Wednesday 8 February 2012

சாவோடிவை போகும்..

கண்ணுருட்டிக் கண்ணுருட்டிக்
களவாய் எனை எடுத்து
உன்னிலெனை இறுக்கி
ஒட்ட வைத்துயிர் குடித்து
ஏனென்றே விளங்காமல்
எனையெறிந்து நீ போக
நான் நின்று நடுத்தெருவில்
அழுவனென்றா நினைத்தாய்?
போ..

மண்ணளவும் கவலையில்லை!
மரித்தது போல் ஆனாலும்
எண்ணி இதைப்பற்றிக் கவலையுறேன்.
வாழ்வோட்டம்
என்னை இரும்பாக மாற்றும்தான்
ஆனாலும்
கடல் பார்க்க, மரம் பார்க்க
நாம் போன இடம் பார்க்க,
சொன்ன கதை எல்லாம்
சுத்திவரும் போகட்டும்

மனக்கொதிப்பு, உடற்கொதிப்பு
எல்லாமே உன்னிடத்தில்
தினம் தினம் நான் சமர்ப்பித்து
திருப்தி அடைந்த சுகம்
இனியில்லை என்றாலும்,
எனக்கென்ன இது பெரிய
பனிப்போரா?
மறக்காமல் தினம் உருகிச்சாவதற்கு?

விதி வந்துந்தி எமை
வேறாக்கி  இன்னொரு கை
உன் மீது தொடுவதற்கு உரிமை கொண்டால்...?
நான் பெரிசாய்
நொந்தொடிந்து போகேன்
நெகிழேன்,இருந்தாலும்

சின்னக் கண்கலக்கம்
தொண்டை அடைத்தபடி
சொற்கள் வரமறுக்கும்
நெற்றிச் சுருக்கு விழும்
நெஞ்சடைக்கும், வாய் குளறும்.
பற்றுதல் அற்றுப்போம்
பார்வைத்திரை நடுங்கும்
சற்றுக் காலத்தில் என்
சாவோடிவை போகும்

சிற்றின்பப் பிரிவில்லை
என அறிவேன். என்றாலும்
மற்ற மனிசரைப்போல்
கவலையுறேன்
நீ போடி..

No comments:

Post a Comment