Friday 17 May 2019

இந்த நாட்கள் மே 17-18

சில் வண்டில்லாத
அடர் காடாய்
காற்றூதல் கேட்காத
இராக் கடலாய்
தவளைகள் பேசாத
குளக் கரையாய்
சிறகோசை இல்லாத
பழ மரமாய்
தொடுவானம் தெரியாத
விரி வெளியாய்
நீங்களும் விடைபெற்ற
இந் நாட்கள்..


Monday 13 May 2019

கீறுவோம் எமக்கான திசை..

தீ எம் வாசலையும் தீண்டினாலென
தீட்டி வைத்தவை எல்லாம்
தணிக்கவும், தற்காக்கவுந்தானென
எடுத்துக் கொள்ள வேண்டிய
மனதில் இருக்கிறோம்
ஏனெனில்
எவர் எவரை அடக்க நினைத்தாலும்
எம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை
அவர்களோடு சேர்ந்து
நீரெம்மை நீறாக்கிய நோவு
உடலெல்லாம் இருந்தாலும்
எதுவோ துடிக்கிறது உமக்காய்

அடித்தவன் தான் சரியோ
என்ற ஐயத்துக்கு
உம்மை ஆளாக்கும் வரை
அவர்களும் ஓயப்போவதில்லை

ஓரினம் நாமென்ற
உள்ளம் உமக்குள்ளே
உருவாகினால் மட்டும் தான்
தேறுவோம் நாம்
அன்றில் தீர்வு வேறில்லை

சேருவோம் நாமென்று
சிந்தித்தெழும், நாளை
கீறலாம் எமக்கான
திசை..


Wednesday 8 May 2019

நேருமிது என்று அறிந்தாயோ..

அள்ளி இரு கையில்
அன்பை முழுதாக
கொள்ளு பிடியென்று
கொடுத்தாலும்
உள்ள மனம் பூட்டி
ஒதுங்கி எனைநீங்கி
தள்ளி மெதுவாக
தவிர்ப்பாயோ?

சேர நிலம் வந்து
சேரு எனையென்று
ஈர மொழி பேசி
எனை யுந்தி
ஆறு கடலோடு
ஆவலொடு கூட
ஊறி வரும் போது
உதைவாயோ?

நேருமிது என்று
நெஞ்சின் அடிஉள்ளின்
ஓர அறையோரம்
உரப்பாக
கூறும் அசரீரி
கொட்டும் உடுக்கொன்று
ஏறிச் செவிகேட்டு
எறிந்தாயோ..


மூச்சின் வாசனையை முகர்..

தகிப்பில் அதிரும்
நரம்புகளின் உணர்முடிச்சின் பீடத்தில்
உன்மத்தம் துடித்த ஒருகணத்தின் போது
உனையே மறந்து
காதல் அவிழும் என் கண்களை
காணவென நீ திரும்பிய போது
சூரியனை கடல் விழுங்கிற்று

கத்தியேனும் மனசை
காதில் விழுத்த நீ
எத்தனித்தபோது வான் குலுங்க
என்றுமில்லா இடி
பேரோசை சிற்றோசையைத் தின்றது

ஈரநெருப்பின் இதத்தில்
அங்கம் இணைத்தேனும்
ஆசையைச் சொல்வமென
கைகளை நீட்டிய படி
நீ ஓடிவந்த போது
கால்களின் முன் காய்ந்திருந்த பள்ளத்தால்
காத்திருந்த காட்டாறு
கரைபுரண்டு தன்னோடு
அந்த முயல்வினையும் அடித்துச் சென்றது

மூச்சின் வாசனை அறியாதவளா நீ
முகர்ந்தேனும் எனை உணர முற்பட
காலில் நசிந்த குளைகளின்
காட்டு மணம் காற்றெங்கும்

பருவத்தில் மட்டுமே ஊறும்
மலையருவி நீ
காலவிதி இடையே ஊடறுத்து
வேளையினை நீட்ட
ஊற்றடங்கி, கசிந்த நீர்காய்ந்து
உன்நிலை
தன்நிலை உணரத் தலைப்பட்ட போது
என்நிலை தெரிந்த இதயம் நின்று
மீண்டும் துடித்ததுன் மூளை

இமைக்குமுன்
ஏதோ உணர்ந்தவளாய்
எதிர்த்திசையில் திரும்பி
ஏறத் தொடங்கினாய்
கடந்து செல்லும் முகிலாய்
ரதியின் உரு கலைந்து செல்கிறது

உயிர்ச் சஞ்சாரமற்ற
பொட்டல் வெளியின் தொடுவான் கரையில்
மங்கலாய்த் தெரியும் ஒற்றைப் பனையாய்
மீண்டும் நான்..


வாழ்நாட் கனவு..

எத்தனை உயிர்கள்
எத்துணை தியாகம்
எத்தனை ஆண்டுக் கனவு
அத்தனை உழைப்பின்
ஆயுளும் எப்படி
இத்தனை சீக்கிரம் கலைந்தது..?

வீழும் என்று எண்ணியே இராத
வீரயுகங்கள் கண்களின் முன்னால்
மாழும் என்கிற படிப்பினை தன்னை
மனசும் நம்ப மறுக்குது,

கந்தகப் புகையாய் கலைந்தன்று சென்ற
கட்டி நாம் காத்த நற்கனவு
எந்த நாள் நனவாய் ஆகுமோ அறியேன்,
இருப்பனோ என்பதும் தெரியேன்.

எந்தநாள் ஆயினும் ஆகட்டும்
ஆனால்
ஆகத்தான் வேண்டும் இறைவா..