Sunday 26 February 2012

கட்டி அழுதது காமம்..

செழித்து மதாளித்து நெளிந்த படி
கொளித்துப் போய்க் கிடக்கிறதுன்
உடல்ச் செடி

இருளாய்ப் படர்ந்திருக்கும்
உன் பிடரி முடி அடிவேரில் என்
பத்து விரல் நுளைத்து பற்றவும்
ஒளி நிறைந்து
அல்லியாய் அவிழ்கிறது
உன் முகம்

நெற்றி கண்களென
நீளுகிற முத்தம், உதடுகளைப்
பற்றி உண்கையில்
பட படக்கும் நாடிகளைச்
சுற்றித் தெறிக்கிறது வெப்பம்

தகிப்பதனால் தான் தேகமோ
மயிர்க்காலின்
ஒவ்வோர் துளை வழியும்
ஊறுகின்ற உயிர்க் கனலில்
ஆவி உயிர்க்கிறது வியர்வை

மண்ணை மழை தொடவும்
மதர்த் தெழும்பும் வாசம் போல்
சின்னப் பூப் பூவாய்
சிந்துகிற என் வியர்வை
வண்ண மிகு உன் உடலில் வடிய
எழுகின்ற
ஆத்ம தாகத்தின் வாசத்தை
உயிர் குடிக்கும்

தோலின் நிறம் மாறும்,
துடித்தாடும் ஆசைக்கு
அடிக்கின்ற தவிலாய்
இமை ஆடும்
மென் தண்டின்
இளந்தளிரின் சிவப்பு
விழி ஏறும்

கண மொன்றில்
கூடு விட்டுக் கூட்டுக்குக்
குதிப்பது போல் மின்சாரம்
ஓடிப் பாய்கின்ற உணர்வொன்றில்
உன் கண்கள்
கூடி எங்கே தான் ஒழிந்ததுவோ..?
தீராத
ஆசைகளைத் தீராமல்
அடைவதற்கு மேற் செருகி
தியானித்திருக்கிறதோ
அருள் வேண்டி..
உடலுள்ளே
தீ வடிவாய் இருக்கும் அத்
தெய்வத்தைக் காண்பதற்கு
காவடி எடுத்தாடிப் போயிற்றோ

உடலிணைவின்
உச்ச நிலையில் மன மலையில்
ஊற்றெடுத்த
அமுத நீர் வீழ்ச்சி
அளைவதற்கு ஓடிற்றோ

எங்கே சொல்லடி உன்
கண்ணெங்கே என்ற படி
கட்டி அணைத்திடவும்
கைகளுக்குள் வெறும் பஞ்சாய்
முட்டுப் பட்ட தெந்தன்
தலையணை தான்
அவள் இல்லை..
திட்டுத் திட்டாய்க் கண்ணில்
நீர்த் திவலை, தாங்காமல்
கட்டி அழுததென்னைக்
காமம்..

No comments:

Post a Comment