திங்கள், 13 ஏப்ரல், 2026

என்னுயிர் நிலை..

முந்நீர் நீந்தி முழுமலை யிறந்து

நீருறை யாகும் பனிப்படு துருத்தியில்

உயவுமரப் பட்டையாய் உலர்ந்ததென் யாக்கை 

இழப்பதற் கினியோர் எஞ்சிய தில்லை 

அறுத்த வேரொன் றடிமண் விழைந்து

துடிக்குமாப் போல் தொல்வள நாட்டில்

செந்நிலந் தழுவியென் சில்லுயிர் விளிய

நல்குவை யாயின் நன்றென நலியும்

எல்லுழந் தழுங்கிய என்னுயிர் நிலையே..



புதன், 8 ஏப்ரல், 2026

ஈரானே தொன் நிலமே..

நந்திக்கடலின் 

குருதியுறைந்த அலைகளிலிருந்து 

நின் சாக்ரோசு மலைகளின் 

தகிக்கும் பாறைகளைத் தழுவுகிறேன் 


ஈரானே..


அயலாரின் உதடுகளில் விரியும் 

புன்னகையை நம்பாய் என நம்புகிறேன் 

அது, மரப்பட்டையெனப் பாசாங்கு செய்யும் 

உளுத்தலின் மென்மை.

அமைதி என்னும் வெள்ளைத் தாளை 

அவர்கள் மரமேசைகளில் விரிக்கையில் 

உன் பின்னறைகளில் 

அவர்கள் இரும்பைத் தீட்டும்

அரத்தின் ஓசை 

நின் செவிகளுக்கும் கேட்டிருக்கும் 


இந்த உரையாடல் நினக்கானதில்லை 

தம் எஃகு நுரையீரல்களில் 

பெருமூச்சை நிரப்பிக் கொள்ள

அரக்கப் பொறிகள் இட்டுக்கொண்ட 

கால நீட்சியென்பதை 

நீயும் அறியாமல் இராய்


உன் நிலவியலின் 

அடுக்குகளுக்குக் கீழே

தொடர்பற்றுப் புதைந்துகிடந்த 

அவர்களின் ஒற்றர்களான

பாலைவனத் தேள்களுக்கு 

மீண்டும் விடம் பாய்ச்சத் திறக்கப்பட்ட

இருட்டுப் பாதையே 

இந்த இணக்கப் பேச்சென்பதை 

நீயும் அறிவாய்


நெஞ்சின் உரத்தை 

உள்ளிருந்து அரிக்கும்

வெம்மையற்ற தீயே இந்த உறவாடல்.


அவர்கள் நினக்கு நீட்டும் 

அப்பத்தில் கலந்திருப்பது

நம்பிக்கையைச் சிதைக்கும் 

இரும்புத் துகள்கள், 


எம் ஈழக் காடுகளில் நாங்கள் முத்தமிட்ட 

அதே வஞ்சம்.., 

ஒன்றிணைந்த நின் பெருங்காட்டை

தனித்தனி விறகுகளாய்ப் பிளக்கவே 

அவர்கள் கோடரிகளோடு சிரிக்கிறார்கள்.


அவர்கள் போரை நிறுத்தவில்லை 

தொன் நிலமே..! 

தம் படைக்கலன்களின் 

குழல்களைக் குளிரவைக்கவும் 

நாளை வீசவிருக்கும் பெருநெருப்பிற்காய்

நின் மக்களின் எலும்புகளின் 

திண்மையை அளக்கவுமே

இந்த அமைதியைப் போர்த்திருக்கிறார்கள்.


இது பெருங்காற்றின் ஓய்வன்று 

சுழலின் மையத்தில் இறுகிப்போன

மூச்சுத்திணறடிக்கும் வெற்றிடம்.


வானிறங்கும் 

எஃகுப் பறவையின் சிறகை

அமைதிப் புறாவென எண்ணி 

ஏமாறாய் என்பதை அறிவேன் 

இருப்பினும் 

எம் கழுத்தை அறுத்த 

அதே பட்டுநூலோடு அவர்கள் 

வரும்போது வாயடக்க முடியவில்லை 


இணக்கப் பேச்செனும் 

அந்த இனிக்கும் நஞ்சை 

உமிழ்ந்துவிடு 


எம் பனைவேர்களில் 

உறைந்திருக்கும் மெய்மையைப்போல் 

நின் அடிமண்ணின் ஆழத்தில் 

முளைத்த நெருப்பையும்,

அவர்களின் வழவழப்பான பொய்களால் 

எக்காலத்தும் அழித்துவிட முடியாது.. 


ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

சுடப்படாத செங்கற்களின் அழுகுரல்..

பனிபடர்ந்த அந்நிய நிலக்கூரையின்கீழ்

உறக்கம் தொலைத்த தோழனொருவன் 

பறிக்கப்பட்ட நம் நாட்காட்டியின் 

கிழிந்த தாள்களை 

அன்றாடம் அனுப்புகிறான், 

அவை வெறும் நிழற்படங்கள் அல்ல 

களத்தில் வீழ்ந்த பெருவீரர்களின்

உறைந்துபோன மூச்சுக்காற்று.


அவர்களின் சுருண்ட முடிக்குள்

நமது ஊர்க் காற்றாடியின் சுழற்சி 

இன்னும் நிற்கவில்லை, 

விரிந்த மார்புகளில் 

எதிர்காலக் குழந்தைகளின் தொட்டிற் கயிறுகள் 

அறுபட்டுத் தொங்குகின்றன.


சிமிட்டாத அந்த அழகிய இமைகளுக்குள்

சுடப்படாத செங்கற்களைக் கொண்ட

கட்டப்படாத வீடுகளின் ஈரம் 

காயாமல் கிடக்கின்றது, 


பல்லாயிரம் இளம்பூக்களைப் பிழிந்து

நிலத்திற்கு உதிரம் ஊட்டியும்

இன்னும் சிவக்கவில்லையே 

நம் வைகறை?


தமது வேர்களை மறந்துவிட்டு 

நினைவுகளைத் தின்று செரித்த

பொருளற்ற வெற்றுடல்களின் 

ஊர்வலத்தைப் பார்க்கையில் 

வெறுப்பின் கூரிய நகங்கள் 

என் விலா எலும்புகளைக் கீறுகின்றன.


அறம் என்பது 

எரியும் காட்டின் மீது பறந்து செல்லும்

செவிடான பறவையின் சிறகசைப்புத் தானா ? 


மீண்டும்

அந்த ஒளிரும் முகங்களை 

உற்று நோக்குகிறேன், 

அவர்களின் கருமணிகளின் ஆழத்தில்

பழங்காலக் கிணறொன்றின் 

குளிர்ந்த அமைதி குடிகொண்டிருக்கிறது, 


அந்த இருளில் இருந்து வழியும்

ஒளியின் மெல்லிய நூலிழையைப் 

பற்றிக்கொள்கிறேன், 

அந்தப் பார்வையின் துவாரத்தினூடாக 

ஒரு பாதை திறக்கிறது 

அது, சாவு என்ற சொல்லே இல்லாத 

நிலத்திற்குச் செல்லும்

இரகசியப் பாதை..

சனி, 4 ஏப்ரல், 2026

பேருயிராய் வந்தாள்..

விண் வறள கண் சுருள 

வெம்மையிலொடுங்க 

மண் நெகிழ மெய்தழுவ 

மென்மழைய தாகி 

மென்நரம்பில் செம்புனலும் 

மெல்லலையாய் மீள 

பெண்ணுருவாய் விண்மழையாய் 

பேருயிராய் வந்தாள்..


மண்ணடியில் மரவேரும் 

மென்வலையைப் பின்னி

மென்னதிர்வில் நெடுநிலமும் 

இன்னுயிரைப் பகிர 

புண்ணுளத்தில் மின்நரம்பு 

புல்முனையாய் முளைக்க 

கண்ணுருவாய் வான்மழையாய் 

பேருயிராய் வந்தாள்..


உள்ளெலும்பில் உறைபனியும் 

மென்தழலில் உருக 

மண்சுவரில் மென்விரிசல் 

வேர்முனையும் நுழைய 

விண்பளுவாய் கண்ணிறுகும் 

வன்சுமையும் விழவே

பெண்ணுருவாய் பெருஞ்சுடராய் 

பேருயிராய் வந்தாள்..


மண்பளுவில் நின்றவுடல் 

மென்மிதப்பாய் எழும்ப 

உள்நரம்பில் நின்றசுழல் 

இன்னொலியாய் இயங்க 

கண்முனையில் தேங்குநிறம் 

மென்னொளியாய் முயங்க 

பெண்ணுருவாய் பெருவிசையாய் 

பேருயிராய் வந்தாள்..


உள்ளறையில் ஓய்ந்தவொலி 

உள்ளதிர்வாய் முழங்க 

மென்செவியில் ஊமைவலை 

மென்னொலியாய் புழங்க 

விண்ணதிரும் வன்மழையும் 

மென்பனியாய் இறங்க 

பெண்ணுருவாய் பெருமிதமாய் 

பேருயிராய் வந்தாள்..