Saturday 1 November 2014

போதுமினி போ..

வீண்நேரம், வெறும்பாரம்
வீழ்ந்தாலும் உடல்திருப்பி
ஏனென்று கேட்பதற்கும்
எவருமில்லாதொரு காலம்
போய்க்கொண்டிருப்பதை நீ
புரிகின்றாய், தெரிந்திருந்தும்
வாய் நிறையச் சிரிப்பு
வாழவேண்டுமெனுமெண்ணம்
ஏனுனக்கு எழுகிறது?
என்னவகை ஆசையிது?

உடல் சொல்லிப் பார்க்கிறது
உள்ளிருந்து எழத்திணறித்
தடக்கிவரும் மூச்சும்
தன்னால் முடிந்தவரை
எச்சரித்தும் உனக்கேனோ
எந்தப் பயமுமில்லை
உளம் கசியும் அன்போடு
உனையிங்கே எவ்வுயிரும்
நலம் வாழ நினைத்ததில்லை என்றும்
நன்கறிவாய் 
இருந்தும் எதை நம்பி
இன்னும் நீ நடக்கின்றாய்?

இருந்தாலும் இதே வாழ்வு
இறந்தாலும் அதுவே தான்
வருந்தியபடி இடையில்
வாசலிற் தரித்து நிற்றல் 
பேராசை மிகப்பிடித்த
பெருநோயென்றுணராயா? 

இரும்பு மனசுருக
எரிதழலும், வெளியேறா
இரணிய உயிர் பிளக்கக்
கூர்நகமும் கொண்டுன்னை
கருணைக்கொலை செய்யும்
காலத்தை இனிமேலும்
இழுத்தாலுன் முடிவு
எல்லோரும் நகைத்தெள்ளும்
அழுகுங் கறுமமாய்
ஆகிவிடுமெனுங் கணிப்பை 
காதுபடக் கேட்டுமென்ன
காத்திருப்பு? இப்போதில்

எஞ்சிப் போய்க்கிடக்கின்ற
ஏதோவோர் பெயரோடும்
அஞ்சான், எதற்குமே
அசையான்தான் ஆனாலும் 
அன்புக்கு முன்னால்
அப்படியே சரணடைந்து
என்புருக நிற்பான்
என்கின்ற நினைவோடும்
புறப்படு நீ, இனிப்போதும்
போய்விடடா சென்று விடு..

Friday 3 October 2014

சதுரங்கம்..

உன் வாழ்வில் ஒரு போதும்
உள் நுளையேன் என்பாள்
எனக்கும் தான் ஒரு வாழ்வு
இனி வேண்டாம் என்பான்
மனக் கண்ணுள் இருவருக்கும்
மறைந்திருப்ப தெதுவென்று
நினைவறியும், நெஞ்சம்
நிசமறியும், ஆனாலும்
தாக்கப் பட்டறிவின்
தாராள அனுபவங்கள்
தள்ளிப் போய் நில்லென்று
தவிப்போடு உடுக்கடிக்கும்

பேச்சென்னும் இன்பப்
பெருவெளியில் இருவருமே
நீச்சலடிக்கின்ற பொழுதில் முன்னாலே
சதுரங்கப் பலகையொன்றைச்
சாட்டுக்கு வைத்திருப்பர்
அவதானக் காய் நகர்த்தல்
அரங்கேறும், கருக்கலிலே
தவங்கலையும், முன்னிருந்து
தள்ளாடும் பலகையது
மாய மோகினியாய் மறைந்து விடும்
அவன் நனைவான்
அவள் தோய்வாள்
பதின்ம வயதுகளில்
பாரிதுதான் கடைசியென்று
கரமைத்துனம் செய்யும்
கதையாய், நெஞ்செரிந்தால்
இனிமேற் புகைப்பதில்லை
இத்தோடு, என அன்றை
அவ்வேளை கடத்துகின்ற
ஆறுதலாய் நாள் முடியும்

மறுநாள் இல்லையெனின்
அதன் மறுநாள் மறுபடியும்
செருமலுடன் இருவருவருமே
சினைக்காமச் செருக்களத்தில்,
அதே சதுரங்கம், அதே காய்நகர்த்தல்
நனைந்தும் தோய்ந்தும்
நாள் முடிய, வேதாளம்
பனையென்று முருங்கையிலே ஏறும்
மறுபடியும்...

Tuesday 23 September 2014

ஒவ்வொரு குழந்தையிலும் நீ..

இம்முறையும் வெயில்
விளாசி அடித்தது
இலைகள் பழுத்து விழுந்தன
புற்கள் கருகிப் போயின
பின்னர் மழை
குருத்துகளும், பூக்களுமாய்
மரங்கள்
புற்களும் பசுமையாய்,
காற்றோடு குளிர் ஆரம்பிக்கிறது
மறுபடியும் குளிராடையைப்
போர்த்தத் துவங்கி இருக்கிறேன்
இப்படியாய்
பருவங்கள் மாறி மாறி
பல ஆண்டுகள்
ஆனால்
நீ தான் இன்னும் என்னிடம் வரவில்லை

இன்றும் கூட என்னைப் பார்த்து
கை காட்டிச் சிரித்துப் போன
அந்தக் குழந்தையின்
கண்களிலும் உன்னைக் கண்டேன்
இங்கு நான் காண்கிற
ஒவ்வொரு குழந்தையிலும்
ஏதோ ஒரு வடிவத்தில்
எப்படியோ நீ இருந்து விடுகிறாய்

அயர்லாந்தின்
லிவி நதி பாய்கின்ற கரையின்
நடைபாதையில் ஒரு கடுவன் குட்டி
தன் தந்தையின் தோள்களில் ஏறியிருந்து
எண் திசைகளுக்கும் கை காட்டி
கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்
பேசும் கண்களோ சிரிப்போ
ஏதோ உன் சாங்கம் அவனிலும்

என்னையே அறியாமல்
என் தோள்களையும் நெஞ்சையும்
தடவிப் பார்த்த போது
நீயும் என் தோள்களில் இருந்தாய்
நிறையக் கேள்விகள் கேட்டாய்
எல்லாவற்றுக்கும்
நீண்ட நேரம் ஆசையாய்ப்
பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்
உன்னிடம் பேசி விட்டுத் திரும்பிய போது
அருகே நின்றிருந்த ஒருவர்
தன் அறிமுக அட்டையை என்னிடம் கொடுத்தார்
திருப்பிப் பார்த்தேன்
மிக நல்ல மனிதர் போல
ம்.. மனநல மருத்துவர்

நதி பாலத்தைக் கடந்து
நுரைத்துப் பாய்கிற சந்திக்கருகில்
வீதிக் கலைஞனொருவன்
பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்
அருகே அவனது சின்ன மகன்
அவ்வளவு அழகாகத் தலையாட்டி
ரசித்தபடி,
அந்தக் குழந்தையின்
உதடுகளும், இமைகளும்
உன்னதைப் போலவே இருந்தது
அந்த வேளையில் நான்
அவனுடைய தந்தையானேன்

அடம் பிடித்தபடியும்
துள்ளிக் குதித்தபடியும்
தன் தந்தையுடன் செல்கின்ற
ஒவ்வொரு
செல்லக்குட்டி மகனின் கண்களும்
என்னைப் பார்த்துச் சொல்கிறது
இந்தக் கணத்திலே
நீ தான் என் அப்பாவாக இருக்கிறாய்..

Saturday 26 July 2014

சிறையை வேண்டும் பறவை..

மழையும் நிசப்தமும் கூடியிருந்த
ஆழ்ந்த இரவொன்றில்
கூட்டை நெருங்கிய வேடுவர்
அந்தப் பறவையைப் பிடித்துச் சென்றனர்
ஒவ்வொரு இறகாக, ஒவ்வொரு நகமாக
ரசித்து, ருசித்து
தேர்ந்த கலாரசனை மிக்கவராய்,
விதை சிதையும் வாதைதானெனினும்
இணையும், குஞ்சும் நினைவிலாட
தன்னையது மாய்த்துக் கொள்ளவில்லை

எப்படியோ குற்றுயிராய்
அண்டைக் கடல் தாண்ட அங்கேயும்,
நாட்களோட
வதை வழமையானதாகிப்
பழகிப் போயிற்றுப் பறவைக்கு
குஞ்சும், இணையும்
இணையும் நினைவும்
அத்தனை ரணங்களுக்கும்
ஒளடதமாய்

கடல்கள், மலைகள் தாண்டிக்
கண்டம் கடந்தும்
கூண்டு வாழ்வே அதன்
குறித்துவைத்த விதி போல!
வதைக்காமல் சிதைக்கும்
வல்லமை மிக்கோராய் வெள்ளையர்
குளிரும் தனிமையும் குதறிச் சிதைக்க
கால நீட்சியும் தான்,

சிறகடிப்பதையும் பறப்பதையும் கூட
மறந்து போயிருந்த இருட் பொழுதில்
திடீரென ஒருநாள் அவர்கள்
கூண்டைத் திறந்து விட்டார்கள்

வெளியே வந்த போது
உலகு வேறுமாதிரி இருந்தது
திக்குமுக்காடிப் போனது பறவை
வாழத் தெரியவில்லை, வாழ முடியவில்லை

எனினும்
ஆயிரம் ஆசைகளோடு
இதையும் மேவி எழுவேன்
இனியெலாம் சுகமே வாவென
இணையிடம் சொன்ன போதுதான்
தான் மிகவும் தாமதித்து விட்டேன்பது
பறவைக்குப் புரிந்தது

இப்போதில்
தன்னை மீண்டும்
கூண்டுள் அடைக்குமாறு
அவர்களிடம் வேண்டிக் கோரியிருக்கிறது
பறவை..


Saturday 17 May 2014

புதுவை இரத்தினதுரை - எங்கள் கவிஞன்

பூவரசம் வேலிகளைப்
புலுணிகளைப் பற்றியெல்லாம்
நாவரசன் ஒருவன்
நம்மிடையே பாடி வந்தான்

கதியாற் கால்மரத்தைக்
கல்மதில்கள் தின்றது போல்
அதிலிருந்த பறவையெல்லாம்
அலமலந்து எங்கேயோ
விதியை நொந்தபடி
வேறுதிசை சென்றது போல்
ஈரலிப்பைப் பேணி நின்ற
எத்தனையோ குளங்களினை
கோரமாய்க் கட்டடங்கள்
குதறிவிட்டு எழுந்தது போல்

எம் வளத்தைப் பாடி நின்ற
எம்முடைய பாடகனின்
உம்மென்ற குரல் கூட
உலகிற்குக் கேட்காமல்
இல்லாத கடவுளரின்
இருப்பைப் போலவன் நிலையை
பொல்லாத காலத்தோர்
புதைத்தெங்கோ வைத்து விட்டார்

கறுப்பன் நெல்லினத்தைக்
கலப்பினங்கள் வந்திறங்கி
அறுத்தழித்து மெல்ல மெல்ல
ஆக்கிரமித்திருப்பது போல்

இயற்கையுரச் செழிப்புதனை
இன்று வந்த செயற்கையுரம்
பயன்பாடு அழகென்ற
பகட்டாற் தள்ளி விட்டு
விளைநிலத்தை, நல்
விதை முளைக்காத் தரிசாக்கி
களைநிலமாய் மாற்றியெங்கள்
கனவுகளை அழித்தது போல்

எமக்குவக்கும் மண்மொழியில்
எம்முடைய கனவுகளை
அமைத்தெமக்காய் ஆக்கி வைத்த
அற்புதப் பாடகனை
பருவப்பிழை பொழிந்த
பாழான சூறையொன்று
தெருவில் பலர் பார்க்கத்
தேடியள்ளி இன்று வரை
உருவமே தெரியாமல்
உள்ளிருட்டில் எங்கேயோ
கருகி உயிர் கசிகின்ற
கம்பிகளுள் வைத்துளது?

கண்ணாலே பாடகனைக்
காண்கின்ற வரமெமக்கு
எந்நாளில் வாய்த்திடுமோ?
என் செய்வோம்? அது வரையில்
முன்னாலே இருக்கின்ற
முற்றத்தில் வளவுகளில்
அவன் நினைவில் மரமொன்றை
அன்போடு நட்டிடுங்கள்
ஒவ்வொரு கெட்டும்
ஒவ்வொரு கவியாக வந்து
பச்சைப் பசேலென்ற
பசுங்குளிரில் அவன் பெயரை
இச்செகமெங்கும் வீசி எழுதட்டும்
அவன் வாழ்வான்..

அழுவதற்கேனும் அனுமதியுங்கள்..

ஆண்டுகளாய் நாமின்னும்
அடக்கியுள்ளே வைத்துள்ள
மீண்டெழுந்து விடமுடியாச் சோகத்தை
தொண்டைவரை
குமுறி உள்ளேயே குமைந்தெரிந்து கிடக்கின்ற
வார்த்தைகளுள் அடக்கேலா வலியை
வாய் விட்டு
கத்தி அழுதெங்கள் கண்ணீரைப் பூவாகச்
செத்தழிந்து எம் சனங்கள்
சிதைவடைந்த மண்மீது
பெய்து எம் மனசின்
பெரு நெருப்பைத் தணிப்பதற்கு
ஓர் வாய்ப்புக் கொடுமென்றே
உம்மை நாம் கேட்கின்றோம்

நிழற்படங்கள் இல்லையிங்கே
நினைத்தவுடன் பார்ப்பதற்கு
நினைவிடமும் இல்லையெங்கள்
நெஞ்சிறக்கி வைப்பதற்கு
கண்முன்னே அவர் வீழந்த
கதை சுமக்கும் நிலமொன்றே
இன்னும் கிடக்கிறது ஏதிலியாய்
அதன் மேலே
ஒரே ஓர் மெழுகுவர்த்தி
ஊன்றி, ஊர் கூடி
உள்நெஞ்சக் கதையெல்லாம்
ஊற்றி, மனம் தணிக்க
ஓர் வாய்ப்புக் கொடுமென்றே
உம்மை நாம் கேட்கின்றோம்

வயிற்றிற் சுமந்தபடி
வாய்க்கால்கள் ஒவ்வொன்றாய்
உயிரைக் கை பிடித்தபடி ஓடி
பெற்றெடுத்து
ஆசையாய்ப் பெயரிட்டு
அவர்கள் போய் விட்டார்கள்
என்ன பெயர் வைத்திருப்பார்
எமக்கென்று தினம் கேட்டுக்
குடைகின்ற இந்தக்
குழந்தைகட்கு உம் பெற்றொர்
கடைசியாய் உம்மோடு வாழ்ந்ததென
வாய்க்காலை
கைகாட்டி விடலன்றிக் காத்திரமாய் எம்மாலே
என்ன தான் பதில் சொல்ல இயலும்?

அவரார்வம்
மண்ணைப் பிளந்தேனும்
மறைந்துள்ள தம் பெயரைக்
கண்ணிற் கண்டுவிடும்
காட்டாறாய் இருக்கிறது
கரையை அது உடைக்கும்
காலமிப்போ உம் கையில்,
திரைபோட்டுக் கிடக்கின்ற
தீராத வெஞ்சினத்தின்
வேகத்தைக் குறைப்பதற்கு
வேறுவழியில்லை அதால்
நாமழிந்து போன மண்ணில்
நடந்துருண்டு அழுவதற்கு
ஓர் வாய்ப்புக் கொடுமென்றே
உம்மை நாம் கேட்கின்றோம்..

Thursday 15 May 2014

செத்துயிர்த்துச் சாதல்..

ஒதுக்குப் புறமாயேனும்
ஒரு பூ?
இதற்குப் பின்னணியில் எவருள்ளார்?
எச்சரிக்கை.

என்பிள்ளை, என் அப்பா
என் குடும்பம், என் நண்பன்
ஒற்றைச் சுடரேற்ற
ஓர் வாய்ப்பு?
புரட்சி உருவாக்கும் புதுயுக்தி
பிடித்தடைப்போம்

விம்மல்?
முடியாது
விசும்பல்?
கூடாது
துக்கம் தொண்டையோடிருக்கட்டும்

ஒன்றாக வாழ்ந்தவரை எண்ணி
ஒருதுளி கண்ணீர்?
விழியிருந்து துழியவிழ்ந்து விழுவதா!
விபரீதம்
அண்ணாந்து கண்களுக்குள்
அடக்கு
கலங்கிய கண்கள் கூடக்
கண்காணிக்கப்படுகின்றன

பெருமூச்சேனும்?
பின்னாளில் பெருத்துப் புயலாகும்
ஆபத்து
மெதுவாக இன்னும் மெதுவாக

இப்படியே அழுத்தழுத்தி
எப்படியுமும் கரத்தில்
துப்பாக்கி வடிவொன்றைத்
தொங்க வைப்போம்
அது வெடிக்கும்
சத்தமொன்று போதாதா உலகுக்கு
பிறகென்ன
அடுத்த பத்தாண்டும் அரசியலில்
நாம் வாழ்வோம்..

Thursday 1 May 2014

யாசகம்..

விரக்திப் பாலைவன வெம்மை
நிம்மதியை
துரத்தி அலைக்கழித்து
துவண்டுவிழத் துவண்டு விழ
அரக்கத்தனமாக அடிக்க
இதன்மேலும்
இரக்கங்காட்டாயோ எனக்கேட்டும்
பதிலின்றேல்
அறுத்தென்னைக் கொல்வதற்கு ஆணையிடு
அல்லவெனில்
கருக்கென் உணர்வெல்லாம்
களி வாழ்வை எதிர்பாரா
பருப்பொருளாயென்னைப் படை..

தனித்த கோடை

என்றாவதொரு நாள்
வசந்தம் வருமென்ற நம்பிக்கையில்
பருவம் மாறாத பல கோடைகளை
தனியனாகத் தாக்குப் பிடித்த அந்த மரத்துக்கு
இனியொருபோதும் உனக்கு வசந்தமில்லை
வறள் காற்று நிறைந்த
தனித்த கோடைதானெனும் செய்தியை
காற்றுச் சொல்லிப் போனது,
வேரறுந்து வீழும் வரத்தை இறைஞ்சுவதன்றி
வேறென்ன செய்யும் மரம்..

எமக்குமொரு சூரியன்

ஒன்றிரெண்டு பாதை விட்டோடி
எரிகல்லானதென்னவோ உண்மை தான்
ஆயினும்
அந்தச் சூரியனின் ஈர்ப்பிற் தான்
அத்தனை கோள்களும் ஒழுங்கு மாறாமல்
ஓடிக்கொண்டிருந்தன
திட்டமிட்டிணைந்து உருப்பெருத்த கருந்துளை
அன்றிந்தச் சூரியனை விழுங்கிற்று
உடன்போக்கை வரித்தன ஒன்றாயிருந்த கோள்கள்
எஞ்சியவை ஈர்ப்பின்றி
இங்கொன்றும் அங்கொன்றுமாக
முட்டி மோதியபடி,
பால்வெளியில் என்றோ ஒருநாள்
இன்னுமொரு பவித்திரச் சூரியன் எழும்வரை
இப்படித்தான் எல்லாமும் அங்கிங்காய்,
அந்த நாளும் வரும்..

Sunday 2 March 2014

கண்ணம்மா..

எந்தை நிலம் நீயெனக்கு
ஏங்கும் மனம் நானுனக்கு
வந்த வழி நீயெனக்கு
வரும் விடியல் நானுனக்கு
எந்தநிலை தோன்றிடினும்
என்னுளெழும் வீரியமே
சொந்த மண்ணின் வாழ்கனவே
சுதந்திரமே கண்ணம்மா

கண்ணின்மணி நீயெனக்கு
காட்சியடி நானுனக்கு
ஜென்மவரம் நீயெனக்கு
ஜீவிதமாய் நானுனக்கு
மண்ணின் மணம் போல எந்தன்
மார்புளெழும் வாசனையே
எண்ணங்களின் ஊற்றுயிரே
என்னிருப்பே கண்ணம்மா

விந்தினணு நீயெனக்கு
விளையும் கரு நானுனக்கு
சந்தமொழி நீயெனக்கு
சமர்ப்பரணி நானுனக்கு
முந்தையொரு நாளிலெந்தன்
முதுசமென வாழ்ந்தவளே
விந்தையொன்று ஆகிடுமா?
விடுதலையே கண்ணம்மா..

Wednesday 26 February 2014

பறந்திடு போ..

உன்னைப் புரிந்தோர்க்கு
உனை விளக்கத் தேவையில்லை
உனையறியா மனங்களுக்கோ
உனை விளக்கிப் பயனுமில்லை

சின்ன வாழ்க்கையடா
சீக்கிரம் முடிந்து விடும்
வண்ணங்கள் கனவுகளில்
வற்றி, வெளுப்பதற்குள்
என்ன மனம் சொல்கிறதோ
ஏறி நட, அப்பொழுதில்

மனப் பறவைக் குஞ்சுக்கு
மயிர் சிலிர்க்கும், இறகு வைக்கும்
இனம் புரியா இதமொன்று
எங்கிருந்தோ உனைத் தழுவ
சிறகடிக்கும், மென்காற்று
சிலிர்ப்போடு உனைத் தழுவும்
பறவைக்கு இனியேன் சொல்
மனப்பாரம்? பாதை அதோ
பற, திரும்பியினிப் பார்க்காதே
பறந்திடு போ..

Wednesday 12 February 2014

நடைப்பிணம்..

நீதியே பேசிப் பேசி
நீதிக்காய் வாழ்ந்து வாழ்ந்து
ஏதுமே அற்று மற்றோர்
இகழுதற்குரியனாகி
வீதிக்கு வந்து முற்றி
விசரனும் ஆகி, கேட்க
நாதியே அற்று நாறி
நடைப்பிணமாகி மாண்டேன்

இயங்குதல் செத்து வெற்றாய்
இருப்பதும், மூச்சு நின்று
இயங்குதலற்று மூளை
இறப்பதும் ஒன்று தானே

அகதியாய் ஓடியோடி
அலைவுற்று நொந்து வாழ்வை
சகதியிற் கீழாய் ஆக்கிச்
சரிந்த பின் திரும்பிப் பார்த்தால்
எதுவுமே இல்லை, பக்கம்
எவருமே இல்லை, அன்றே
அவர்களோடொன்றாய் நானும்
அடியுண்டு போயிருந்தால்
இத்தனை கீழ்மையின்றி
இன்னும் நான் வாழ்ந்திருப்பேன்..

Friday 17 January 2014

கைகளை இழந்த கணையாளி..

எல்லாமே புதையுண்டு போயிற்று
இப்போதெல்லாம் நீ
நினைவில் எழுவதில்லை
அகழ்ந்தெடுக்கும் சாத்தியத்தையும்
அடித்துச் சென்றுவிட்டது
காலக் கடல்கோள்
சிதிலங்களைக் கூட்டியள்ளி
துடைத்தெடுத்தாலும் கூட
அது இனித் தொல்பொருள் தான்
வட்டப்பாதையில்
என்றேனும் ஒருநாள்
எட்டிப்பார்க்க மட்டும் இனிது

மற்றபடி இன்றைக்கு
எழுதுகிறதா என
புதுப்பேனாவைக் கிறுக்கிப்பார்த்த போது
நினையாப் பிரகாரமாய்
உன் பெயர் தோன்றியிருப்பது
குறட்டை போல்
நானறியாமல் நிகழ்ந்த ஒன்று
திக்குவாய் மூச்சின்
திணறல் தான் குறட்டையெனில்
ஒப்புவமைப்படி
மூச்சிலின்னும் நீயிருப்பதாய்
முடிச்சுப் போட்டால்
நானல்ல அதற்குப் பாத்திரவாளி

கூர் முள்ளில் வாழைக்குருத்தாய்,
அடிபெயர்ந்து வீழ்ந்த பெருமரத்தின்
நடுங்கும் இளந்தளிராய்
முடங்கிப் போயிருக்குமென் வாழ்வு
தோள் கூடத்திருப்பவியலாதோர்
ஒற்றையடிப் பாதை.

கால்களின் கீழே காலநீரோட்டம்
பாதங்களைப் பதிக்கவிடாமல்
பலவந்தமாய் இழுத்துச் செல்கிறது
ஓடி இழுபட்டு
எதுவெதுவோ வாழ்விலாகி
இப்பொழுதில்
கோளக் கடிகாரத்தின்
வட துருவத்தில் நீ
தென் துருவத்தில் நான்
இதற்குள்
அரைவாசி ஓடிற்று ஆயுள்

போதும்
பருவகாலம் மாறுமென்றெல்லாம்
இனிப் பாடமெடுக்காதே
இலையுதிர்ந்த இளம் மரத்துக்குண்டே தவிர
பட்ட மரத்துக்கேது சொல்
வசந்த காலம்?
கைகளை இழந்த பின்னால்
எதற்குத்தான் கணையாளி?