Monday 24 December 2012

பிரிவெனும் கருந்துளை..



பிரிவு பிளந்தென்னை
விழுங்கிற்று
ஏதோ ஓர் யுகத்தில்
கண்டங்கள் பிளந்து
தேசங்களை விழுங்கியதைப் போல

இருளும்,குளிரும் அடர்ந்த
இரவுக் கனவுகளின்
மன அழுத்த நெரித்தலில்
உடல் வியர்த்து, வான் தேடி
பிரமையில்
மல்லாந்து கிடக்கின்ற மலைக்கு
ஆறுதலாய் ஒருகாலை விடிவது போல
பிரிவின் அதீத அமுக்கத்தில்
பேதலித்துக் கிடக்கும் மனசு
நீண்ட பாலைவனப் பயணத்தின்
இடைவெளியில்
கொஞ்சம் குளிர் நீரும்
நிழல் மரமும் வேண்டுவதாய்
அன்பான வார்த்தை ஒன்றுக்காய்
அல்லாடி தவம் கிடக்கிறது

வழித்தடைகளாய் நின்று பிரிகின்ற
மலைகளாலும், கடல்களாலும்
மனிதர்களால் போடப்பட்டிருக்கும்
எல்லைகளாலும்
மூட்டப்பட்டிருக்கும் பிரிவுத் தீ
கால நீட்சி எனும் காற்று
வீசி அடிக்க
மூசி மூண்டெரிகிறது

வெப்பம் தாளாமல்
மன என்பின் மச்சை
கருகத் தொடங்கி விட்ட
காலமிது
மழைலையின் சிரிப்பும்
அன்றணைத்த அன்பின் கணப்பும் தான்
உருகும் என்பின் உஷ்ணத்தில்
மூச்சுத் திணறி
தள்ளாடி வீழ்ந்து விடாமல்
தாங்கிப் பிடிக்கிறது உயிரை

எப்போதோ பெய்த மழையின்
ஈரத்தை இழுத்துவைத்துக் கொண்டு
அடுத்த மழைக்காலம் வரை
உயிரேந்தும் கற்றாளை போல
பழகிய அன்பின் நினைவுகளை
அடித்தொண்டையில் வைத்துக் கொண்டு
கம்மும் குரலை
செருமியபடி காத்திருக்கிறது
கன மனசு..