Thursday 16 February 2012

இறுதிக்கால இரவுகள்..

கனதி நிறைந்த
அன்பின் ஏக்கங்களிலிருந்தும்
இடை நடுவிலேயே
விடை பெறப்போகிற
கூப்பிடு தூரத்து
சாதனைக்கான வாழ்விலிருந்தும்
எழும்
மின்னற் கணப்பொழுதுகளில்
இறுதிக்கால இரவுகள்
எச்சிலின்
ஓர் துளியைத்தானும்
தொண்டையுள் இறங்க விடுவதில்லை

பகற்பொழுதுகளில் வீசுகிற
அதே காற்றுத்தான்,
படபடென அடிக்கிற
அதே ஜன்னல்கள் தான்,
கூரைகளிற் பாய்ந்திறங்கும்
பூனைகளின் ஓசைகள் தான்

ஈழத்து ராத்திரிகளில்
எல்லாமே
திரிபு வாதமாய்
திடுக்கிடுத்தும் பேரொலியாய்
திருகி மூச்சமத்தும்
திட்டமிட்ட கொலைக்கரமாய்
ஓ...
இறுதி ராத்திரிகள்
ஓ..லம் நிறைந்த
இறுதி ராத்திரிகள்

நாய்க்குரைப்பும்  விழித்திருப்பும்
நமக்குப்புதியதல்ல
ஆனால்
கால நீட்சியின்
கவனம் மிகுந்த சந்திகள் தாண்டியும்
சுவரிற் பல்லியாய்
மிக இயல்பாகவே தொடருகிற இந்த
அவல ஓசைகள்
மரணப் பிராந்தியமாக மாறப்போகும்
அபாயத்துக்கான உள்ளுணர்வை
என்றும் இல்லாதவாறு
என்னுள் அதிரவைக்கிறது

மற்றபடி
அதிகாலை விழித்தலுக்கான
நிச்சயத்தையும்
ஆழ்ந்துறங்கலிற்கான
அற்புத வரத்தையும்
எங்களுக்கான இரவுகள்
எப்போதோ இழந்தாயிற்று..

ஒரு வேளை
இறுதிக்கால இரவுகள் என்பது
உலக முழுமைக்கும்
இப்படியாகத்தானோ...?

No comments:

Post a Comment