணி அடிக்கச் சாப்பாடு
மனசின்றி வாங்கி வந்தால்
பிணி பிடித்த உடல்களென
பெரும் நாற்றம் சோற்றுக்குள்

ஏதோ சொல்லவென
வாயெடுக்க அலகுடையும்,
குளம்புத்தூள் கண்ணைக்
குளமாக்கும், வேதனையில்
கை உதறி முனகி பல்கடித்தால்
தாடையில் நோ

தெய்வமே.! என நினைக்க
உச்சி வலி உயிரிழுக்கும்
பழைய நினைவோடும்
பார்க்கின்ற ஆவலொடும்
இளைய நினைவலைகள்
கம்பி எண்ண  இருளும்.

ஏன் நான் உள்ளே
எதற்காக..? என்ற மன
வீண்கேள்விகள் மட்டும்
விடை இன்றி ரா அடையும்,

இரவுச் சாப்பாடு வேறு விதம்
நான் தனியே
கரவான மனிதன் என்ற
கட்டுக்குள் அடைபட்டு
இருபது நகமும் இனியில்லை
என்பதனால்
அரு உருவமான அதற்குள்ளே
குண்டூசி விடையில்லை,
குதி,தோள் மூட்டு
குதத்தின் மேல் இடுப்பு
பதியாமற் தடமின்றி
தடியிறங்கும் பதிலில்லை,
சுட்ட கம்பிகொண்டு
சூடாறாக்குதத்துள்ளே
விட்டெடுக்க அம்மா..முருகா
அதைத்தவிர வரவில்லை
கட்டாயம் அறு சுவையும்
தட்டின் முன் என்பதனால்
வெட்டியபடி நாசி
மூக்குள்ளே பெற்றோல்
முனகல் தான்

எட்டி மிதித்துவிட்டு
அவர் போக எனக்குள் விடியும்
பட்டும் படாமல்
உயிரிருக்கும் அறிகுறிகள்
தெரியும்
எட்டாத உயரத்து
நிலைக்குத்துத் துவாரத்தால்
சொட்டுக்காத்து உள்ள வர
ரணம் குளிரும்

அண்ணாந்து பார்த்தேன்
வெண்புகார் நீலவான் குருவியும்
கண்ணும் நிலைகுத்தி
அசையாமல் ஊர் காணும்..

No comments:

Post a Comment