Thursday, 16 February 2012

எமக்கான சூர்யோதயம்..

மணற்பூமியில் முளைப்பதே
இயலாததாய் இருந்த காலம் அது
ஆனால் நாம்
வளர்வதற்கென முடிவெடுத்ததோ
கருங்கல் நிறைந்த தரைகளில்,

ஓர்மம் உடலில் மட்டுமல்ல
உயிரிலும் நிறைந்திருந்ததால்
கற்களைப் பிளந்து நிமிர்தல்
ஓர் காரியமாய்த் தெரியவில்லை,

ஒருமித்த கரங்களின் உதைப்பே
பிளந்து வருதலுக்கான
சாத்தியம் என்பதையும்
அப்போது
நாம் உணர்ந்திருக்கவில்லை,

கற்களைப் பிளந்த கைகள்
வெளி வந்தமைக்கான
உரிமையை வேண்டி
தனித்தனியாகிவிட்ட காலமிது,

முழுவதுமாக நிமிர்வதற்கு
இன்னும் எஞ்சி இருப்பதோ
வெறுமனே ஓர் ’மரப்பலகை’
தனித்தனியாகி விட்ட
கைகளினால் இப்போது
தட்டத்தான் முடிகிறதே அன்றி
ஓர் இஞ்சிதானும்
உயர்த்தக்கூட முடிவதில்லை,

உடைத்தெழலிலும் பார்க்க
வருவதற்கான சத்தமெழுப்பல்
எவ்வளவு ஆபத்தானதென்பதை
வெட்டப்படும் ஒவ்வொரு கைகளும்
இப்போது விளங்கிக் கொள்கின்றன,

இப்போதும்
எஞ்சி இருக்கிற
ஒன்றிரெண்டு கைகளின்
ஒருமித்தலை வேண்டி
கெஞ்சி அழுகிறது
எமக்கான சூர்யோதயம்..

No comments:

Post a Comment