Thursday 16 February 2012

புல் ஆகிப் பூடாய்..

கடவுளினைக் கண்டவர்கள்
கண்டு கண்டுகுத்தபடி
திட மனமாய்ச் சொன்ன
தீர்வறியா முதற் பிறப்பே..!

காரணத்துள் இருக்கும்
காரியமே! கடவுளிற்கு
ஈர மனமுண்டென்று
சொன்னகதை உண்மை என்றால்..

பூடாய்ப் பிறப்பெடுக்க
புல்லே நீ என் செய்தாய்..?
மாடேறி மிதித்ததற்கு
மாறிற்றுத் தண்டமென்றால்
பூடென்ன செய்ததுவாம்
புழு ஆகிப் போவதற்கு..?

காடாய் மரமாகி வரும் வரையில்
உன் செயல்கள்
ஏதேனும் கன்மம் செய்ததுவா..?
இல்லையெனில்
ஏதும் செய்யாததனால்
என் போன்ற இழி பிறப்பா..?

தேவர்வரை போகும் திருவே
உனை நினைத்தால்
ஆகுமோ பிறப்பிற்கு
ஆமான காரணங்கள்..?

உன் பிறப்பை நினைத்தால்
ஒரு நொடியிற் சித்தாந்தம்
சின்னா பின்னமாகிப் போகுமென்றால்
விதை பிளத்தல்
உண்ணானை உனக்கு
ஒரு பெரிய வேலை இல்லை

ஆனால்
உன்னை நேர் பார்க்கையிலே
ஒரு மிதியில் முடிக்கையிலே
என் மண்ணான மூளைக்குத்தான்
இந்த மயிரொண்டும்
விளங்குதில்லை..!

No comments:

Post a Comment