Friday 3 October 2014

சதுரங்கம்..

உன் வாழ்வில் ஒரு போதும்
உள் நுளையேன் என்பாள்
எனக்கும் தான் ஒரு வாழ்வு
இனி வேண்டாம் என்பான்
மனக் கண்ணுள் இருவருக்கும்
மறைந்திருப்ப தெதுவென்று
நினைவறியும், நெஞ்சம்
நிசமறியும், ஆனாலும்
தாக்கப் பட்டறிவின்
தாராள அனுபவங்கள்
தள்ளிப் போய் நில்லென்று
தவிப்போடு உடுக்கடிக்கும்

பேச்சென்னும் இன்பப்
பெருவெளியில் இருவருமே
நீச்சலடிக்கின்ற பொழுதில் முன்னாலே
சதுரங்கப் பலகையொன்றைச்
சாட்டுக்கு வைத்திருப்பர்
அவதானக் காய் நகர்த்தல்
அரங்கேறும், கருக்கலிலே
தவங்கலையும், முன்னிருந்து
தள்ளாடும் பலகையது
மாய மோகினியாய் மறைந்து விடும்
அவன் நனைவான்
அவள் தோய்வாள்
பதின்ம வயதுகளில்
பாரிதுதான் கடைசியென்று
கரமைத்துனம் செய்யும்
கதையாய், நெஞ்செரிந்தால்
இனிமேற் புகைப்பதில்லை
இத்தோடு, என அன்றை
அவ்வேளை கடத்துகின்ற
ஆறுதலாய் நாள் முடியும்

மறுநாள் இல்லையெனின்
அதன் மறுநாள் மறுபடியும்
செருமலுடன் இருவருவருமே
சினைக்காமச் செருக்களத்தில்,
அதே சதுரங்கம், அதே காய்நகர்த்தல்
நனைந்தும் தோய்ந்தும்
நாள் முடிய, வேதாளம்
பனையென்று முருங்கையிலே ஏறும்
மறுபடியும்...