ஊர்க்குருவி - Thiru Poems
என் இன்றைய இருப்புக்கான நேற்றைய சுவடுகள்..
வெள்ளி, 10 ஜூலை, 2026
காலம் மட்டுமே அறியுமோ..
செவ்வாய், 23 ஜூன், 2026
மறமெனும் அறம்..
நீதியென்பது
வெறும் மன்றங்களின் மரமேசைகளில்
முத்திரை விழுந்த பத்திரமன்று,
மண்ணை இழந்த மக்களின்
மூச்சுக்குள் இன்னும் அணையாத
சூடான சாம்பல்.
ஓரினத்தின் தேசம்
வரைபடக்காரனின் கருநிறக் கோட்டால் மட்டும்
பிறப்பதில்லை,
அதன் முதுகெலும்பில்
நூற்றாண்டுகள் நடந்த காயங்கள்,
அதன் மொழியின் பற்களுக்குள்
கடித்துப் பிடிக்கப்பட்ட நினைவுகள்,
அதன் இறந்தவர்களின் பெயர்களை
மறக்க மறுக்கும் குழந்தைகளின் நாக்கு
இவற்றால்தான் அது கருவுறுகிறது.
“இனிச் சாத்தியமில்லை” என்றார்கள்,
உலகம் தன்
இரும்புக் கணக்குப் புத்தகத்தைத் திறந்து
தேசிய இனங்களின் கனவுகளை
எண்ணிக்கைக்கு வெளியே தள்ளியது,
விடுதலை என்பது
பெரிய அரசுகளின் அனுமதிச் சீட்டு,
தேசம் என்பது
வல்லரசுகளின் மேசையில்
மீதமிருக்கும் உப்பு.
ஆனால் வரலாறு
அதிகாரத்தின் வாயால் மட்டும் பேசுவதில்லை,
சில வேளைகளில் அது
அடக்கப்பட்ட ஒரு தாயின்
அடுப்புச் சாம்பலில் கையெழுத்திடுகிறது,
சில வேளைகளில்
சிறைக்கதவின் இரும்பில்
ஒரு நகத்தின் கீறலாய்த் தொடங்குகிறது,
சில வேளைகளில்
மரணத்தைக் கடந்துபோன இளைஞர்களது
என்பின் அமைதியிலிருந்து
மின்னலாக எழுகிறது.
நியாயம் மட்டுமே வெற்றியாய் ஆகாது
காலத்தையும் கணக்கையும்
புவியின் குளிர்ந்த அரசியலையும் கடக்க வேண்டும்.
மண்ணின் உண்மைக்குக் குரல் வேண்டும்,
குரலுக்குத் தொடர்ச்சி,
தொடர்ச்சிக்கு உடைக்க முடியாத உள்ளெரி.
அந்த உள்ளெரியே
மாவீரர்களின் ஆன்மா.
அவர்கள் இறந்தவர்கள் அல்ல,
மண்ணுக்குள் வைத்துவிடப்பட்ட
தீக்கற்கள்.
ஒரு தலைமுறை தடுமாறும் பொழுது
அவர்கள் அடியிலிருந்து வெப்பம் தருவார்கள்.
ஒரு மொழி பயத்தில் நடுங்கும் பொழுது
அவர்கள் எழுத்துகளுக்குள் இரும்பு சேர்ப்பார்கள்.
ஒரு கொடி காற்றில்லாமல் தொங்கும் பொழுது
அவர்கள் காணாத மூச்சால்
அதை மீண்டும் அசைப்பார்கள்.
அரசியல் பலம் படைகளை எண்ணும்,
ஆன்ம பலமோ
எந்தத் தராசிலும் நிறுக்க முடியாதது
மண்ணில் புதைந்த பெயர்களின் உறங்காத ஒளி.
தமிழீழம்
தோல்வியின் பெயரல்ல,
அது இன்னும் நிறைவேறாத
அறத்தின் நிலப்பெயர்.
கடல் அதைச் சூழ்ந்திருக்கலாம்
முள்வேலிகள் அதைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்
ஒப்பந்தங்களின் காகிதம்
அதன் குருதியை உலர்த்த முயன்றிருக்கலாம்.
ஆனால் ஒரு தேசம்
முதலில் நிலத்தில் அல்ல
நினைவில் உயிர்வாழ்கிறது.
நினைவில் உயிர்வாழும் தேசத்தை
எந்த ஆட்சியும் முழுதாய் வெல்ல முடியாது.
மறமென்பது வெறும் சினமன்று
அநீதியின் கழுத்தில் வைக்கப்படும்
அறத்தின் சூடான கை.
மண் மறுக்கப்பட்ட மக்களுக்கு
மறமும் ஓர் அறம்தான்,
மீண்டும் மனிதராய் நிமிரும்
முதற் பிரார்த்தனை.
ஆகவே,
நாம் காத்திருப்பதில்லை
குருதியை கொள்கையாக்கி,
இழப்பை மொழியாக்கி,
மரணத்தை மண்ணின் உரிமைச் சான்றாக மாற்றி
தொடர்கிறோம்
ஒரு நாள்
அரசியல் தன் குளிர்ந்த கைகளைப் பின்வாங்கும்,
ஒரு நாள்
வரைபடம் தன் பொய்யைத் திருத்தும்,
ஒரு நாள்
மண்ணின் கீழெழும்
பல்லாயிரம் அமைதிக் குரல்கள்
ஒரே ஓசையாகி
உலகின் செவிப்பறையைத் திறக்கும்.
அந்நாள்
விடுதலை வெறும் கொடியாய் ஏறாது ,
தேசிய இனங்களின் திறவு கோலாய்
பட்டொளி வீசிப் பறக்கும்..
திங்கள், 15 ஜூன், 2026
மலையென எழுக..
வேர்கள் இருளில் துடிக்க
வீழ்ந்த பெருமரம்
பெருங்காற்றால் சாய்ந்ததல்ல,
மண்ணுக்குள் பதுங்கிய
கரையான்களின் சூழ்ச்சியால்
உட்குடைந்து சரிந்த மூச்சு
நிழலருந்திப் பசியாறிய சிறகுகள்
வீழ்ந்த மரத்தின் வேர்களை
பழுதென்று பழித்துச் செல்லும்,
முளைத்தால் மட்டுமே
விதையெனக் கொண்டாடும்,
பனியில் கருகிய முளையைப்
பிழையெனத் தூற்றும்.
சந்தை மனிதர்களின்
துருப்பிடித்த தராசுகளில்
உன் காயங்களில் வழியும்
செங்குருதியை நிறுக்க முயலாதே,
வெற்றிக்கு மலர்தூவும்
குருட்டு விழிகள்
தோல்வியின் கையறு விம்மலை
மரணமென்று சுட்டும்
இது பொதுமனத்தின் பெருவியாதி
வரண்ட நிலம் பிளந்து பூத்த
செங்குருதிப் பூவே
அவர்கள் உன் வியர்வையை
பிழையென அளக்கட்டும்,
நீ அதை அடுத்த பெருங்காட்டின்
மழைநீர் என நம்பு,
இழப்பின் சாம்பலை
நெற்றியில் பூசாதே,
அது உன் வேர்களைக் காக்கும்
கவசப் படலம்.
காட்டுமகன் எறிந்த கூர்வேல்
இலக்கைத் தவறவிட்டால்
வேலின் கூரே பிழையாகாது
திசையை வளைத்த
பெருங்காற்றின் சூழ்ச்சி அது
முறிந்த வாளின் எஃகினை
உன் மார்புக்குள்
நீயே குத்திச் சிதைக்காதே,
கூட்டுமனத்தின் கூச்சல்களைப் புறந்தள்ளு,
நெருப்பு அணைவதில்லை
அது கனன்று உறங்குகிறது
மீண்டும் பெருநெருப்பாய்
வெடித்தெழக் காத்திருக்கிறது,
நீ இழந்தது விடுதலையையல்ல,
வெறும் காலத்தின் ஒரு துளியை மட்டுமே
உன் பாதங்களில் படிந்த
செம்மண்ணின் மீது ஆணையாய்
உன் குருதியின் திசை பிழையற்றது
மலையென எழுக..
வியாழன், 11 ஜூன், 2026
விண்மீனுக்கான பதில்..
உன் கடிதம்
இன்றிரவுதான் வந்து சேர்ந்தது
நீ அணைந்து
எத்தனை ஊழிகளோ…
இருந்தும் வாசிக்கிறேன்
ஒளியின் கையெழுத்தில்
ஒரு பிழையும் இல்லை
நான் ஒன்றும் பெரியவன் இல்லை
கடற்கரையில் நின்று
அலைகளை எண்ணத் தொடங்கி
இடையிலே மறந்தவன்
உலகம் என்னும் ஏட்டை
ஒருமுறை புரட்டி,
மொழி தெரியவில்லை என்று
மூடி வைத்தவன்.
என்றாலும் சொல்கிறேன்
புரியாததால்தான்
இத்தனை அழகு,
விடை தெரிந்த புதிரை
யார் மறுமுறை கேட்பார்?
தெருவில் நடக்கிறேன்:
ஒவ்வொரு முகமும்
எழுதி முடிக்காத கடிதம்,
எவரும் இங்கே
முழுமையாய் வாசிக்கப்படவில்லை,
உனக்குத் தெரியுமா விண்மீனே
இங்கும் உன்னைப் போல்
எத்தனையோ பேர்..
வலை பின்னிய கைகளில்
சிலை தூங்கியது
சோறு வடித்த விரல்களில்
யாழ் மறந்து கிடந்தது
எவரும் அறிந்திலர்
தாமுமே அறிந்திலர்.
ஆதலால்,
உன் காலங்கடந்த ஒளியை
முகம் நிமிர்த்தி ஏற்கிறேன்.
நான் மறையும்போது
எங்கோ ஓர் இருண்ட கண்ணை நோக்கி
என்னிடமிருந்தும் ஏதோ ஒன்று
புறப்படும்
புரிதல் எனக்கு வாய்க்கவில்லை
அன்பு செய்யத்தான் தெரியும்.
இதோ
உன் ஒளி விழுந்த இடத்தில்
என் கண்களின் ஓரத்தில்
ஒரு துளி உப்பு..
சனி, 6 ஜூன், 2026
இரெத்தம் தோய்ந்த செஞ்சட்டை
அவர்கள் அணிந்த செஞ்சட்டை
விடியலின் நிறமன்று,
எங்கள் வீதிகளில் உறைந்த
பழைய குருதியின்
காய்ந்த செதில்.
எங்களின்
துயரப் பாடல்களைத் திருடி
தமக்கான மகுடத்தின் இசையை
மீட்டிக்கொண்டார்கள்.
அரியணை ஏறியதும்,
செம்போர்வையைக் கிழித்து
பழைய நச்சுப்பற்களை நீட்டுகிறார்கள்.
துக்கத்தின் சுவடுகளுக்கு
விலங்கிடுகிறார்கள்
எங்கள் நடுகற்களின் மேல்
தார் ஊற்றி
பெருவீதி சமைக்கிறார்கள்.
உதடுகளை இரும்புக்
கம்பியால் தைக்கலாம்
ஆனால் குரல்வளைக்குள் புதைக்கப்படும்
பாடல் அழிவதில்லை.
அது குருதிக்குள் இறங்கி,
எலும்புகளைக் கூராக்கும்
உப்பாய் உறைகிறது,
தொண்டையை நெரிக்கும்
உங்கள் அதே விரல்கள்தான்
பாறையைப் பிளக்கும்
வேர்களின் தீராச் சினத்தையும்
மண்ணுக்குள் மூட்டுகின்றன.
எங்கள் அமைதி
ஓய்ந்துபோன மூச்சல்ல
அது உங்களின்
இரும்புச் சங்கிலிகளைத் தின்னக் காத்திருக்கும்
கூர்மையான துரு..
சனி, 16 மே, 2026
மறம் துயிலும் நிலம்..
உப்பங்காற்றில் தேய்ந்து கரைகிறது
பெருங்காலம்
நந்திக்கடலின் உவர்ச்சேற்றில்
புதைந்த எம் வேர்களின் என்புகள்
ஊழியின் சுழற்சியில்
சிதைந்து சுண்ணமாகிவிட்டன.
வையத்தின் நடுவண் மன்றங்களில்
நடுவுநிலையை நிறுக்கும்
தராசுத் தட்டுகள்
துருப்பிடித்து அறுந்து வீழ்ந்து
பல பருவங்கள் ஆகிவிட்டன
வல்லாதிக்கத்தின் செவிகளில்
உறைந்து கிடப்பது
பாறையினும் இறுகிய
பெருஞ்செவிடு,
கருகிப்போன பனைமரங்களின்
பட்டையான நெஞ்சில்
தன் தலையையடித்து
முட்டி அழுகிறது நாதியற்ற காற்று
அது கடந்து செல்லும்
பாழடைந்த முற்றங்களில்
எம் பிதாக்களின் பெருமூச்சு மட்டுமே
புழுதியாய்ப் படிந்திருக்கிறது.
எல்லாவற்றையும் இழந்து
எரியுண்ட சுள்ளிகளாய்
உலகப் பெருவெளியில் வீசப்பட்டுவிட்டோம்
நாக்கு அறுபட்டவர்களின்
மௌனப் பெருவலியோடு
வெறுமையின் சாம்பலைத் தின்றுகொண்டிருக்கிறது
எஞ்சிய தலைமுறை,
எம் குருதியின்
ஈரம் காய்ந்த நிலத்தில்
அறம் கேட்டு முளைத்த
பசும்புற்களும் பட்டுப்போயின.
கேட்பாரற்றுக் கிடக்கும்
எம் ஏதிலி நிலையைப் பார்த்து
இந்த அண்டவெளியின் கண்கள்
குருடாகியிருக்கக்கூடும்
இல்லையேல்
எம் துயரத்தின் எடையைத் தாங்க
இந்த ஒற்றைக் கடலின் ஆழம்
எங்ஙனம் காணும்… ?
திங்கள், 4 மே, 2026
மைபடு விரல்..
மைபடு விரலால் முறியாது இரும்பு
பொய்ப்பெட்டி ஓலையில்
பிறக்காது புயல்,
தாள்எண்ணித் தளையறுத்த
இனம் உண்டோ வையத்தில் ?
எண்ணிக்கை அவையில்
எரியாது விடுதலை,
எஃகுரசு, அனல்விதை, தளையறு
இரப்போர் வழியே பிழை
வீணவை விடுத்து வெளிவா
களமே வழி, குருதியே விதை
காண்..
திங்கள், 13 ஏப்ரல், 2026
என்னுயிர் நிலை..
முந்நீர் நீந்தி முழுமலை யிறந்து
நீருறை யாகும் பனிப்படு துருத்தியில்
உயவுமரப் பட்டையாய் உலர்ந்ததென் யாக்கை
இழப்பதற் கினியோர் எஞ்சிய தில்லை
அறுத்த வேரொன் றடிமண் விழைந்து
துடிக்குமாப் போல் தொல்வள நாட்டில்
செந்நிலந் தழுவியென் சில்லுயிர் விளிய
நல்குவை யாயின் நன்றென நலியும்
எல்லுழந் தழுங்கிய என்னுயிர் நிலையே..
புதன், 8 ஏப்ரல், 2026
ஈரானே தொன் நிலமே..
நந்திக்கடலின்
குருதியுறைந்த அலைகளிலிருந்து
நின் சாக்ரோசு மலைகளின்
தகிக்கும் பாறைகளைத் தழுவுகிறேன்
ஈரானே..
அயலாரின் உதடுகளில் விரியும்
புன்னகையை நம்பாய் என நம்புகிறேன்
அது, மரப்பட்டையெனப் பாசாங்கு செய்யும்
உளுத்தலின் மென்மை.
அமைதி என்னும் வெள்ளைத் தாளை
அவர்கள் மரமேசைகளில் விரிக்கையில்
உன் பின்னறைகளில்
அவர்கள் இரும்பைத் தீட்டும்
அரத்தின் ஓசை
நின் செவிகளுக்கும் கேட்டிருக்கும்
இந்த உரையாடல் நினக்கானதில்லை
தம் எஃகு நுரையீரல்களில்
பெருமூச்சை நிரப்பிக் கொள்ள
அரக்கப் பொறிகள் இட்டுக்கொண்ட
கால நீட்சியென்பதை
நீயும் அறியாமல் இராய்
உன் நிலவியலின்
அடுக்குகளுக்குக் கீழே
தொடர்பற்றுப் புதைந்துகிடந்த
அவர்களின் ஒற்றர்களான
பாலைவனத் தேள்களுக்கு
மீண்டும் விடம் பாய்ச்சத் திறக்கப்பட்ட
இருட்டுப் பாதையே
இந்த இணக்கப் பேச்சென்பதை
நீயும் அறிவாய்
நெஞ்சின் உரத்தை
உள்ளிருந்து அரிக்கும்
வெம்மையற்ற தீயே இந்த உறவாடல்.
அவர்கள் நினக்கு நீட்டும்
அப்பத்தில் கலந்திருப்பது
நம்பிக்கையைச் சிதைக்கும்
இரும்புத் துகள்கள்,
எம் ஈழக் காடுகளில் நாங்கள் முத்தமிட்ட
அதே வஞ்சம்..,
ஒன்றிணைந்த நின் பெருங்காட்டை
தனித்தனி விறகுகளாய்ப் பிளக்கவே
அவர்கள் கோடரிகளோடு சிரிக்கிறார்கள்.
அவர்கள் போரை நிறுத்தவில்லை
தொன் நிலமே..!
தம் படைக்கலன்களின்
குழல்களைக் குளிரவைக்கவும்
நாளை வீசவிருக்கும் பெருநெருப்பிற்காய்
நின் மக்களின் எலும்புகளின்
திண்மையை அளக்கவுமே
இந்த அமைதியைப் போர்த்திருக்கிறார்கள்.
இது பெருங்காற்றின் ஓய்வன்று
சுழலின் மையத்தில் இறுகிப்போன
மூச்சுத்திணறடிக்கும் வெற்றிடம்.
வானிறங்கும்
எஃகுப் பறவையின் சிறகை
அமைதிப் புறாவென எண்ணி
ஏமாறாய் என்பதை அறிவேன்
இருப்பினும்
எம் கழுத்தை அறுத்த
அதே பட்டுநூலோடு அவர்கள்
வரும்போது வாயடக்க முடியவில்லை
இணக்கப் பேச்செனும்
அந்த இனிக்கும் நஞ்சை
உமிழ்ந்துவிடு
எம் பனைவேர்களில்
உறைந்திருக்கும் மெய்மையைப்போல்
நின் அடிமண்ணின் ஆழத்தில்
முளைத்த நெருப்பையும்,
அவர்களின் வழவழப்பான பொய்களால்
எக்காலத்தும் அழித்துவிட முடியாது..
ஞாயிறு, 5 ஏப்ரல், 2026
சுடப்படாத செங்கற்களின் அழுகுரல்..
பனிபடர்ந்த அந்நிய நிலக்கூரையின்கீழ்
உறக்கம் தொலைத்த தோழனொருவன்
பறிக்கப்பட்ட நம் நாட்காட்டியின்
கிழிந்த தாள்களை
அன்றாடம் அனுப்புகிறான்,
அவை வெறும் நிழற்படங்கள் அல்ல
களத்தில் வீழ்ந்த பெருவீரர்களின்
உறைந்துபோன மூச்சுக்காற்று.
அவர்களின் சுருண்ட முடிக்குள்
நமது ஊர்க் காற்றாடியின் சுழற்சி
இன்னும் நிற்கவில்லை,
விரிந்த மார்புகளில்
எதிர்காலக் குழந்தைகளின் தொட்டிற் கயிறுகள்
அறுபட்டுத் தொங்குகின்றன.
சிமிட்டாத அந்த அழகிய இமைகளுக்குள்
சுடப்படாத செங்கற்களைக் கொண்ட
கட்டப்படாத வீடுகளின் ஈரம்
காயாமல் கிடக்கின்றது,
பல்லாயிரம் இளம்பூக்களைப் பிழிந்து
நிலத்திற்கு உதிரம் ஊட்டியும்
இன்னும் சிவக்கவில்லையே
நம் வைகறை?
தமது வேர்களை மறந்துவிட்டு
நினைவுகளைத் தின்று செரித்த
பொருளற்ற வெற்றுடல்களின்
ஊர்வலத்தைப் பார்க்கையில்
வெறுப்பின் கூரிய நகங்கள்
என் விலா எலும்புகளைக் கீறுகின்றன.
அறம் என்பது
எரியும் காட்டின் மீது பறந்து செல்லும்
செவிடான பறவையின் சிறகசைப்புத் தானா ?
மீண்டும்
அந்த ஒளிரும் முகங்களை
உற்று நோக்குகிறேன்,
அவர்களின் கருமணிகளின் ஆழத்தில்
பழங்காலக் கிணறொன்றின்
குளிர்ந்த அமைதி குடிகொண்டிருக்கிறது,
அந்த இருளில் இருந்து வழியும்
ஒளியின் மெல்லிய நூலிழையைப்
பற்றிக்கொள்கிறேன்,
அந்தப் பார்வையின் துவாரத்தினூடாக
ஒரு பாதை திறக்கிறது
அது, சாவு என்ற சொல்லே இல்லாத
நிலத்திற்குச் செல்லும்
இரகசியப் பாதை..