Friday 15 November 2019

ஏன் நடந்தோம் என்பதறி..

கொற்றமும் கனவுகளும்
கொளித்துக் கிடந்த எம்
முற்றத்தில் இன்றந்த
மூச்சின் தினவில்லை

ஏறும் படிகளிலே
இருந்தபடி தோழர்கள்
கூறிய கதைகளிற் தான்
குறிப்பெடுத்ததெம் கனவு
எடுத்த குறிப்புக்கள்
எங்கெங்கோ இருந்தாலும்
எடுத்தவர்கள் இல்லை
இருந்த வீட்டுப் படியுமிலை

கதை அறிந்த கதவும்
கந்தகத்தின் மூர்க்கத்தில்
சதை பிய்ந்து கிடக்கிறது
சாளரத்தின் வழியாக
ஊர்ந்தன்று நுளைந்திட்ட
ஒளிநிலவு இன்றைக்கும்
கூரையற்ற வீட்டுக்குள்
குதித்து, முன்பு தன்னை
பார்த்துருகும் விழிகளினை
பார்ப்பதற்கு படர்கிறது

சிதறிப் போய்க்கிடக்கும்
சுவரில் தொங்குகின்ற
கதையின் நாயகர்கள்
கதையும், சிரிப்பொலியும்
ஒவ்வொரு கற்களிலும்
உளுத்திருக்கும் படலையிலும்
இவ்வளவு நாட்போயும்
இன்னும் கேட்கிறது..

பாறிய பூவரசைப்
பார்த்தழுதே எம்வாழ்வை
கூறிவிற்கும்படி ஆக்காமல்
பதிலுக்கு,
நல்ல கதியால்கள் நடு,
படலை கட்டு,
இலகுவில் இடியாத
எமக்கான கல் தேர்ந்து
படி ஆக்கு,
நிலை, கதவு, சுவர்களெலாம்
பூகம்பத்தையே தாங்கும்
சுவல் வலிமை கொள்ளட்டும்..

முக்கியமாய்
இவ்வளவும் ஏன் நடந்தோம் என்பதறி
விடியுமடி..