Thursday 16 February 2012

ஒரு கணம்.. ஒரு தருணம்..

ஆக்கிரமிக்கப் படுகின்றன
எம்முடைய நிலங்கள்,
எதிர்த்தெழும்
குரல்கட் கெதிராக
வடிவமைக்கப் படுகிறது
மரண முற்றுகை.
மூச்சான சுவாசங்களை
மணந்து பிடித்து
பட்டியலிடப் படுகிறது
பேச்சறச் செய்யவுள்ளோர் பெயர்கள்,

கால நீட்சியிலும் கந்தக மழையிலும்
களைத்துப் போனதெம் மனசு,
எந்தவழி சென்றாயினும்
இருப்பைக் காப்பதும்
ஏதோ..வாழ்ந்தியற்கையாய்
இறப்பை எய்தலும்
கொள்கை விளக்கமாய் ஆனது,

போகப் போக
சிறுக்கும் துண்டு நிலமும்
பெருக்கும் போர் அழுத்தமும்
கேள்விக்குறி ஆக்குகின்றன
சகல விலை கொடுப்புகளையும்,

ஒரு கணம்..
ஒரு தருணம்..
மாற்றி விடப்போகிறது
சகலவற்றையும்..!

நம்ப முடியாதவையாய்
எமைச் சுற்றி நின்ற எல்லாமே
நம்பும் படியாய்
நம் முன்னே வீழ்ந்துடையும்..

அவலக் குரல்களாய்
அலைந்தெங்கும் திரிகின்ற
அத்தனை தியாகக் குரல்களுமே
சாந்தியுற்று
ஆசீர்வதிக்கின்ற அசரீரி
எம் கண்ணில்
ஆனந்தக் கண்ணீராய் ஒழுகி
நிலம் நனைக்க
இனிப்பான மண்ணுண்ணும்
எறும்பெல்லாம்,

கருக்கல் பொழுதொன்றில்
வானம் எம் வசமாகும்

விடிகின்ற அதிகாலை
துயரங்களாலும்
இழப்பின் விம்மல்களாலும்
நிறைந்திருப்பினும்
சுவாசத்திற்கான காற்று
திருப்தி நிறைந்ததாக
எமைச்சுற்றி வரும்,

கூச்சல்களாக ஒலித்த
அதி காலைக்குருவிகளின்
கீச்சிடல்கள்
சுகானுபவம் மிக்க
இனிய சங்கீதமாகத் தோன்றும்,

இவை எல்லாம் அமைந்து விடப்போவது
எதிர் பார்க்கப்பட்ட
பெரியதொரு போர்முடிவில் அல்ல
மிகச்சிறிய சம்பவத்தில்
தனி மனிதனொருவனின்
வீழ்ச்சியிலும் கூட,

உண்மைதான்..
உலகெங்கணுமே இப்படித்தான்
சாத்தியமாயிற்று
ஓர்மத்துக்கும் மெய்ம்மைக்குமான
பரிசு.

No comments:

Post a Comment