Tuesday 7 February 2012

சும்மா இருத்தலின் சுகம்

சோதனைகளால் நிறைந்து
வழிகிறது வாழ்க்கை
வழுக்கி விழுதலின்
ஒவ்வோர் பொழுதுகளிலும்
உண்டாகும் காயங்களை
தாங்குகிற மனசுக்கு
அதனால் உண்டாகும்
அழுத்தங்களைத் தாங்க
முடிவதில்லை,
தேர்த்திருவிழாவின்
நிறைந்த கூட்டத்தோடு
கூட்டமாய்
அள்ளுண்டு செல்லுதற்கே
அவாவுகிறது மனம்,

வடத்தை
இழுத்துத்தான் தேர் அசைவதில்லை
பிடிக்கவே அசையும்
இது
சேர்ந்திழுத்தலின் சிறப்புமட்டுமல்ல
ஆரென்றே தெரியாமல்
இழுத்துவிடுகிற
அற்புதவரமும் கூட,
ஏனெனில்
நானும் இழுத்தேன் என்கிற
புகழின் மகிழ்வைக்கூட
மனசால் இப்போது
தாங்கமுடிவதில்லை
அதாவது..
ஏதும் சுமைகளற்று இயங்குதல்
விடை பெறுதல்.

No comments:

Post a Comment