ஊர்க்குருவி - Thiru Poems
என் இன்றைய இருப்புக்கான நேற்றைய சுவடுகள்..
வெள்ளி, 13 பிப்ரவரி, 2026
கரைதலின் வரைபடம்..
வியாழன், 12 பிப்ரவரி, 2026
நத்தின் கூடு..
புத்தன் ஏகினான்
அவனகன்ற திசை இப்போது
பாரமான ஒளியால் நிறைந்திருக்கிறது.
காலம் தன்
பருப்பொருட் போர்வையைக் களைந்துவிட்டு
சிறு நத்தையின் சுரிவளைக்குள்
நிர்வாணமாய் நுழைந்து கொண்டது.
இந்தச் சிறு சுண்ணச் சுருள்
வெறும் ஓடல்ல,
அண்டத்தின் பேரிரைச்சல் வடிகட்டப்பட்டு
மௌனமாக உறைந்துபோனதோர்
உள்வெளி,
புற உலகைத் தின்று தீர்த்த
மகா தாகம் இப்போது
இச்சிறு ஈரப்பதத்துள்
தன்னைத் தானே கண்டடைந்து
அடங்கியிருக்கிறது.
இப்போதில்
நத்தையின் கூட்டுக்குள் இருப்பது
அமைதியல்ல,
அஃதோர் உருவம் இழந்த பிரபஞ்சத்தின்
மீள முடியாத் தியானம்.
யாரும் அற்ற அந்தப் பீடத்தில்
இன்மை முடிசூடிக் கொள்கிறது..
ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026
நிழற்கரங்கள் ஆட்டும் நிலம்..
வறண்ட நிலத்தின் வெடிப்புகளுக்குள்
இரத்தம் கசிவதைச் செதுக்கிச் செதுக்கி
ஒளித்து வைத்திருக்கிறது
வணிகப் பேனா.
-
வரைபடத்தில் விழும் ஒவ்வொரு கோடும்
கூர்வாளின் நுனியால்
வரையப்பட்டதல்ல,
பங்குச் சந்தையின்
புள்ளிகளால் இழுக்கப்பட்டவை.
-
மகுடங்கள் இங்கே மரத்தாலானவை
அவற்றைச் சுமக்கும் தலைவர்களோ
நூல் பிடித்து ஆட்டப்படும்
நிழல் உருவங்கள்.
-
யார் எப்போது
அழ வேண்டும் என்பதையும்
யார் எப்போது
எரிய வேண்டும் என்பதையும்
கடலுக்கப்பால் அமர்ந்திருக்கும்
தங்க நகங்களை உடைய
அந்த மாயக்கரங்கள்
ஏற்கனவே எழுதி மூடிவிட்டன.
-
அமைதிப் புறாக்கள்
ஆயுதத் தொழிற்சாலையின்
புகைபோக்கிகளாக மாற்றப்பட்டுவிட்டன,
குண்டுகள் விழுமுன்னரே
சிதைந்த சுவர்களைக் கட்டியெழுப்பும்
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விடுகின்றன.
-
இங்கே
வெற்றியும் தோல்வியும்
ஒரே நாணயத்தின் இருபுறங்கள்
அந்த நாணயம் மட்டும்
எப்போதும் அதிகாரத்தின்
பையிலேயே இருக்கும்
-
தனித்தொரு மனிதனின் கண்ணீர்
இங்கே ஒரு புள்ளிவிவரம் மட்டுமே,
உலகெனும் பெரும் பலகையில்
நாம் காய்கள் கூட அல்ல
காய்கள் நகரும் போது
தெறித்து விழும் தூசிகள்
இல்லை அது கூட இல்லை,
-
வரலாறு என்பது இங்கே
நடந்தவற்றின் தொகுப்பல்ல
நடத்தப்பட வேண்டியவற்றின்
முன்கூட்டிய வரைபடம்
-
துப்பாக்கிக் குழல்கள்
நிதியைத் துப்புகின்றன
சிதறும் சதைத்துண்டுகள்
யாரோ ஒருவனின் வங்கிக் கணக்கில்
இலாப இலக்கங்களாய் மாறுகின்றன.
-
அவர்கள் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்
ஏனெனில்
தோல்வியையும் அவர்களே
கட்டமைத்திருக்கிறார்கள்..
புதன், 28 ஜனவரி, 2026
இருளின் தையற்காரனும் எரியும் நரம்பும்..
வதைப்பவன் கைகளில்
இருள் ஒரு கருவியாகத் திரள்கிறது
ஒவ்வொரு அடியிலும் அவன்
தனது அகத்தின் சாளரங்களை
நிலக்கரி பூசி அடைக்கிறான்.
-
அவன் ஆன்மா
ஈரமில்லாத ஒரு பாழ்ங்கிணறு
வீழ்ந்த கற்களின் ஒலியைக்கூட
வெளியே விடாத கருங்குழி
அவன் குருதியில் இப்போது
நிழல்கள் உறைகின்றன
அவன் தொடும் இடமெல்லாம்
காலம் தன் நிறத்தை இழக்கிறது.
-
வதைப்பவன் என்பவன்
தனது விதியால் கைவிடப்பட்ட
ஒரு தையற்காரன்
பிறர் வலிகளால் அவன் தைப்பது
தனக்கான சவக்கோடியை மட்டுமே
-
ஆனால், வதைபடுபவன்
அவன் உடலின் ஒவ்வொரு திறப்பும்
இப்போது ஒரு சுடரின் வாசல்
தசைகளைக் கிழிக்கும்போது
வெளியேறுவது குருதியல்ல
காலங்காலமாகத் தேங்கியிருந்த
ஆழ்மன இசை.
-
நரம்புகள் அறுபடும் கணத்தில்
அவை நரம்புகளாக இருப்பதில்லை
யாழின் தந்திகளென மீட்கப்படுகின்றன
வலியில் துடிக்கும்போது
அவன் ஆன்மா
தன் கூட்டைத் துறந்து
வானத்தின் அதீத நீலத்தைத் தொடுகிறது.
அங்கே சொற்கள் இல்லை
அங்கே வதைப்பவன் இல்லை.
-
தூய்மையான ஒளியால் நெய்யப்பட்ட
ஒரு பறவையின் சிறகசைப்பாய்
வதைபடுபவனின் உள்ளொளி
தன் சிறைநீங்கி விளிக்கிறது.
-
இருள் என்பது வதைப்பவனின் முகவரி
ஒளி என்பது வதைபடுபவன்
கண்டடைந்த ஒரு புதிய திசை..
செவ்வாய், 27 ஜனவரி, 2026
மீதமுள்ள பொருட்கள்..
மேசையின் மேல் ஒரு உடைந்த திசைமானி,
அதன் முள்
எந்தத் திசையையும் காட்டாமல்
தன்னையே சுற்றிக்கொள்கிறது.
-
சுவரில் தொங்கும் வரைபடத்தில்
கடல்கள் காய்ந்து கறை படிந்திருக்கின்றன,
நாடுகள்
பெயர்களற்ற வெறும் கோடுகளாகச் சுருங்கிவிட்டன.
-
இழப்பதைக் கற்றுக்கொள்வது
ஒரு கலைதான் என நாம் அறிவோம்
முதலில் சாவிகளைத் தொலைத்தோம்
பிறகு அந்தப் பெயர்களை,
இப்போது
நாமாகவே உருவாக்கிய
அர்த்தத்தின் கடைசி இழை அறுந்து விழுகிறது.
-
துருவேறிய ஒரு சாவி
எந்தப் பூட்டையும் திறக்கப்போவதில்லை
ஆயினும் அதனை நாம்
கவனமாக மெருகேற்றுகிறோம்,
-
தூசு படிந்த அலமாரியில்
பயன்படுத்தப்படாத கோப்பைகள்
ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளும் சத்தம்
வெறுமையின் துல்லியமான இசை.
-
வெளியே,
பறவை ஒன்று
அடையாளம் தெரியாத ஒரு மரத்தில் அமர்ந்து
தன்னுடைய பழைய பாடலை
மறந்துபோன தொனியில் இசைக்கிறது
அதன் அலகுகளில்
ஈரம் எதுவுமில்லை
வெறும் உலர்ந்த காற்றை அது
தன் சுவாசமாக மாற்றிக்கொள்கிறது.
-
இந்தக் குடிமையின் சிதைவு
ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை
ஒவ்வொரு கல்லாக நகர்ந்து
இறுதியில்
எதுவும் தாங்காத ஒரு அத்திவாரமாய்
வெற்றுத் தரை மட்டும் எஞ்சியுள்ளது.
-
முற்றத்தில் கிடக்கின்றன
சிதைந்த பொம்மைகளும்
திறக்கப்படாத கடிதங்களும்,
அவற்றின் மேல் பெய்யும் மழை
மண்ணை நனைக்கவில்லை,
மாறாக,
இருக்கின்ற கொஞ்ச ஈரத்தையும்
உறிஞ்சி எடுத்துச் செல்கிறது.
-
நாம் எதையோ தேடுகிறோம்
ஒருவேளை,
தொலைந்துபோதொரு
சிறுதுளிப் பொருளை அல்ல,
பொருள் எதுவுமே இல்லை என்கிற உண்மையை
எளிதாக ஒப்புக்கொள்ளும்
அந்த ஒரு கணத்தை..
வியாழன், 22 ஜனவரி, 2026
உதிரத்தின் திணை விழிப்பு..
எங்கிருந்தோ எழும் பேரோலம்
உன் செவிப்பறையைக் கிழிக்கையில்
உன் உண்ணாக்கு அதிர்ந்து
முள்ளந்தண்டு சில்லிடுகிறதா
ஆயின்
அயல் நிலத்தில் பெயரற்று வீழ்ந்தவன்
உன் குருதி வழி உறவு
எங்கோ ஓர் எளியவனின்
பசிநரம்பு தெறிக்கையில்
உன் வயிற்றுச் சுவர்கள்
உள்நோக்கிச் சுருங்கிப் புலம்புகிறதா
வா..
என் கைகளைப் பிடித்துக்கொள்
நீயும் என் உடன் பிறப்பு
விழிப்பு என்பது
தூக்கம் கலைந்த விழிகளின் வரவு அல்ல
அது
அநீதி எரியும் திசையெல்லாம்
தன் சதையைப் பிய்த்து
நெருப்பாய் வீசும்
ஒரு ‘திணைத் துளக்கம்’
பனந்தோப்புக் காற்றினூடே
பாயும் தோட்டாக்களின் ஈனச் சிரிப்பு
முள்வேலிக் காடுகளில்
தொங்கி நிற்கும்
எம் மக்களின் கிழிந்த கனவுகள்
இவை உன்னைத் தூங்க விடாமல்
உள்நின்று உலுக்குமெனில்
உன் அரசியல் என்பது
வெறும் சொல்லல்ல
அது சூல் கொண்ட நிலத்தின்
பேரெழுச்சி
நூறு நதிகள்
வெவ்வேறு திசைகளில் ஓடினாலும்
அநீதியின் உவர் நிலத்தில்
அவை சங்கமிக்கும் பெருங்கடலே
நம் தோழமை..
ஞாயிறு, 18 ஜனவரி, 2026
நிலமெனும் உயிர்மூச்சு..
ஏதிலாளனே..!
நிலைகொள்ளாச் சொற்களுக்கிடையே
கடந்து செல்வோயே
இதனை எழுதுக
எம் உடலென்பது
இம் மண்ணின் நுண்துகள்
எம் உயிர்ப்பென்பது
இக் கடற்காற்றின் சீற்றம்
யார் நல்கியது இவ்வுரிமை
யாரும் ஈந்ததல்ல இது
கருவறைக் குருதியோடு கலந்துயிர்த்து
தொப்பூள் கொடியால்
இந்நிலத்துள் வேரூன்றி
பிறப்பொடு வந்த பெரும்பொருள்
வேரூன்றிய பனையின் செம்மாப்பில்
கருகிய மடல் சுமந்த
தீயெனக் கொதிக்கிறது
எம் முன்னோர் புதைத்த
ஈமப் பெருங்கற்கள்
இந்நிலத்தின் உரிமையைப்
பேசாப் பெருமொழியால்
எக்காலத்தும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்
அமைதி என்பது
எம் நாவறுந்த நிலையும் அன்று
அஃதெம்
புதைக்கப்பட்ட சாம்பலினின்று
மீளத் துளிர்க்கும் ஆதி விதையின்
ஆழத்து அடக்கம்
எழுதுக..!
நாங்கள் நிலமற்ற நிழல்கள் அல்லர்
சிதைக்கப்பட்ட நிலத்தின்
மாறாச் சான்றுகள்
எம் குருதி தோய்ந்த இந்நிலவரைபடம்
கடலலைகள் தீண்டத் தீண்ட
கூர்மைபெறும் பெரும்வாள்
எங்கள் விடுதலை என்பது
வேறெங்கும் உளதன்று
அதுவே எம்மூச்சின் முதலசைவு
எம் வாழ்வின்
முடிவிலாத் தொடர்ச்சி..
வியாழன், 8 ஜனவரி, 2026
ஏலோர் எம்பாவாய்..
வியாழன், 25 டிசம்பர், 2025
பாவங்கள் இரெத்தத்தால் கழுவப்படும்..
எங்களின் கண்ணீர்
உப்புச் சுவை கொண்டதல்ல
அது எங்கள் நிலத்தின்
ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கும்
முறிக்கப்பட்ட பனையின்
ஏக்கத்துவர்ப்புச் சுவை கொண்டது,
-
நீங்கள் கேட்கிறீர்கள்
எல்லோரும் விடைபெற்ற பின்
இந்தப் புழுதியில்
எதை விதைக்கிறீர்கள் என்று,
நாங்கள் விதைகளை விதைப்பதில்லை
மண்ணில் விழுந்த
எங்களின் பெயர்களை
எரிக்கப்பட்ட தேசக்கனவின்
எஞ்சிய சாம்பலை
தாயின் கருப்பைக்குள்
உறங்கிக் கொண்டிருக்கும்
நாளைய விடியலை
கண்ணீரை நீராகக் கொண்டு
விதைத்துக் கொண்டிருக்கிறோம்
-
நிலம் ஒரு வரைபடம் அல்ல
அது எங்களின் தோல்
ஒரு நாள்
எங்களின் துயரத்தின் உப்பிலிருந்து
ஒரு பேரொளி உதிக்கும்
அன்று,
நிலம் தன் மூச்சை
ஆழமாக இழுத்துவிடும்
எங்கள் அறுவடை என்பது
நெல்மணிகள் அல்ல
அது துண்டிக்கப்பட்ட நாக்குகள் பாடும்
விடுதலையின் பாடல்
உழவனுக்கும் நிலத்திற்குமான
உறவல்ல இது,
உயிருக்கும் அதன்
கடைசித் துளிக்கும் இடையிலான
மகா அறுவடை…
பனிக்கும் பனைக்கும் இடையிலான தூரம்..
எனது நிலம்
எரிக்கப்பட்ட பனை ஓலையின்
கடைசிச் சாம்பலில் எழுதிய
நிறைவேறாத ஓர் உயில்
நான் அந்த நிலத்தின்
ஒரு துளி வியர்வை
அதன் விடுதலையை
என் நரம்புகளின் இசையாக மாற்றினேன்
ஆனால்,
இரும்புக் கைகள் கொண்ட
வல்லாதிக்கத்தின் கருப்புப் பற்கள்
என் வீட்டின் வாசலில் பூத்திருந்த
ஒவ்வொரு பூவையும் கடித்துக் குதறின
தோல்வி
என் முதுகில் விழுப்புண்களாகச்
செதுக்கப் பட்டிருக்கின்றன
அவை காயங்களல்ல
சொந்த மண்ணின் வரைபடத்தை
என் உடலில்
வரைந்திருக்கும் கோடுகள்
இன்று நான்
மேற்கின் சாம்பல் நிறக் குளிரில்
வேரற்ற ஒரு பாறையைப் போலக் கிடக்கிறேன்
இந்த மண்ணின் பனி
என் கண்களில்
வெள்ளை நிறக் குருதி போலப் படிகிறது
கதிரவன்
இங்கே ஓர் அந்நியனைப் போல
சினந்து பார்க்கிறான்,
காற்றோ என் மொழியைப் புரியாமல்
சாளரங்களின் கண்ணாடிகளில் மோதித்
தற்கொலை செய்கிறது
தனிமை என்பது
பல கோடி மனிதர்கள் நடுவே
எம் மொழியைப் பேச இடமில்லாமல்
உறைந்த பனியில் செருப்பின்றி நடப்பது
குடிபெயர்ந்த பறவைகளுக்குக் கூட
ஓர் கூடு உண்டு ஆனால்
நாடு பெயர்ந்தவனுக்கு
வானம் கூட ஒரு சிறைச்சாலை தான்
தமிழர் கடலின்
அலையடித்துப் பழகிய
என் செவிகளுக்குள்
இப்போது பனியின் மௌனம்
ஈயத்தை உருக்கி ஊற்றுகிறது
நாடிழந்து போதல் என்பது
வெறும் வீட்டை இழப்பதல்ல
நம் உடலின் திசுக்களிலிருந்து
நிலத்தின் தாதுக்களைப் பிடுங்கி எறிவது
அல்லது நம்மை நாமே
காலத்தின் வெளியில்
தொலைத்துவிட்டுத் தேடுவது
போராடித் தோற்றவனின் வலியும்
புலம்பெயர்ந்து மடிபவனின் ஏக்கமும்
இந்த உலகத்திற்குப் புரியப்போவதில்லை
நான் இங்கே
ஒரு கல்லாக மாறிக்கொண்டிருக்கிறேன்
ஆனால் அந்தப் பாரம்
என் நிலத்தின் பாரமல்ல
திரும்பிப் போக முடியாத
ஒரு நீண்ட பாதையின் பாரம்…