வாழ்வென்பது
நேர்ப்பட்ட பெருவழியன்று,
அஃது உவர்காற்று
அலைக்கழித்துச் சிதைத்த
கிழிந்த பாய்மரம்,
நினைவுகளின் தையல்களொவ்வொன்றும்
உடம்பின் வடுக்களோடு
உரசிக்கொண்டு
புதிர்ததும்ப திசையற்று நிலைகொள்கிறது,
துணையெனத் தொடர்ந்த முகங்கள்
பெருவெள்ளம் வடிந்தபின்
எஞ்சிநிற்கும் மணல் திட்டுகளாய்
ஈரமிலா நிலத்தில் புதைந்து மறைந்தன,
சந்திக்கவே இயலாதெனக்
கருதிய உறவுகள்
முன்னறியாத் திசையின் காற்றாய்
வேற்று நகரின் நிழலில்
தோல் தீண்டித் திகைக்க வைக்கிறது
இவ்வுடல்
இப்போது வெறும் ஊனன்று
சிதைந்து கிடக்கும் நிலத்தின்
வரைபடம்,
இதில் தழும்பாய் எஞ்சிக் கிடக்கும்
நினைவுகளென்பது
ஆறிய காயமல்ல,
உறக்கமற்ற இரவுகள்
கடித்துக் குதறிய
காலத்தின் தடம் அழிந்த
நிலப்பரப்பு,
மெல்ல மெல்ல உட்கசிந்து
உவர் நீர் நிலத்தை அரிப்பதாய்
நினைவுகள் உள்ளிருந்தென்
இருப்பின் ஆழத்தைத் தின்னுகின்றன
தொடர் சங்கிலியாய் நீளும்
வாழ்வின் இந்த வளையத்தை
நினைவின் இரைச்சலற்று,
துயரத்தின் கறை படிந்த நிழலற்று,
வலி இன்றி மெல்லக் கழற்றிவிட
இப்போதோர் ஆசை எழுகிறது
வாழ்க்கை இப்போது
கேள்வியாகத் தெரியவில்லை
அது கரை தேடாத மெதுவான
உயிப்பு அலையாய்…