Thursday 23 February 2012

காலந்தான் எல்லாம்..

நாய் நக்கிப் போட்ட
பூவரசங் குளையாலே
வாய் உள்ள தேவாங்கு
சிற்சிலது புரியாமல்
எனது தலையெழுத்தை
எழுதி விடப் பார்க்கிறது

தனது நிலையறியாத்
தாழ்வாரப் பூச்சி எல்லாம்
என் மேலே ஏறி
ஓடி விட்டுப் போவதிலே
கண்ணும் கருத்துமாக
இருக்கிறது

உணர்வதால்
மழைக்கு மட்டும் உணவெடுத்து
வாழுகின்ற போக்குள்ள
பிழை சரி தெரியாப்
பிள்ளையார் எறும்பு கூட
எனை
தான் வரும் போது
எழுந்து நிற்க வேண்டும்
என்று
உரத்த கட்டளை இடுகிறது
இல்லாட்டால்
திரத்தப் படுவேனாம்
’அவருலகால்’
எனதுணவின்
எல்லா வாயில்களும்
இனி அடைக்கப் படுமாம்!
சொல் ஏர் உழவனின்
சொற் பிறப்பைத் தடுப்பாராம்!

காலந்தான் எல்லாம்
கடவுளே என் தலை எழுத்தை
ஏனப்பா
எச்சிற் குளையால் எழுதுகிறாய்..?!

No comments:

Post a Comment