Thursday 16 February 2012

நிறுத்தல்..

சூடாய், கடுங்குளிராய்
சுகமான இத உணர்வாய்,
வாட்டேலுமட்டுமெனை
வாட்டி,மிகக் கனத்த
பூட்டாத பூட்டிற்குள்'
எனைப் போட்டுப் போயிருக்கும்,
என்னோடு நடைபயின்ற
இருபத்தைந்தாண்டுகளே!

'கண்முன்னே எனைக்கடந்து போனீர்!
அதற்குள்ளேஎத்தனை மாற்றங்கள்,
இழுபறிகள்,திருப்பங்கள்
நெஞ்சே வெடித்து
நினைவழிந்து போவது போல்
இன்னும் நான் நம்பாத
எழும் பேலாச் சறுக்கல்கள்
எல்லாம் அனுபவமாய்
என் நெற்றிப் பரப்பெங்கும்
புள்ளிகளாய், சுருக்குகளாய்
விழுந்துளது, காலத்தீ
என்னைப் பொசுக்கிப்
பதப்படுத்தி  உலகோடு
மெல்ல நசிந்தோட
இயை பாக்கி வைத்துளது,
இந்தக் காலத்துள்
அடிபட்டுதை வாங்கி
நானுணர்ந்து கொண்ட
ஞாயங்கள், எனக்குள்ளே
போதி மரமாய் வளர்ந்து
அடிக்கடியும்
ஆயிரம் கதைகளினைச் சொல்லும்.
நான் கேட்பதில்லை
இன்றேனோ மனசு இளகிக் கிடக்கிறது
வேரடியிற் சாய்ந்து விம்முகின்ற நினைவுகளை
பாரமனதோடு பார்க்கின்றேன்.

கல்லூரி
ஈரங்குறையாமல் அப்படியே நிழற்படமாய்
கொடுப்புள் சிரிப்பாக மலர்கிறது
ஞாபகங்கள்
எத்தனையோ இருந்தாலும்
மதிற்பாய்வும், அடிதடியும்,
தண்டனைகள் பெற்ற
வேளைகளுந்தான் இன்றும்
நினைத்துச் சிரிப்பதற்கு முடிகிறது.
என் ஆசான்
இப்பொழுது கண்டாலும்
என் முதுகு தட்டி மற்றவர்க்கு
இவன் செய்த குழப்படியள்
எனப் பெருமை பேசுதற்கும்
அவை தான் பொருளாக இருக்கிறது.
சாதனையும், பரிசும் பெரிய
சந்தோசம் தருவதில்லை
கல்லூரிக் காலத்தில்
நான் பெற்ற பிரம்படியும்,
தண்டனையும், தலைகுனிவும்
காலத்தின் வெள்ளத்தில்
எப்படி நிலைமாறாய்,
மகிழ்வுப் பெருஞ்சிரிப்பாய்
உரு மாற்றம் பெற்றுயிர்த்துளது.
புரிகிறது

காலத்தின் கதைப்போக்கில்
பலமாறும், பலமருவும்,
புளிச்சுவைகள் இனிக்கும்.
இனிச்சவைகள் எண்ண
நினைவுகளிற் கெட்டாது
இப்படியே சிலவேளை
கதைப் பொருளே தடம் மாறும்.
இதில் 'காதல் மிகப் பெரிய பாடம்
அது சொன்ன ஆழ அனுபவமும்
அவதார உணர்வுகளும்,
நீளுகின்ற வாழ்க்கைப்
பாதையிலே, நிச்சயமாய்
தடைபலவும் தாண்டுதற்குதவும்.
பருவத்தில்
நாம் போன கடற்கரையும்
குச் சொழுங்கை முடக்குகளும்,
கோயிற்கரை மதிலும், குளிர்பானக் கடைகளுமே
புராதன வரலாற்றுச் சின்னங்களாய்,
சரித்திரத்தில்முக்கியத்துவம் வாய்ந்த
இடங்களுமாய் மாறிவிடும்.

'காதலிக்கு எப்பவுமே
வளர் இளமைப் பருவந்தான்'
மனைவியைப் போல் வயசு ஏறாது,
தலை நரைச்சு நாரிப்பிடிப்பும்
நடைத்தளர்வும் இருக்காது,
உப்புறைப்புப் பிரச்சினையிற்
தொடங்கி, முகம் நீண்டு,
உறவினர்கள் உபசரிப்பில்
கதை முற்றி, மனம் வெந்து
ஏன்ரா முடிச்சம் என்று
எண்ணுதற்கும் வாய்ப்பில்லை
எப்ப நான் அவளைப்
பிரிஞ்சேனோ, பிரியேக்கை
எப்படி உருவத்தில்
நான் அவளைக் கண்டேனோ
அப்படியே அவள் என் ஆயுள் முடியு மட்டும்
இளமை ததும்பிடவே வீற்றிருப்பாள்,
கோபங்கள், எதிர்பாராத் துரோகங்கள் எல்லாமே
காலத்தீப்பந்தில் கனன்றெரிந்து விடும்
ஒப்பிட்டுப் பார்ப்பதற்கென்றே
உணர்வு மட்டும்
வருகின்ற ஒருத்திக்காய் வாசலிலே காத்திருக்கும்.
உண்மையிலே
காதற் தோல்வி உற்றோர்
காதலியை எண்ணுதல் போல்
அவளுடைய மென் உணர்வை
மீட்டி உருகுதல் போல்
காதலிலே வெற்றி பெற்றோர்
நினைப்பதில்லை, வாய்ப்புமில்லை
'இருப்புணர்வு எப்பவுமே
எழுச்சியாய் இருப்பதில்லை
இல்லாமைதான் இருப்பைத்
தேடுதற்குத் தூண்டிலிடும்'
ஆதலினாற் காதல் வெற்றி எனல்
முடிச்சுள்ளே அடங்கி மணம் முடித்தல் அல்ல
அதற்கப்பால் பரிசுத்தமாய்
எந்தத் தழும்புமின்றி இறுதிவரை
'நினைந்துருகிப்போதல்'
என்பேன், என்னுடைய
வாழ்வின் அனுபவத்தில்
இது ஓர் வழித்துணைதான்.

உலகைப் புரிந்திடவும்,
உண்மை மனிசரினை
உய்த்தறிந்து வாழ்வில்
ஒதுங்கி நடந்திடவும்
வேலைத்தளம் தந்த
அனுபவங்கள் மிகப் பெரிது
வேடத்தால் தம் முடைய
முகம் மாற்றி, மனிதர்களாய்!,
நரிக ளெல்லாம் பணிபுரியும்
ஊடகமே என்னுடைய
முதற் தொழிலாய், முழி வளமாய்
அமைந்ததனால் அங்குள்ள
மனிசரினைப் படித்தால்
உலகத்தில் எங்கேயும்
எங்குள்ள வனையும் என்னால்
எடை போடா முடியு மென்ற
தாக்கப்பட்டறிவு
எனக்குண்டு.அதனைவிட
வாழ்வின் உச்சம்,வளமான உயர்பீடம்,
என்றெண்ணி இருந்தவர்கள்
எல்லோரும் தாமிருந்த
இடமே தெரியாமல்
வாயடைச்சு, மண்கவ்விப் போனகதை
நான் அறிவேன் ஆதலினால்
நான் பெரிசாய்
நிண்டு நிலைப்பனென்டோ
நெருப்பாற்றைக் கடப்பன் என்றோ
நீட்டி முழங்கிடவே மாட்டேன்.

என் கவிதை
அம்பது ஆண்டுகளோ!
அதற்குப் பின்னருமோ
பேசப்படும் என்றாரும்
வாய்தவறிச் சொன்னாலும்
'நிலைத்தல் பற்றி மிகைக்
கருத்து நிலை' எனக்கில்லை.
சாவீட்டில்
சரியில்லை' என்னு மொரு சாட்டிற்காய்,
கூடி வந்திருந்து வெற்றிலைக் குதப்பலிடை,
என் கவிதை பற்றி ஏதேனும் சில வரிகள்.
நீர் பேசிப் போவதற்குக்
கூடுந்தான், ஆனாலும்
இருக்கும் பொழுதே
நான் போக(ப்) பின்னாலே
ஆயிரம் குத்தற் கதைபேசிச் சிரித்தோர் நீர்!
இறந்த பிற கென்றால் விடுவீரோ?
நான் சாக
எதுவுமே மிஞ்சாது.அந்தியட்டி ஏவறையாய்
எல்லாம் போய் மறையும்
என்கின்றநிசத்தெளிவில்,
மனசாலும், உடலாலும் ஒடுங்கி,
ஒதுங்கிப்போய்,
யாருக்கும் வயிறெரிய
நடக்காமல், என்மனசும்
யாராலும் நோகாமற்
போவதற்கே விரும்புகிறேன்.
அத்தோடு
நான் நினைக்கும் அளவிற்கு
இவ் உலகின் சுழற்சிக்கு.
என்னுடைய தேவை கயிற்றரவே
நீண்டு செலும்
பாதைகளின் தூரம்,வளைவு, பள்ளங்கள்
ஏதும் அறியேன் நான்
ஆதலினாற் பயணத்தில்
என்னுடைய ஏற்பாட்டை
கவனத்தைச் செலுத்துகிறேன்,

ஒருவேளை
நானுருகிக் கும்பிட்ட
நல்லூரான் வழி வந்து
கை கொடுத்துதவக் கூடும்!
என நம்பி
நம்பி நடக்கின்றேன்..
நடப்பதனை யார் அறிவார்...?

No comments:

Post a Comment