Wednesday 15 February 2012

எப்படித்தான் மறப்பேன் இந்நாளை.. (மே 18)

எப்படி நான் மறப்பேன்
இந்நாளை என்னவளே..
உலகே சேர்ந்து நின்று
ஒருமித்து கொலைக்கரத்தால்
அப்படியே எம்மினத்தை
அமுக்கி நசுக்கியதை
எப்படித்தான் நான் மறப்பேன்
என்னவளே எண்ணிப்பார்..

வாழ முடிந்தும் வாழாமல்
மண்ணுக்காய்
மீளோம் என்றறிந்தும் மிரளாமல்
தோள் தந்த
வீரர்கள் விதையாகிப்போக
அவர் பிள்ளை
ஊரும் இன்றி உறவென்று
யாரும் இன்றி
வீதிகளில் நின்றபடி விம்முவதை
அப்பாலே

கால்கள் இழந்தும்
கண்கைகள் சிதைவடைந்தும்
சித்தம் குழம்பிப்போய்
சிரித்தும் அழுது கொண்டும்
ஊனமாய்ப் போய் விட்ட
ஒரு பெரும் சமுதாயம்
கத்தி அழுதபடி
காரிருளில் அங்குமிங்கும்
வாழ்ந்த மண்ணை
வாயினிலும் தலையினிலும்
அள்ளி எறிந்து
ஆவிகளாய் அலைந்தபடி
ஒப்பாரி வைக்கின்ற ஓலத்தை
என் வாழ்வில்
எப்படித்தான் நான் மறப்பேன்
என் சகியே எண்ணிப்பார்..

குலை குலையாய்ச் சிதறும்
குண்டுகளின் நடுவினிலே
இளம் பிள்ளைத்தாய்ச்சி ஒருத்தி
ஒரு மடியில்
நெஞ்சில் வெடிபட்டு
நேத்திரங்கள் மூடுண்டு
கொஞ்சம் கொஞ்சமாய் உயிர்
குறைந்தோடிக் கொண்டிருக்கும்
மிஞ்சப்போகாத கணவனையும்
மறுமடியில்
குண்டின் அதிர்வும்
மன அதிர்வும் தாங்காது
கற்பக்கிரகம் தாண்டி
கசங்கிப்போய் இந்த
அற்பக்கிரகம் வரத்துடித்த
குழந்தையினை
தானே கையால் இழுத்தெடுத்து
போட்டபடி
கண்முன்னே கண்ணிரெண்டும்
கலங்குண்டு போவதனை
பெருங்குருதிப் பெருக்கோடு
பார்த்தாள்.., பிறகேனோ
வார்த்தைகள் இன்றி
வானை அண்ணாந்து பார்த்தபடி
நிற் சலனம் அடைந்த
நினைவை., சொல்லடி நீ
எப்படித்தான் நான் மறந்து
போவேன்..! இப்படியாய்
ஆயிரமாய்க் கதைகள்
ஆயிரமாய் ஆயிரமாய்
ஆருமில்லை இங்கே
கேட்பதற்கு
தட்டிக்கேட்பதற்கும் தான்

ஆனாலும்
ஒன்றாகச் சேர்தெம்மைக்
கொன்றோரே..! எண்ணாதீர்..
சிவப்பு இந்தியர்கள் கதைபோல
எம் வாழ்வும்
காட்டு வெளியினிலும்
கடற்கரையின் மீதினிலும் - வெறும்
பாட்டாக ஒலித்தோய்ந்து
போகுமென்று - எம் தாய்மார்
இனிச் சோறூட்டும் போதில்
இதைச் சொல்லித்தான்
வளர்ப்பார்கள்

தேரோடப்போகும் எம்முடைய
தெருக்களினால்
நீர் ஓடிப் போவீர் இது நிகழும்..!

கேளுங்கள்..!

கண்ணீரோடேதான் விதைத்தோம்
கம்பீரத்தோடேதான் அறுப்போம்..

No comments:

Post a Comment