Saturday 21 April 2012

சன்னம் வரைகிற வட்டம்..


விரலொன்று விசை ஒன்றைத் தட்ட
விர் என்று
விரைகின்ற குண்டொன்று மார்பொன்றை
துளைத்துப் பாய்கின்ற
துவாரத்தின் வட்டத்துள்
ஓர் வாழ்வு மட்டுமா
உடைந்து போய்க் கிடக்கிறது..?

பெயரற்றுக் கிடக்கின்ற
பிள்ளையைப் பெற்றவளை
பெயர் சொல்லப் பெற்ற
பெற்றவரின் பெருங்கனவும்,
கையொன்றில் அவளைக்
கவனமாய்ச் சேர்க்கும் வரை
கண் துஞ்சாதவர் உழைத்த
கடின உழைப்பதுவும்,
அதன் பின்னவழும் தன்
அன்பான துணையோடு
வாழ்ந்துணர்ந் தனுபவித்த
வசந்த காலங்களும்,
அழகிழந்து போனாலும்
அது தான் தன் அழகென்று
உள மகிழ்ந்து இவனும் உள்
உதைக்கச் சுமந்ததுவும்,

பெறப்பட்ட பாடும்
பின்னே வளர்ப்பதற்கு
இரவுத் தூக்கத்தை
இழந்ததுவும், அனுதினமும்
தசை வளர்வைப் பார்க்க
தவித்த மகிழ்வதுவும்,
தனக்கு மேல் வளர்ந்து
தளிர்க்க, மாப்பிளையாய்
மனக் கண்ணால் பார்த்து
மகிழ்ந்ததுவும், எல்லாமே

ஓர் குண்டு பாய்ந்து
உள் நுளைந்து சென்று விட்ட
மார்பின் வட்டத் துவாரத்துள்
மரித்துப் போய்
அர்த்த மற்ற ஒன்றாகி
அலறித் துடித்த படி
பெரும் புண்ணாய் மார்பில்
பிளந்த வட்டக் கரை மேலே
அலைந்து அதைச் சுற்றி
அனுங்கித் திரிகின்ற
ஈக்களைப் போல
இவருலகும் அதைச்சுற்றி
சாக்களை கொண்டதிலே
சரிகிறது, இதுவெல்லாம்

விசையழுத்தும் அந்த
விரல்களுக்குப் புரியாதோ
ஒரு வேளை
மூளையும் மனமதுவும்
முழுதாகத் தூங்குகிற
வேளையைப் பார்த்துத் தான்
விரல் விளையாடுகுதோ?

இன்னொன்று

வீழ்ந்த இவன் இனிமேல்
விழிக்கான் என்றறியாமல்
விளையாடித் திரிகின்ற
இவன் குழந்தை ஓரத்தில்
ஆழ்ந்த பெரு மூச்சோடு
அழுவோரைப் பார்த்த படி
அனாதை என்கின்ற
அநாதரவு வட்டத்தை
தானறியாமலேயே
தனைச் சுற்றி வரைந்த படி
எனைச் சுற்றிச் செல்கிறது
என்பதனை இப்போதில்
இதிலே எழுதிவிட
இயலவில்லை என்னாலே..

No comments:

Post a Comment