Sunday 26 February 2012

கத்தி நீ சொல்லுவாய்..

வேலிகள் தானும் வேய்ந்திடா வண்ணம்
எங்கள் தென்னையைப்
பனையைத் தலையால்
அப்படியே நீர் அறுத்தெடுத்துளீர்
ஆயினும் இன்று
முட் கிழுவையும் முன்னரே வேய்ந்த
ஓலை வேலியும் கொண்ட
சராசரி
ஈழமக்களின் இளகிய
இதயமாய் ஏதோ வாழ்கிறோம்
இன்னமும், நாங்களும்
நல் ஒழுக்கமும்
வீரமும் கொண்ட ஓர்
சொல்லப்பட்ட
இனத்தைச் சார்ந்தவர்
பயத்தம் உருண்டையைச்
செய்யினும், இறுக்கி
ஒட்டி, ஒட்டியே
பணியாரமாக்கிடும்
உறவுகள் அன்புணர்வுகள் உள்ளவர்
காதல் செய்வதில்
கரை பல கண்டவர்
காம வெற்றியைக்
கடவுளாய்க் கொண்டவர்

பாவாடையும் மேற் சட்டையும்
அருவியில் குறுக்குக் கட்டுக்
குளியலும், சாரமும்
கட்ட சம்பலும் சோறும்
கருப்பணித் தயிருமென்றிருக்கும்
சராசரிச் சமூகமே!

வீட்டைக் கொழுத்தி, நீர்
வீதியில் போட்டெமை
நாட்டினில் சேர்ந்து
வாழ்ந்திடச் சொல்கிறீர்,

எங்கள் அழுகையும்
உயிர்களும் தியாகமும்
எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல
ஆயினும் நாமுமைக்
கேட்பது சாந்தியே..
மீண்டும் கந்தக
விளைச்சலை வெறுக்கிறோம்
வெறுப்பினும் நாம்
வீரமாய் இருக்கிறோம்..

ஆதலால் சொல்கிறோம்
ஆதிக்க வாதமே..!

இனக்கொலை புரிந்த நும்
அச்சுறுத்தல்கள்
சனக் கொலை மட்டுமே
செய்திட முடிந்தது
பிணங்களாய் நீர் தினம்
ஆக்கிடும் எம்மவர்
நிணங்களில் எரிந்திடும் தீயது
எங்களின்
மனங்களில் தினம் தினம் மூண்டிடும்
தீயினுள்
அனுங்கியே சன்னமும் உருகிடும்
உடல்களைத்
துளைத்திடா தென்பதுன்
தூண்களிற் கேட்கையில்..

உழைப்பும் ஓர்மமும் கொண்ட
ஓர் விடுதலை, தளைக்கும்
அதைத் தடுத்திடல் என்பது
மலைக்கு மேல்
மண்ணள்ளிப் போட்டதை
மறைக்க நினைத்தலுக் கொப்பதே
என்பதை
கத்தி மேல் நடக்குமுன் கால்களும்
கிழிகையில்
கத்தி நீ சொல்லுவாய் காதுகள்
கிழி பட
கத்தி நீ சொல்லுவாய் காதுகள்
கிழி பட..

No comments:

Post a Comment