ஞாயிறு, 26 ஜூலை, 2026

நீளும் தண்டவாளங்களாய்..

என்றோ ஒரு நாள் 

எமக்கு மிகவும் வயதாகிய பிறகு இந்தக் கடிதத்தை

உனக்குப் படித்துக் காட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.


ஆனால் சில உரைகளுக்கு மேடை கிடைப்பதில்லை,

சில காதல்களுக்கு வீடு கிடைப்பதில்லை

சில மனிதர்கள் ஒருவருக்கொருவர் வாழ்க்கையாக இருந்தும்

ஒரே வாழ்க்கைக்குள் சேர முடியாமல் போகிறார்கள்.


அதனால் இன்று இந்த நினைவுப் பதிவை உன்னிடம் அல்ல,

உன்னை ஒருகாலத்தில் விரும்பிய என் வாழ்வின் முன் வாசிக்கிறேன்.


நீ இப்போது எங்கே இருக்கிறாய் என்று எனக்குத் தெரியாது.

உன் தலைமுடியில் நரை வந்துவிட்டதா,

காலையில் எழுந்ததும் கண்ணாடியில் உன் முகத்தை ஒரு கணம் நீயே அடையாளம் காணாமல் நிற்கிறாயா,

உன் வீட்டில் யாருடைய காலடிச் சத்தங்கள் நிரம்பியிருக்கின்றன,

அதே லுமாலா சைக்கிள் தான் இன்னும் ஓடுகிறாயா 

எந்தச் சாளரம் வழியாக மழையைப் பார்க்கிறாய்


எதுவும் எனக்குத் தெரியாது.


ஆனால் ஒரு காலத்தில்

உன் சிரிப்பால் மாலை நேரம் தாமதமாக இருண்டது

என்பது மட்டும் எனக்குத் தெரியும்.


அது மிகச் சிறிய அதிசயம்.


உலகம் தன் வழக்கமான வேலையைச் செய்துகொண்டிருந்தது.

பேருந்துகள் சென்றன. கடைகள் மூடின. பறவைகள் தங்கள் இரவுகளைத் தேடின. கடிகாரங்கள் எந்தக் காதலுக்கும் இரக்கம் காட்டாமல் நகர்ந்தன.


ஆனால் நாம் மட்டும்,


‘போய் வருகிறேன்’


என்ற இரண்டு சொற்களுக்குள்

இன்னும் கொஞ்சம் வாழ முடியுமா என்று பார்த்துக்கொண்டிருந்தோம்.

மனிதன் எவ்வளவு விசித்திரமான உயிரினம்

அவனுக்குக் கிடைத்திருக்கும் நேரம் குறைவு என்பதை அறிந்தும்

அவன் காதலிக்கிறான்.

பிரிய வேண்டியிருக்கும் என்பதை அறிந்தும்

ஒருவரின் கையைப் பிடிக்கிறான்.


எல்லா உடல்களும் ஒருநாள் மண்ணுக்குத் திரும்பும் என்பதை அறிந்தும்

ஒரு குறிப்பிட்ட முகத்தை மட்டும் மரணத்திலிருந்து காப்பாற்றிவிட முடியும் என்பதுபோல் நினைவில் வைத்துக்கொள்கிறான்.


நானும் அப்படித்தான் உன்னை வைத்துக்கொண்டேன்.


நினைவில் அல்ல.

இதனைச் சொல்ல நினைவு என்பது மிகச் சிறிய சொல்.


நான் வாழ்ந்த வருடங்களின் உள்ளே

யாரும் திறக்காத ஓர் அறையைப்போல்

உன்னை வைத்துக்கொண்டேன்.


அங்கே காலம் நுழையவில்லை.


அங்கே இன்னும் நீ

நான் கடைசியாகப் பார்த்த வயதில்தான் இருக்கிறாய்.


நான்தான் முதுமையடைகிறேன்.

நீ இல்லை.


இதுதான் இழப்பின் கொடூரமான கருணை.

அது ஒருவரை நம்மிடமிருந்து எடுத்துச் செல்கிறது, 

பிறகு அவர்மீது காலம் கை வைக்க முடியாதபடி செய்துவிடுகிறது.


சில இரவுகளில் நான் யோசித்திருக்கிறேன், 


நீ என்னுடன் இருந்திருந்தால்

இவ்வளவு முழுமையாக என்னுள் இருந்திருப்பாயா ? 


நாம் ஒரே வீட்டில் வாழ்ந்திருந்தால் ? 

ஒரே படுக்கையின் இரண்டு பக்கங்களில் தூங்கியிருந்தால் ? 


காலையில் யார் முதலில் எழுவது, யார் கதவைப் பூட்ட மறந்தது,

யார் வாங்க வேண்டியதை வாங்கவில்லை,

எந்தச் செலவை யார் செய்தது, 


இந்தச் சிறிய கற்களால்

நமது காதல் ஒரு சாதாரண வீடாகக் கட்டப்பட்டிருக்குமா ? 

ஒருவேளை அது இன்னும் அழகாக இருந்திருக்கலாம் ? 

ஒருவேளை நாம் குழந்தைகளின் சத்தத்திற்குள் முதுமையடைந்திருப்போம்.

ஒருவேளை உன் நரைத்த தலைமுடியை நான் சீவியிருப்பேன்.

ஒருவேளை என் கைகள் நடுங்கத் தொடங்கியபோது

நீ என் சட்டையின் பொத்தான்களைப் போட்டிருப்பாய்.


அந்த வாழ்க்கையும் காதல்தான்.


அதை நான் குறைவாக எண்ணவில்லை

ஆனால் அது நமக்குக் கிடைக்கவில்லை, 


நமக்குக் கிடைத்தது வேறு ஒன்று, 

முடிவடையாத ஒன்றின் முழுமை.


அதனால்தான் உன்னை இழந்ததற்காக மட்டும் நான் வருந்தவில்லை.

நாம் வாழாத வாழ்க்கைக்காகவும் வருந்துகிறேன்.


ஒரு சமையலறை, இரண்டு கோப்பைகள்

நாற்காலியின் முதுகில் உன் ஆடை

ஞாயிற்றுக்கிழமை மதியம் 

காரணமே இல்லாமல் ஏற்பட்ட சிறிய சண்டை.

பிறகு பேசாமல் வைக்கப்பட்ட ஒரு தேநீர்,

இரவில், தூக்கத்தின் நடுவே, 

அறியாமலேயே ஒருவரை ஒருவர் தேடும் இரண்டு கைகள்.


நடக்காதவற்றிற்கும் நினைவு இருக்கிறது என்பதை

உன்னால்தான் அறிந்தேன்.


நாம் வாழாத நாட்கள்கூட

சில நேரங்களில் என்னுள் வந்து முதுமையடைகின்றன.


நம்மை காலம் பிரித்த நாள் எனக்கு நினைவிருக்கிறது.

அன்று அதை நான் விதி என்று அழைக்கவில்லை.

அது ஒரு நாளங்கிழிந்த குருதிப் பெருக்கு. 


என் வாழ்க்கையின் ஒரு பகுதியை

யாரோ என்னிடம் கேட்காமல் வெட்டி எடுத்துச் சென்றதுபோல் இருந்தது.


ஆண்டுகள் சென்றன, கோபம் சோர்ந்தது 

கேள்விகள் சோர்ந்தன.

ஏன் என்ற சொல்லுக்கே வயதாகிவிட்டது

ஆனால் காயம் மட்டும் போகவில்லை.

அதற்குள் உன் மணத்தைத் தாங்கிய வெளிச்சம் இருந்தது

அப்போதுதான் புரிந்தது

சில காயங்கள் ஆறுவதில்லை, 

அவற்றுக்குள் நாம் வாழக் கற்றுக்கொள்கிறோம்.


ஒருகாலத்தில் நெஞ்சு கருகிய இடத்தில்

பின்னர் ஒரு சிறிய விளக்கை ஏற்றுகிறோம்.

அன்று அது கொலை, இன்று அது கோயில்.

அங்கே நான் கடவுளை வணங்கவில்லை.

ஒருகாலத்தில் இரண்டு மனிதர்கள்

ஒருவரை ஒருவர் உண்மையாக நேசித்தார்கள்

என்ற உண்மையை மட்டுமே வணங்குகிறேன்.


நான் காதலைப் பற்றி இப்போது அதிகம் அறிந்தவன் என்று சொல்ல முடியாது.

மாறாக, வயதாக வயதாக அதைப் பற்றி நான் அறிந்ததாக நினைத்த அனைத்தும்

என்னைவிட்டு விலகிக்கொண்டிருக்கின்றன.


இளமையில் காதல் என்றால் அடைதல் என்று நினைத்தேன்

பின்னர் அது ஒன்றாக வாழ்தல் என்று நினைத்தேன்

அதன்பின் ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்வது என்று நினைத்தேன்.


இப்போது


காதல் சில நேரங்களில்

இவற்றில் எதுவுமல்ல என்று தோன்றுகிறது.

ஒருவருடைய வாழ்க்கையில்

நாம் இல்லாதபோதும்,

அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று

இன்னும் விரும்ப முடிவதே காதலின் கடினமான வடிவமாக இருக்கலாம்.


அவருடைய மகிழ்ச்சியில் நமக்கு இடமில்லாவிட்டாலும்

அந்த மகிழ்ச்சி அழியக்கூடாது என்று நினைப்பது, 

அவர் நம்மை மறந்திருந்தாலும்

அவருடைய இரவுகள் அமைதியாக இருக்கட்டும் என்று விரும்புவது.


ஒருகாலத்தில் நமக்குச் சொந்தம் என்று நினைத்த கையை

வாழ்க்கை வேறு ஒரு கரையில் வைத்த பிறகும்,

அந்தக் கை குளிரக்கூடாது என்று

தொலைவிலிருந்து வேண்டிக்கொள்வது.


அப்படியானால்,


உன்னை நான் இன்னும் காதலிக்கிறேனா ? 

அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.

ஏனெனில் சில உணர்வுகளுக்கு பெயர் வைத்தவுடன்

அவை தங்கள் பரப்பை இழந்துவிடுகின்றன.


இப்போது நீ என் காதலியா, நினைவா,

இழப்பா, ஒரு கடந்த காலமா ? 

எனக்குத் தெரியாது.


ஆனால் உலகில் எங்கோ

நீ இருக்கிறாய் என்ற எண்ணம் மட்டும்

சில இரவுகளில் இந்த உலகத்தை

எனக்கு இன்னும் சிறிது தாங்கக்கூடியதாக மாற்றுகிறது

அது போதும்.


ஒருநாள் ஒரு புகையிரத நிலையத்தில்

இரண்டு தண்டவாளங்களைப் பார்த்தேன்.

அவை ஒன்றையொன்று தொடவில்லை.

ஆனால் விலகவுமில்லை.


மலைகள் வந்தன, பாலங்கள் வந்தன.

மழை அவற்றை நனைத்தது, வெயில் அவற்றை எரித்தது.

ஆயிரக்கணக்கான மனிதர்கள்

அவற்றின் மேல் தங்கள் வருகைகளையும் பிரிவுகளையும் சுமந்து சென்றார்கள்.

ஆனால் அந்த இரண்டு இரும்புக் கோடுகளும்

ஒரே திசையை நோக்கி, ஒரே தொலைவைத் தாங்கி,

தொடாமல், விலகாமல் நீண்டுகொண்டிருந்தன.


அப்போதுதான்

நம்மை நினைத்தேன்.

நாம் சந்திக்கவில்லை என்று சொல்ல முடியாது.

நாம் சேர்ந்தோம் என்றும் சொல்ல முடியாது.

நாம் பிரிந்துவிட்டோம் என்று சொன்னால்

அதுவும் முழு உண்மை அல்ல.


நாம் ஒரே பயணத்தின் இரண்டு தண்டவாளங்கள்.

காலம் நம்மிடையே தனது புகையிரதங்களை ஓட்டிக்கொண்டே இருந்தது.


நாட்கள் கடந்தன, நகரங்கள் கடந்தன.

பிற மனிதர்கள் கடந்தார்கள், 

நமது இளமை கடந்தது.


ஆனால் எங்கோ,

எந்த வரைபடத்திலும் குறிக்கப்படாத ஒரு இடத்தில்,

நாம் ஒருவரை ஒருவர் நோக்கியபடியே

நீண்டுகொண்டிருந்தோம்.


ஒருநாள் நான் இருக்க மாட்டேன் 

நீயும் இருக்க மாட்டாய்

நம்மை அறிந்தவர்கள் இருக்க மாட்டார்கள்.

நாம் ஒருவருக்கொருவர் என்னவாக இருந்தோம் என்பதை

விளக்கக்கூடிய கடைசி மனிதனும்

இந்த பூமியிலிருந்து சென்றுவிடுவான்.


அப்போது நமது காதலுக்கு சாட்சி யார் ? 

புகைப்படங்களா? அவை மங்கும். 

கடிதங்களா ? அவை மக்கும்.

நினைவுகளா ? 

அவற்றைச் சுமந்த மூளைகளும்

ஒருநாள் மண்ணாகும்.


அப்படியானால்

நாம் உண்மையாக ஒருவரை ஒருவர் நேசித்தோம் என்பதற்கு

என்ன மீதமிருக்கும்?


ஒருவேளை….எதுவுமே இல்லை.

அதுவே அதன் அழகாக இருக்கலாம்.

இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு சிறிய காலத்திற்கு,

இரண்டு உயிர்கள் ஒருவருக்கொருவர் ஒளியாக இருந்தன.

பிரபஞ்சம் அதை பதிவு செய்யவில்லை.

விண்மீன்கள் தங்கள் வழியை மாற்றவில்லை.

கடல்கள் ஒரு அலையைக்கூட  அதிகமாக எழுப்பவில்லை.

வரலாறு நமது பெயர்களை எழுதவில்லை.


ஆனால் நாம் அறிவோம் 

ஒரு காலத்தில் இந்த அளவற்ற உலகத்தின் நடுவே

நான் உன்னை கண்டேன், நீ என்னைக் கண்டாய்.

அவ்வளவுதான்.

ஒரு மனித வாழ்விற்கு அது மிகச் சிறிய விடையமா ? 

எனக்குத் தெரியாது.


எனக்கு இப்போது தோன்றுவது 

ஒருவேளை அதுதான் எல்லாம்.


ஆகவே 

இந்தக் கடிதம் ஒருநாள் உன்னிடம் சென்றடைந்தால் 

என்னைத் தேடாதே 

நாம் வாழாமல் விட்ட வாழ்க்கையை

மீண்டும் நினைத்துப் கண்கள் பனிக்காதே 


சில அழகுகளை

அவற்றின் தொலைவிலேயே விட்டுவிட வேண்டும்.


நான் உன்னிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான்

எப்போதாவதொரு நீண்ட பயணத்தில் 

சாளரத்திற்கு வெளியே இரண்டு தண்டவாளங்கள்

மாலை வெளிச்சத்தில் நீண்டுகொண்டிருப்பதைப் பார்த்தால்,

ஒரு கணம் மட்டும் அவற்றைப் பார்.


என் பெயரை நினைக்க வேண்டாம் 

நம் கதையையும் நினைக்க வேண்டாம்.

அந்த இரண்டு இரும்புக் கோடுகள்

எவ்வளவு தொலைவு சென்றாலும்

ஒன்றையொன்று தொடாமலும், 

எவ்வளவு பிரிந்திருந்தாலும்

ஒன்றையொன்று விட்டுவிடாமலும் 

ஒரே இரவுக்குள்

நீண்டுகொண்டிருப்பதை மட்டும் பார்.


ஒருவேளை அந்தக் கணத்தில் 

நான் எங்கிருந்தாலும்

அதே தண்டவாளங்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.

ஒருவேளை இல்லை, அதுவும் பரவாயில்லை.

ஏனெனில் நம்முடைய கதை

நாம் மீண்டும் சந்திப்பதில் முடிவதில்லை.

நாம் சந்தித்தோம் என்பதிலேயே

அது முழுமையாகிவிட்டது.


ஒருநாள்

கடைசிப் புகையிரதமும் கடந்துபோகும், நிலையத்தின் விளக்குகள் அணையும்.

நமது பெயர்களைக் கடைசியாக நினைத்திருந்த மனிதனும்

தூங்கிவிடுவான், மழை பெய்து ஓயும்.

இரவு ஈரமான இரும்பின் மீது தன் கையை வைக்கும்.


அப்போது

யாருடைய வருகையையும் எதிர்பார்க்காமல், 

யாருடைய பிரிவையும் தடுக்காமல்,

ஒன்றையொன்று நோக்கியபடி,தொடாமல்,விலகாமல்,

இரண்டு தண்டவாளங்கள் மட்டும்

இருளுக்குள் தொடர்ந்து செல்லும்…



வெள்ளி, 10 ஜூலை, 2026

காலம் மட்டுமே அறியுமோ..

இந்தப் பிரபஞ்சம்
யாரையும் வெறுமனே 
அறிமுகம் செய்வதில்லை

கடல்
ஒரு சிப்பியை கரைக்கு எறியு முன்
ஆயிரம் இரவுகள்
அதனுள்ளே உப்பைச் சேர்க்கிறது.

அப்படித்தான்
சில மனிதர்கள் நம்முள் நுழைகிறார்கள் 
மழை போல அல்ல
மழைக்கு முன் 
மண்ணின் உடலில் எழும்
அந்த இரகசிய மணம் போல, 

சிலர்
கர்மாவின் கரிய விரல்களுடன் வருகிறார்கள்
நம் பழைய தோலை உரித்து
நம்மை நமக்கே தெரியாத 
உருவமாக்கிச் செல்கிறார்கள்.

அவர்கள் சென்றபின் தான் தெரியும், 
அது காதல் அல்ல, உலை.
நாம் எரிய வேண்டும் என்பதற்காகவே
அவர்கள் நம் வாழ்வில் 
தீயாக வந்தார்கள்.

சிலர்
நம் கடன் மிச்சமுள்ள உயிரில்
ஒரு சிறிய விளக்கை ஏற்றி வைக்கிறார்கள்.
அவர்களின் குரல்
கிணற்றின் அடியில் விழுந்த வானம் போல
நீண்ட நாட்களுக்குப் பின்
நம்முள் நீலமாகத் திறக்கிறது, 

நாம் கேட்கிறோம் 
ஏன் இவர் ? 
ஏன் இப்போது ? 
ஏன் இந்தக் காயத்தின் வாசலில்
இந்த முகம் வந்து நின்றது ? 

பதில் சொல்லாமல்
காலம் தன் கருவறையில்
நட்சத்திரங்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

என்றோ ஒரு நாள்,
பழைய துயரத்தின் 
கதவைத் திறக்கும் போது
அங்கே கிடப்பது 
மனிதன் அல்ல 
பாடம், 
பிரிவு அல்ல
பிறப்பு, 
இழப்பு அல்ல,
நம்மை நம்மிடம் திருப்பி அனுப்பிய
பிரபஞ்சத்தின் கையெழுத்து.

அதுவரை
வந்தவர்களை வெறுக்காதே
சென்றவர்களைச் சபிக்காதே..

சந்திக்கும் ஒவ்வொருவரும்
நம் உயிரின் 
இருண்ட தோட்டத்தில்
தங்கள் விதையை 
புதைத்துச் செல்கிறார்கள்.

யார் மலராகிறார்
யார் விழுதாகிறார் 
யார் மணமாக மட்டுமே 
மீந்திருப்பார் என்பதையெல்லாம் 
இன்றுவரை 
காலம் மட்டுமே அறிந்து 
வைத்திருக்கிறது.. 


செவ்வாய், 23 ஜூன், 2026

மறமெனும் அறம்..

நீதியென்பது

வெறும் மன்றங்களின் மரமேசைகளில்

முத்திரை விழுந்த பத்திரமன்று, 

மண்ணை இழந்த மக்களின்

மூச்சுக்குள் இன்னும் அணையாத

சூடான சாம்பல்.


ஓரினத்தின்  தேசம்

வரைபடக்காரனின் கருநிறக் கோட்டால் மட்டும்

பிறப்பதில்லை,

அதன் முதுகெலும்பில்

நூற்றாண்டுகள் நடந்த காயங்கள்,

அதன் மொழியின் பற்களுக்குள்

கடித்துப் பிடிக்கப்பட்ட நினைவுகள்,

அதன் இறந்தவர்களின் பெயர்களை

மறக்க மறுக்கும் குழந்தைகளின் நாக்கு 

இவற்றால்தான் அது கருவுறுகிறது.


“இனிச் சாத்தியமில்லை” என்றார்கள், 

உலகம் தன் 

இரும்புக் கணக்குப் புத்தகத்தைத் திறந்து

தேசிய இனங்களின் கனவுகளை

எண்ணிக்கைக்கு வெளியே தள்ளியது, 

விடுதலை என்பது 

பெரிய அரசுகளின் அனுமதிச் சீட்டு, 

தேசம் என்பது

வல்லரசுகளின் மேசையில் 

மீதமிருக்கும் உப்பு.


ஆனால் வரலாறு

அதிகாரத்தின் வாயால் மட்டும் பேசுவதில்லை, 

சில வேளைகளில் அது 

அடக்கப்பட்ட ஒரு தாயின்

அடுப்புச் சாம்பலில் கையெழுத்திடுகிறது, 

சில வேளைகளில்

சிறைக்கதவின் இரும்பில்

ஒரு நகத்தின் கீறலாய்த் தொடங்குகிறது, 

சில வேளைகளில்

மரணத்தைக் கடந்துபோன இளைஞர்களது

என்பின் அமைதியிலிருந்து

மின்னலாக எழுகிறது.


நியாயம் மட்டுமே வெற்றியாய் ஆகாது 

காலத்தையும் கணக்கையும்

புவியின் குளிர்ந்த அரசியலையும் கடக்க வேண்டும்.

மண்ணின் உண்மைக்குக் குரல் வேண்டும்,

குரலுக்குத் தொடர்ச்சி,

தொடர்ச்சிக்கு உடைக்க முடியாத உள்ளெரி.

அந்த உள்ளெரியே

மாவீரர்களின் ஆன்மா.

அவர்கள் இறந்தவர்கள் அல்ல, 

மண்ணுக்குள் வைத்துவிடப்பட்ட

தீக்கற்கள்.

ஒரு தலைமுறை தடுமாறும் பொழுது

அவர்கள் அடியிலிருந்து வெப்பம் தருவார்கள்.

ஒரு மொழி பயத்தில் நடுங்கும் பொழுது

அவர்கள் எழுத்துகளுக்குள் இரும்பு சேர்ப்பார்கள்.

ஒரு கொடி காற்றில்லாமல் தொங்கும் பொழுது

அவர்கள் காணாத மூச்சால்

அதை மீண்டும் அசைப்பார்கள்.

அரசியல் பலம் படைகளை எண்ணும்,

ஆன்ம பலமோ

எந்தத் தராசிலும் நிறுக்க முடியாதது 

மண்ணில் புதைந்த பெயர்களின் உறங்காத ஒளி.


தமிழீழம் 

தோல்வியின் பெயரல்ல, 

அது இன்னும் நிறைவேறாத

அறத்தின் நிலப்பெயர்.

கடல் அதைச் சூழ்ந்திருக்கலாம்

முள்வேலிகள் அதைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்

ஒப்பந்தங்களின் காகிதம்

அதன் குருதியை உலர்த்த முயன்றிருக்கலாம்.

ஆனால் ஒரு தேசம்

முதலில் நிலத்தில் அல்ல 

நினைவில் உயிர்வாழ்கிறது.

நினைவில் உயிர்வாழும் தேசத்தை

எந்த ஆட்சியும் முழுதாய் வெல்ல முடியாது.


மறமென்பது வெறும் சினமன்று 

அநீதியின் கழுத்தில் வைக்கப்படும்

அறத்தின் சூடான கை.

மண் மறுக்கப்பட்ட மக்களுக்கு

மறமும் ஓர் அறம்தான், 

மீண்டும் மனிதராய் நிமிரும்

முதற் பிரார்த்தனை.


ஆகவே,

நாம் காத்திருப்பதில்லை

குருதியை கொள்கையாக்கி,

இழப்பை மொழியாக்கி,

மரணத்தை மண்ணின் உரிமைச் சான்றாக மாற்றி

தொடர்கிறோம்


ஒரு நாள்

அரசியல் தன் குளிர்ந்த கைகளைப் பின்வாங்கும், 

ஒரு நாள்

வரைபடம் தன் பொய்யைத் திருத்தும், 

ஒரு நாள்

மண்ணின் கீழெழும் 

பல்லாயிரம் அமைதிக் குரல்கள்

ஒரே ஓசையாகி

உலகின் செவிப்பறையைத் திறக்கும்.

அந்நாள்

விடுதலை வெறும் கொடியாய் ஏறாது , 

தேசிய இனங்களின் திறவு கோலாய்

பட்டொளி வீசிப் பறக்கும்..


திங்கள், 15 ஜூன், 2026

மலையென எழுக..

வேர்கள் இருளில் துடிக்க 

வீழ்ந்த பெருமரம் 

பெருங்காற்றால் சாய்ந்ததல்ல, 

மண்ணுக்குள் பதுங்கிய 

கரையான்களின் சூழ்ச்சியால்

உட்குடைந்து சரிந்த மூச்சு


நிழலருந்திப் பசியாறிய சிறகுகள் 

வீழ்ந்த மரத்தின் வேர்களை 

பழுதென்று பழித்துச் செல்லும், 

முளைத்தால் மட்டுமே 

விதையெனக் கொண்டாடும்,

பனியில் கருகிய முளையைப் 

பிழையெனத் தூற்றும். 


சந்தை மனிதர்களின் 

துருப்பிடித்த தராசுகளில் 

உன் காயங்களில் வழியும் 

செங்குருதியை நிறுக்க முயலாதே, 


வெற்றிக்கு மலர்தூவும் 

குருட்டு விழிகள் 

தோல்வியின் கையறு விம்மலை 

மரணமென்று சுட்டும் 


இது பொதுமனத்தின் பெருவியாதி


வரண்ட நிலம் பிளந்து பூத்த 

செங்குருதிப் பூவே 

அவர்கள் உன் வியர்வையை 

பிழையென அளக்கட்டும்,

நீ அதை அடுத்த பெருங்காட்டின் 

மழைநீர் என நம்பு,


இழப்பின் சாம்பலை 

நெற்றியில் பூசாதே,

அது உன் வேர்களைக் காக்கும் 

கவசப் படலம்.


காட்டுமகன் எறிந்த கூர்வேல் 

இலக்கைத் தவறவிட்டால் 

வேலின் கூரே பிழையாகாது 

திசையை வளைத்த 

பெருங்காற்றின் சூழ்ச்சி அது


முறிந்த வாளின் எஃகினை

உன் மார்புக்குள் 

நீயே குத்திச் சிதைக்காதே, 


கூட்டுமனத்தின் கூச்சல்களைப் புறந்தள்ளு, 


நெருப்பு அணைவதில்லை 

அது கனன்று உறங்குகிறது

மீண்டும் பெருநெருப்பாய் 

வெடித்தெழக் காத்திருக்கிறது, 


நீ இழந்தது விடுதலையையல்ல,

வெறும் காலத்தின் ஒரு துளியை மட்டுமே

உன் பாதங்களில் படிந்த 

செம்மண்ணின் மீது ஆணையாய் 

உன் குருதியின் திசை பிழையற்றது 

மலையென எழுக.. 


வியாழன், 11 ஜூன், 2026

விண்மீனுக்கான பதில்..

உன் கடிதம்

இன்றிரவுதான் வந்து சேர்ந்தது

நீ அணைந்து

எத்தனை ஊழிகளோ…

இருந்தும் வாசிக்கிறேன் 

ஒளியின் கையெழுத்தில்

ஒரு பிழையும் இல்லை 


நான் ஒன்றும் பெரியவன் இல்லை 

கடற்கரையில் நின்று

அலைகளை எண்ணத் தொடங்கி

இடையிலே மறந்தவன்

உலகம் என்னும் ஏட்டை

ஒருமுறை புரட்டி,

மொழி தெரியவில்லை என்று

மூடி வைத்தவன்.


என்றாலும் சொல்கிறேன் 

புரியாததால்தான்

இத்தனை அழகு, 

விடை தெரிந்த புதிரை

யார் மறுமுறை கேட்பார்?


தெருவில் நடக்கிறேன்:

ஒவ்வொரு முகமும்

எழுதி முடிக்காத கடிதம், 

எவரும் இங்கே

முழுமையாய் வாசிக்கப்படவில்லை, 


உனக்குத் தெரியுமா விண்மீனே 

இங்கும் உன்னைப் போல் 

எத்தனையோ பேர்..


வலை பின்னிய கைகளில்

சிலை தூங்கியது

சோறு வடித்த விரல்களில்

யாழ் மறந்து கிடந்தது

எவரும் அறிந்திலர் 

தாமுமே அறிந்திலர்.


ஆதலால்,

உன் காலங்கடந்த ஒளியை

முகம் நிமிர்த்தி ஏற்கிறேன்.

நான் மறையும்போது

எங்கோ ஓர் இருண்ட கண்ணை நோக்கி

என்னிடமிருந்தும் ஏதோ ஒன்று

புறப்படும் 


புரிதல் எனக்கு வாய்க்கவில்லை

அன்பு செய்யத்தான் தெரியும்.

இதோ 

உன் ஒளி விழுந்த இடத்தில்

என் கண்களின் ஓரத்தில் 

ஒரு துளி உப்பு..


சனி, 6 ஜூன், 2026

இரெத்தம் தோய்ந்த செஞ்சட்டை

அவர்கள் அணிந்த செஞ்சட்டை 

விடியலின் நிறமன்று,

எங்கள் வீதிகளில் உறைந்த   

பழைய குருதியின் 

காய்ந்த செதில்.


எங்களின் 

துயரப் பாடல்களைத் திருடி

தமக்கான மகுடத்தின் இசையை 

மீட்டிக்கொண்டார்கள்.


அரியணை ஏறியதும்,

செம்போர்வையைக் கிழித்து 

பழைய நச்சுப்பற்களை நீட்டுகிறார்கள்.


துக்கத்தின் சுவடுகளுக்கு 

விலங்கிடுகிறார்கள்

எங்கள் நடுகற்களின் மேல் 

தார் ஊற்றி 

பெருவீதி சமைக்கிறார்கள்.


உதடுகளை இரும்புக் 

கம்பியால் தைக்கலாம்

ஆனால் குரல்வளைக்குள் புதைக்கப்படும் 

பாடல் அழிவதில்லை.


அது குருதிக்குள் இறங்கி,

எலும்புகளைக் கூராக்கும் 

உப்பாய் உறைகிறது,


தொண்டையை நெரிக்கும் 

உங்கள் அதே விரல்கள்தான்

பாறையைப் பிளக்கும்

வேர்களின் தீராச் சினத்தையும் 

மண்ணுக்குள் மூட்டுகின்றன.


எங்கள் அமைதி 

ஓய்ந்துபோன மூச்சல்ல

அது உங்களின் 

இரும்புச் சங்கிலிகளைத் தின்னக் காத்திருக்கும்

கூர்மையான துரு..



சனி, 16 மே, 2026

மறம் துயிலும் நிலம்..

உப்பங்காற்றில் தேய்ந்து கரைகிறது 

பெருங்காலம் 

நந்திக்கடலின் உவர்ச்சேற்றில் 

புதைந்த எம் வேர்களின் என்புகள் 

ஊழியின் சுழற்சியில் 

சிதைந்து சுண்ணமாகிவிட்டன.


வையத்தின் நடுவண் மன்றங்களில் 

நடுவுநிலையை நிறுக்கும் 

தராசுத் தட்டுகள்

துருப்பிடித்து அறுந்து வீழ்ந்து 

பல பருவங்கள் ஆகிவிட்டன

வல்லாதிக்கத்தின் செவிகளில் 

உறைந்து கிடப்பது 

பாறையினும் இறுகிய 

பெருஞ்செவிடு, 


கருகிப்போன பனைமரங்களின் 

பட்டையான நெஞ்சில் 

தன் தலையையடித்து 

முட்டி அழுகிறது நாதியற்ற காற்று 

அது கடந்து செல்லும் 

பாழடைந்த முற்றங்களில் 

எம் பிதாக்களின் பெருமூச்சு மட்டுமே 

புழுதியாய்ப் படிந்திருக்கிறது.


எல்லாவற்றையும் இழந்து

எரியுண்ட சுள்ளிகளாய் 

உலகப் பெருவெளியில் வீசப்பட்டுவிட்டோம்


நாக்கு அறுபட்டவர்களின் 

மௌனப் பெருவலியோடு

வெறுமையின் சாம்பலைத் தின்றுகொண்டிருக்கிறது 

எஞ்சிய தலைமுறை,


எம் குருதியின் 

ஈரம் காய்ந்த நிலத்தில் 

அறம் கேட்டு முளைத்த 

பசும்புற்களும் பட்டுப்போயின.

கேட்பாரற்றுக் கிடக்கும் 

எம் ஏதிலி நிலையைப் பார்த்து 

இந்த அண்டவெளியின் கண்கள் 

குருடாகியிருக்கக்கூடும் 

இல்லையேல்

எம் துயரத்தின் எடையைத் தாங்க 

இந்த ஒற்றைக் கடலின் ஆழம் 

எங்ஙனம் காணும்… ? 




திங்கள், 4 மே, 2026

மைபடு விரல்..

மைபடு விரலால் முறியாது இரும்பு

பொய்ப்பெட்டி ஓலையில் 

பிறக்காது புயல்,

தாள்எண்ணித் தளையறுத்த 

இனம் உண்டோ வையத்தில் ? 

எண்ணிக்கை அவையில் 

எரியாது விடுதலை, 

எஃகுரசு, அனல்விதை, தளையறு

இரப்போர் வழியே பிழை 

வீணவை விடுத்து வெளிவா 

களமே வழி, குருதியே விதை

காண்..


திங்கள், 13 ஏப்ரல், 2026

என்னுயிர் நிலை..

முந்நீர் நீந்தி முழுமலை யிறந்து

நீருறை யாகும் பனிப்படு துருத்தியில்

உயவுமரப் பட்டையாய் உலர்ந்ததென் யாக்கை 

இழப்பதற் கினியோர் எஞ்சிய தில்லை 

அறுத்த வேரொன் றடிமண் விழைந்து

துடிக்குமாப் போல் தொல்வள நாட்டில்

செந்நிலந் தழுவியென் சில்லுயிர் விளிய

நல்குவை யாயின் நன்றென நலியும்

எல்லுழந் தழுங்கிய என்னுயிர் நிலையே..



புதன், 8 ஏப்ரல், 2026

ஈரானே தொன் நிலமே..

நந்திக்கடலின் 

குருதியுறைந்த அலைகளிலிருந்து 

நின் சாக்ரோசு மலைகளின் 

தகிக்கும் பாறைகளைத் தழுவுகிறேன் 


ஈரானே..


அயலாரின் உதடுகளில் விரியும் 

புன்னகையை நம்பாய் என நம்புகிறேன் 

அது, மரப்பட்டையெனப் பாசாங்கு செய்யும் 

உளுத்தலின் மென்மை.

அமைதி என்னும் வெள்ளைத் தாளை 

அவர்கள் மரமேசைகளில் விரிக்கையில் 

உன் பின்னறைகளில் 

அவர்கள் இரும்பைத் தீட்டும்

அரத்தின் ஓசை 

நின் செவிகளுக்கும் கேட்டிருக்கும் 


இந்த உரையாடல் நினக்கானதில்லை 

தம் எஃகு நுரையீரல்களில் 

பெருமூச்சை நிரப்பிக் கொள்ள

அரக்கப் பொறிகள் இட்டுக்கொண்ட 

கால நீட்சியென்பதை 

நீயும் அறியாமல் இராய்


உன் நிலவியலின் 

அடுக்குகளுக்குக் கீழே

தொடர்பற்றுப் புதைந்துகிடந்த 

அவர்களின் ஒற்றர்களான

பாலைவனத் தேள்களுக்கு 

மீண்டும் விடம் பாய்ச்சத் திறக்கப்பட்ட

இருட்டுப் பாதையே 

இந்த இணக்கப் பேச்சென்பதை 

நீயும் அறிவாய்


நெஞ்சின் உரத்தை 

உள்ளிருந்து அரிக்கும்

வெம்மையற்ற தீயே இந்த உறவாடல்.


அவர்கள் நினக்கு நீட்டும் 

அப்பத்தில் கலந்திருப்பது

நம்பிக்கையைச் சிதைக்கும் 

இரும்புத் துகள்கள், 


எம் ஈழக் காடுகளில் நாங்கள் முத்தமிட்ட 

அதே வஞ்சம்.., 

ஒன்றிணைந்த நின் பெருங்காட்டை

தனித்தனி விறகுகளாய்ப் பிளக்கவே 

அவர்கள் கோடரிகளோடு சிரிக்கிறார்கள்.


அவர்கள் போரை நிறுத்தவில்லை 

தொன் நிலமே..! 

தம் படைக்கலன்களின் 

குழல்களைக் குளிரவைக்கவும் 

நாளை வீசவிருக்கும் பெருநெருப்பிற்காய்

நின் மக்களின் எலும்புகளின் 

திண்மையை அளக்கவுமே

இந்த அமைதியைப் போர்த்திருக்கிறார்கள்.


இது பெருங்காற்றின் ஓய்வன்று 

சுழலின் மையத்தில் இறுகிப்போன

மூச்சுத்திணறடிக்கும் வெற்றிடம்.


வானிறங்கும் 

எஃகுப் பறவையின் சிறகை

அமைதிப் புறாவென எண்ணி 

ஏமாறாய் என்பதை அறிவேன் 

இருப்பினும் 

எம் கழுத்தை அறுத்த 

அதே பட்டுநூலோடு அவர்கள் 

வரும்போது வாயடக்க முடியவில்லை 


இணக்கப் பேச்செனும் 

அந்த இனிக்கும் நஞ்சை 

உமிழ்ந்துவிடு 


எம் பனைவேர்களில் 

உறைந்திருக்கும் மெய்மையைப்போல் 

நின் அடிமண்ணின் ஆழத்தில் 

முளைத்த நெருப்பையும்,

அவர்களின் வழவழப்பான பொய்களால் 

எக்காலத்தும் அழித்துவிட முடியாது..