திங்கள், 13 ஏப்ரல், 2026

என்னுயிர் நிலை..

முந்நீர் நீந்தி முழுமலை யிறந்து

நீருறை யாகும் பனிப்படு துருத்தியில்

உயவுமரப் பட்டையாய் உலர்ந்ததென் யாக்கை 

இழப்பதற் கினியோர் எஞ்சிய தில்லை 

அறுத்த வேரொன் றடிமண் விழைந்து

துடிக்குமாப் போல் தொல்வள நாட்டில்

செந்நிலந் தழுவியென் சில்லுயிர் விளிய

நல்குவை யாயின் நன்றென நலியும்

எல்லுழந் தழுங்கிய என்னுயிர் நிலையே..



புதன், 8 ஏப்ரல், 2026

ஈரானே தொன் நிலமே..

நந்திக்கடலின் 

குருதியுறைந்த அலைகளிலிருந்து 

நின் சாக்ரோசு மலைகளின் 

தகிக்கும் பாறைகளைத் தழுவுகிறேன் 


ஈரானே..


அயலாரின் உதடுகளில் விரியும் 

புன்னகையை நம்பாய் என நம்புகிறேன் 

அது, மரப்பட்டையெனப் பாசாங்கு செய்யும் 

உளுத்தலின் மென்மை.

அமைதி என்னும் வெள்ளைத் தாளை 

அவர்கள் மரமேசைகளில் விரிக்கையில் 

உன் பின்னறைகளில் 

அவர்கள் இரும்பைத் தீட்டும்

அரத்தின் ஓசை 

நின் செவிகளுக்கும் கேட்டிருக்கும் 


இந்த உரையாடல் நினக்கானதில்லை 

தம் எஃகு நுரையீரல்களில் 

பெருமூச்சை நிரப்பிக் கொள்ள

அரக்கப் பொறிகள் இட்டுக்கொண்ட 

கால நீட்சியென்பதை 

நீயும் அறியாமல் இராய்


உன் நிலவியலின் 

அடுக்குகளுக்குக் கீழே

தொடர்பற்றுப் புதைந்துகிடந்த 

அவர்களின் ஒற்றர்களான

பாலைவனத் தேள்களுக்கு 

மீண்டும் விடம் பாய்ச்சத் திறக்கப்பட்ட

இருட்டுப் பாதையே 

இந்த இணக்கப் பேச்சென்பதை 

நீயும் அறிவாய்


நெஞ்சின் உரத்தை 

உள்ளிருந்து அரிக்கும்

வெம்மையற்ற தீயே இந்த உறவாடல்.


அவர்கள் நினக்கு நீட்டும் 

அப்பத்தில் கலந்திருப்பது

நம்பிக்கையைச் சிதைக்கும் 

இரும்புத் துகள்கள், 


எம் ஈழக் காடுகளில் நாங்கள் முத்தமிட்ட 

அதே வஞ்சம்.., 

ஒன்றிணைந்த நின் பெருங்காட்டை

தனித்தனி விறகுகளாய்ப் பிளக்கவே 

அவர்கள் கோடரிகளோடு சிரிக்கிறார்கள்.


அவர்கள் போரை நிறுத்தவில்லை 

தொன் நிலமே..! 

தம் படைக்கலன்களின் 

குழல்களைக் குளிரவைக்கவும் 

நாளை வீசவிருக்கும் பெருநெருப்பிற்காய்

நின் மக்களின் எலும்புகளின் 

திண்மையை அளக்கவுமே

இந்த அமைதியைப் போர்த்திருக்கிறார்கள்.


இது பெருங்காற்றின் ஓய்வன்று 

சுழலின் மையத்தில் இறுகிப்போன

மூச்சுத்திணறடிக்கும் வெற்றிடம்.


வானிறங்கும் 

எஃகுப் பறவையின் சிறகை

அமைதிப் புறாவென எண்ணி 

ஏமாறாய் என்பதை அறிவேன் 

இருப்பினும் 

எம் கழுத்தை அறுத்த 

அதே பட்டுநூலோடு அவர்கள் 

வரும்போது வாயடக்க முடியவில்லை 


இணக்கப் பேச்செனும் 

அந்த இனிக்கும் நஞ்சை 

உமிழ்ந்துவிடு 


எம் பனைவேர்களில் 

உறைந்திருக்கும் மெய்மையைப்போல் 

நின் அடிமண்ணின் ஆழத்தில் 

முளைத்த நெருப்பையும்,

அவர்களின் வழவழப்பான பொய்களால் 

எக்காலத்தும் அழித்துவிட முடியாது.. 


ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

சுடப்படாத செங்கற்களின் அழுகுரல்..

பனிபடர்ந்த அந்நிய நிலக்கூரையின்கீழ்

உறக்கம் தொலைத்த தோழனொருவன் 

பறிக்கப்பட்ட நம் நாட்காட்டியின் 

கிழிந்த தாள்களை 

அன்றாடம் அனுப்புகிறான், 

அவை வெறும் நிழற்படங்கள் அல்ல 

களத்தில் வீழ்ந்த பெருவீரர்களின்

உறைந்துபோன மூச்சுக்காற்று.


அவர்களின் சுருண்ட முடிக்குள்

நமது ஊர்க் காற்றாடியின் சுழற்சி 

இன்னும் நிற்கவில்லை, 

விரிந்த மார்புகளில் 

எதிர்காலக் குழந்தைகளின் தொட்டிற் கயிறுகள் 

அறுபட்டுத் தொங்குகின்றன.


சிமிட்டாத அந்த அழகிய இமைகளுக்குள்

சுடப்படாத செங்கற்களைக் கொண்ட

கட்டப்படாத வீடுகளின் ஈரம் 

காயாமல் கிடக்கின்றது, 


பல்லாயிரம் இளம்பூக்களைப் பிழிந்து

நிலத்திற்கு உதிரம் ஊட்டியும்

இன்னும் சிவக்கவில்லையே 

நம் வைகறை?


தமது வேர்களை மறந்துவிட்டு 

நினைவுகளைத் தின்று செரித்த

பொருளற்ற வெற்றுடல்களின் 

ஊர்வலத்தைப் பார்க்கையில் 

வெறுப்பின் கூரிய நகங்கள் 

என் விலா எலும்புகளைக் கீறுகின்றன.


அறம் என்பது 

எரியும் காட்டின் மீது பறந்து செல்லும்

செவிடான பறவையின் சிறகசைப்புத் தானா ? 


மீண்டும்

அந்த ஒளிரும் முகங்களை 

உற்று நோக்குகிறேன், 

அவர்களின் கருமணிகளின் ஆழத்தில்

பழங்காலக் கிணறொன்றின் 

குளிர்ந்த அமைதி குடிகொண்டிருக்கிறது, 


அந்த இருளில் இருந்து வழியும்

ஒளியின் மெல்லிய நூலிழையைப் 

பற்றிக்கொள்கிறேன், 

அந்தப் பார்வையின் துவாரத்தினூடாக 

ஒரு பாதை திறக்கிறது 

அது, சாவு என்ற சொல்லே இல்லாத 

நிலத்திற்குச் செல்லும்

இரகசியப் பாதை..

சனி, 4 ஏப்ரல், 2026

பேருயிராய் வந்தாள்..

விண் வறள கண் சுருள 

வெம்மையிலொடுங்க 

மண் நெகிழ மெய்தழுவ 

மென்மழைய தாகி 

மென்நரம்பில் செம்புனலும் 

மெல்லலையாய் மீள 

பெண்ணுருவாய் விண்மழையாய் 

பேருயிராய் வந்தாள்..


மண்ணடியில் மரவேரும் 

மென்வலையைப் பின்னி

மென்னதிர்வில் நெடுநிலமும் 

இன்னுயிரைப் பகிர 

புண்ணுளத்தில் மின்நரம்பு 

புல்முனையாய் முளைக்க 

கண்ணுருவாய் வான்மழையாய் 

பேருயிராய் வந்தாள்..


உள்ளெலும்பில் உறைபனியும் 

மென்தழலில் உருக 

மண்சுவரில் மென்விரிசல் 

வேர்முனையும் நுழைய 

விண்பளுவாய் கண்ணிறுகும் 

வன்சுமையும் விழவே

பெண்ணுருவாய் பெருஞ்சுடராய் 

பேருயிராய் வந்தாள்..


மண்பளுவில் நின்றவுடல் 

மென்மிதப்பாய் எழும்ப 

உள்நரம்பில் நின்றசுழல் 

இன்னொலியாய் இயங்க 

கண்முனையில் தேங்குநிறம் 

மென்னொளியாய் முயங்க 

பெண்ணுருவாய் பெருவிசையாய் 

பேருயிராய் வந்தாள்..


உள்ளறையில் ஓய்ந்தவொலி 

உள்ளதிர்வாய் முழங்க 

மென்செவியில் ஊமைவலை 

மென்னொலியாய் புழங்க 

விண்ணதிரும் வன்மழையும் 

மென்பனியாய் இறங்க 

பெண்ணுருவாய் பெருமிதமாய் 

பேருயிராய் வந்தாள்..


புதன், 25 மார்ச், 2026

சிறகுகள் சுமக்கும் நிலம்..

உதிர்ந்த சிறகுகளின் குருதியில்

நனைந்து கிடக்கிறது நிலம்

வண்ணங்களின் சித்திரங்களுக்குப் பின்னால்

யாரும் வாசிக்காத ஒரு பழைய கதை

மண்ணின் மடிப்புகளில் 

நெளிந்து கொண்டிருக்கிறது.


​ஆகாயத்தின் நீலத்தை 

நீ இப்போது  குடிக்கிறாய்

ஆனால் உன் கால்களில் 

இன்னமும் ஒட்டியிருக்கிறது

புழுதியோடு மல்லுக்கட்டிய அந்தக்

கடின உழைப்பின் ஈரம்.


தசைகள் கிழிபட்டு

முதுகெலும்புகள் நொருங்கி

உன் மெல்லிய சிறகுகள் 

ஒரு கூண்டுக்குள் ஒடுங்கியது

திசைகளை அளப்பதற்காக அல்லவா?, 


‘​மறதி ஒரு துரோகம்’ என

உன் சிறகின் ஓரத்திலிருக்கும் 

கரும்புள்ளி சொல்லாமல் சொல்கிறது.


நீ பூக்களில் தேன் தேடித் திரிகிறாய்

அந்தப் பூக்களோ

உனக்காகத் தன்னுயிர் ஈந்த 

ஒரு கம்பளிப்பூச்சியின்

கல்லறையிலிருந்து முளைத்தவை


​சிறகடிப்பின் ஒவ்வொரு அதிர்விலும்

மண்ணுக்குள் புதையுண்டவர்களின் 

மூச்சுக்காற்று இருக்கிறது

வானம் உனக்குச் சொந்தமாகலாம்

ஆனால் உன் அடியில் ஓடும் 

நிலத்தின் நரம்புகளில்

உன் பழைய வடிவத்தின் 

தழும்புகள் இன்னும் ஆறவில்லை.


​விடுதலை என்பது 

வெறும் பறத்தல் மட்டுமல்ல 

பறக்கும் திசையெங்கும் 

தான் ஊர்ந்து திரிந்த பாதையையும்

உதிர்ந்து போன வாழ்வையும் 

நெஞ்சில் ஏந்திச் சுமப்பதே


​நினைவிருத்தல் என்பது சுமையல்ல

அதுவே சிறகுகளுக்கு 

வலிமையைத் தரும் காற்று,


பட்டாம்பூச்சி ஒருபோதும் 

கம்பளிப்பூச்சியை மறப்பதில்லை

ஏனெனில்,

அந்த மரணத்தின் சாம்பலிலிருந்துதான்

இந்த வாழ்வின் 

வண்ணங்கள் உயிர்த்தெழுந்தன..



புதன், 18 மார்ச், 2026

உடைந்த பிரார்த்தனை..

காலை

உடைந்த ஒரு கடிகாரத்தின் உள்ளே

இன்னொரு நாளாக விழித்துக்கொள்கிறது


நகரம்

ஆன்மா அகற்றப்பட்ட உடல், 

அங்கங்கள் இயங்குகின்றன

இதயம் நினைவாக மட்டுமே துடிக்கிறது.


சாலைகளின் ஓரங்களில்

கேள்விகள் காத்திருக்கின்றன

பதில் என்பது

இன்னொரு அடைபட்ட கதவின் பெயர்.


கோயில்களின் மாடங்களில்

மழை பெய்கிறது,

ஆனால்

பிரார்த்தனைகளின் தொண்டை 

உலர்ந்தே கிடக்கிறது.


நாம் கடவுளை நோக்கிக் கூவுகிறோம்

எதிரொலி மட்டும் திரும்புகிறது 

அதுவும்

நம் குரலின் சிதைந்த வடிவமாக.


வரலாறு

நொருங்கிய எலும்புகளைப் போல

காலத்தின் மூலையில் கொட்டப்பட்டுள்ளது

அவற்றிலிருந்து

எதிர்காலம் கட்ட முயல்கிறோம்.


மனிதர்கள்

ஒருவரையொருவர் கடந்து செல்கிறார்கள்

முகங்கள் நிறைய முகமூடிகள்

கண்கள் தப்பிக்க வழிகள்.


நாம் கேட்கிறோம்

ஏன் இருக்கிறோம்? 

உலகம் பதிலளிக்கிறது 

‘இருப்பதற்கான காரணம்

இருப்பதே’ 


இந்த வெறுமையில்தான்

என் உயிர்

ஒரு சிறிய தீப்பொறியைப் போல

அர்த்தத்தைத் தேடித் தேடித்

தன்னை எரித்து விட முயல்கிறது.


உலகம் கவனிக்காமல்

அபத்தத்தின்

மிகவும் ஒழுங்கான இயந்திரமாக

தன் சுழற்சியைத் தொடர்கிறது


நான் மட்டும்

அந்த இயந்திரத்தின் நடுவில்

ஓர் உடைந்த பிரார்த்தனையாக

நின்றுகொண்டிருக்கிறேன்..

சனி, 14 மார்ச், 2026

மூச்சின் தூர்வை..

வாழ்வென்பது 

நேர்ப்பட்ட பெருவழியன்று, 

அஃது உவர்காற்று 

அலைக்கழித்துச் சிதைத்த

கிழிந்த பாய்மரம், 


நினைவுகளின் தையல்களொவ்வொன்றும் 

உடம்பின் வடுக்களோடு 

உரசிக்கொண்டு

புதிர்ததும்ப திசையற்று நிலைகொள்கிறது, 


துணையெனத் தொடர்ந்த முகங்கள்

பெருவெள்ளம் வடிந்தபின்

எஞ்சிநிற்கும் மணல் திட்டுகளாய்

ஈரமிலா நிலத்தில் புதைந்து மறைந்தன, 

சந்திக்கவே இயலாதெனக்

கருதிய உறவுகள் 

முன்னறியாத் திசையின் காற்றாய்

வேற்று நகரின் நிழலில்

தோல் தீண்டித் திகைக்க வைக்கிறது 


இவ்வுடல் 

இப்போது வெறும் ஊனன்று

சிதைந்து கிடக்கும் நிலத்தின் 

வரைபடம், 

இதில் தழும்பாய் எஞ்சிக் கிடக்கும் 

நினைவுகளென்பது 

ஆறிய காயமல்ல,

உறக்கமற்ற இரவுகள் 

கடித்துக் குதறிய

காலத்தின் தடம் அழிந்த 

நிலப்பரப்பு, 

மெல்ல மெல்ல உட்கசிந்து 

உவர் நீர் நிலத்தை அரிப்பதாய் 

நினைவுகள் உள்ளிருந்தென் 

இருப்பின் ஆழத்தைத் தின்னுகின்றன 


தொடர் சங்கிலியாய் நீளும் 

வாழ்வின் இந்த வளையத்தை

நினைவின் இரைச்சலற்று,

துயரத்தின் கறை படிந்த நிழலற்று,

வலி இன்றி மெல்லக் கழற்றிவிட

இப்போதோர் ஆசை எழுகிறது 


வாழ்க்கை இப்போது 

கேள்வியாகத் தெரியவில்லை 

அது கரை தேடாத மெதுவான

உயிப்பு அலையாய்… 


திங்கள், 2 மார்ச், 2026

அரை மீசையின் தீர்க்கதரிசனம்

செதுக்கிச் சீராக்கிய 

அந்தச் சிறு மீசையின் ஓரத்தில்

தாய் நிலத்தின் நடுக்கம் குடியிருந்தது 

அவன் தனது சொந்த மண்ணின் 

வேர்களைத் தடவுகிறான் 

ஆனால் அங்கே ஈரம் இல்லை 

வங்கியின் இரும்புக் கதவுகளும் 

மை படிந்த காகிதங்களும்

அவன் காற்றைத் திருடிச் சென்றிருந்தன.


வந்தேறிப் பறவைகளின் சிறகுகள்

அவன் வானத்தை மறைத்து நின்றன 

அவன் காலடியில் இருந்த மண்

அவனுக்கே அந்நியமானதை எண்ணியபோது 

அவனது நரம்புகளில்

அடக்கப்பட்ட ஆவேசத்தின் கசப்பு

கரும்பாறையெனத் திரண்டது.


கடல் அலைகளின் ஓசையை விட

அவர்களின் கூச்சல்கள் 

தனியாக உரக்கக் கேட்கின்றன 

வெள்ளித் திரைகளில் அவர்கள் 

காயங்கள் மட்டும் 

மினுமினுக்கும் வைரங்களாய் 

விற்கப்படுகின்றன, 


ஆனால் உலகப் போர்களில் 

மடிந்து போன பெயரற்ற மனிதர்கள்

எங்கே போனார்கள் ? 

மண்ணோடு மண்ணாய் போன

கோடிக்கணக்கான எளியவர்களின்

குருதி காய்ந்த சுவடுகள் எங்கே ? 


இவர்கள் கொல்லப்பட்டதாய் 

காட்டப்படும் கழிவிரக்கக் கணக்கில் 

எண்ணிக்கையின் நீளம் 

உண்மையானது தானா ? 


அடிக்கப்பட்ட முத்திரைகளும் 

அடகு வைக்கப்பட்ட துயரங்களும்

அவர்கள் வலியை மட்டும் 

புனிதமாக்கிச் சிரிக்கின்றன 

மற்றவர்களின் கண்ணீர்

உப்புக் கடலில் கலந்த 

வெறும் நீர் தானா ? 


அந்தப் பாதி மீசைக்காரன்

இவர்களை நான் 

ஏன் கொன்றேனென

இனி வரும் உலகு அறிவதற்காக 

மீதமிருந்த சிலரை விட்டுச் சென்றான் 


ஏன் அவன்  இவர்களை மட்டும்

மரணத்தின் பள்ளத்தாக்கிற்கு

துரத்தினானென்ற 

கேள்விக்கான விடை.., 


பாலஸ்தீனக் குழந்தைகளின் 

அப்பாவிக் கண்களில் 

திட்டமிட்ட போர்களால் 

அழிக்கப்படும் ஏதுமறியா மக்களின்

வழிந்தோடும் குருதியில் 

உலகின் ஒவ்வொரு மூலையிலும்

இடம்பெறும் சகல வகையான

சதிகளிலுமென 

அறமற்ற அத்துணையிலும் 

நிறைந்து போய்க் கிடக்கிறது 


வரப்போகும் காலத்தின் கைகளில்

அது குருதி தோய்ந்த சாட்சியமாய் 

இருக்கட்டும்.. 



வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

கரைதலின் வரைபடம்..

பார்வை மட்டத்தில் மட்டும் 
காதலைப் பயில்பவர்கள்
பொருட்களின் விளிம்புகளை மட்டுமே 
தொட்டுச் செல்கிறார்கள்.

அவர்களுக்கு முகமென்பது 
ஒளியின் திசைமாற்றத்தால் 
திரையில் விழும் தற்காலிக நிழல்.
விளக்கு அணைந்ததும்
நிழல் சுருங்கி 
சுவரோடு மறைவதைப் போல
பிரிவென்பது அவர்களுக்கு 
இருண்ட முடிவு.

ஆனால் 
வேதிவினையில் பிணைந்த 
இரண்டு தனிமங்களைப் போல
உள்ளுற உறைந்து போனவர்களுக்கு 
தொலைவு என்பது தர்க்கமற்றது.

கடல்நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டாலும்
அதன் உப்புத்தன்மை 
அலைகளின் மடியிலேயே தங்கிவிடுகிறது.
வெப்பம் நீரைப் பிரித்தாலும்
உப்பை அதனிடமிருந்து 
எப்படிக் கழுவ முடியும் ? 

வெளியேறும் ஒருவனைப் பின்தொடர 
கண்களுக்குத் தூரம் தேவை
ஆனால் குருதிக்குள் கலந்துவிட்ட துளிக்கு
உடலில் எங்கோ ஓடிக்கொண்டிருக்க 
திசைகள் தேவையில்லை.

நீயும் நானும் இப்போது 
ஒரே மரக்கட்டையில் கசிந்து படிந்த 
இரண்டு நிறங்கள்.
ஒன்றன் மீது ஒன்று படிந்துவிட்ட பிறகு
யார் எவரை வழிஅனுப்பி வைப்பது ? 

இங்கே பிரிவென்பது 
தன் நிழலைத் தானே கழற்றி எறிய முயலும் 
வீண் முயற்சி,
பொருட்கள் வேண்டுமானால் 
தூரம் நகரலாம் 
ஆனால் செறிந்துவிட்ட பிணைப்புக்கு
வெளியெங்கும் இடமில்லை 
அது முழுவதுமாய் 
அகத்திலேயே நிரம்பிவிட்டது..

வியாழன், 12 பிப்ரவரி, 2026

நத்தின் கூடு..

புத்தன் ஏகினான் 

அவனகன்ற திசை இப்போது

பாரமான ஒளியால் நிறைந்திருக்கிறது.


காலம் தன் 

பருப்பொருட் போர்வையைக் களைந்துவிட்டு 

சிறு நத்தையின் சுரிவளைக்குள்

நிர்வாணமாய் நுழைந்து கொண்டது.


இந்தச் சிறு சுண்ணச் சுருள்

வெறும் ஓடல்ல,

அண்டத்தின் பேரிரைச்சல் வடிகட்டப்பட்டு

மௌனமாக உறைந்துபோனதோர் 

உள்வெளி, 


புற உலகைத் தின்று தீர்த்த 

மகா தாகம் இப்போது 

இச்சிறு ஈரப்பதத்துள் 

தன்னைத் தானே கண்டடைந்து 

அடங்கியிருக்கிறது.


இப்போதில் 

நத்தையின் கூட்டுக்குள் இருப்பது 

அமைதியல்ல,

அஃதோர் உருவம் இழந்த பிரபஞ்சத்தின்

மீள முடியாத் தியானம்.


யாரும் அற்ற அந்தப் பீடத்தில்

இன்மை முடிசூடிக் கொள்கிறது..