Tuesday 10 April 2012

ஈர்ப்பில் துடிக்கின்ற இயக்க விசை..

வசந்த காலத்தி்ன்
வண்ணத்தில் தோய்த்தெடுத்து
வாழ்வு ஒரு மரத்தை
வரைகிறது,அதிலடர்ந்த
பச்சை இலைகளிலும்
பரந்த கிளைகளிலும்
இச்சை ஊறுகின்ற
ஈரமன வண்ணத்தில்
உணர் கொம்புள்ள உயிர்த்
தூரிகையால் கரையாமல்
காதலும் ஓர் கூட்டைக்
கட்டியதாய் வரைகிறது
போத உணர்வுடனே
பொங்க மீண்டுமந்த
வாழ்வு வசியத்தைத் தடவி
உயிர்ப்பாக
அன்பூறும் பறவை ஒன்றை
அக் கூட்டுள் வரைகிறது

இப்படியாய்
ஒவ்வொரு வாழ்வும் தம்
உள்ளளவுக் கேற்றபடி
ஒவ்வொரு மரத்தை வரைய
உயிர்க் கூட்டை
காதலும் அம்மரத்தின்
கனதிக்கு ஏற்றபடி,
வாழ்வும் அதற்கேற்ப
பறவை ஒன்றை,
விகிதங்கள்
ஊறும் உயிரளவில்
உயர்ந்திறங்கி இருந்தாலும்
ஈர்ப்பென்ற ஒன்று
எதன் மேலோ இருப்பதனால்
இன்றும் உயிர் நீட்சி
இயங்கி தொடர்கிறது..

No comments:

Post a Comment