Sunday 1 April 2012

காலம் ஆகினீர்.. - பேராசிரியர் கா.சிவத்தம்பி

யோகர் எனும் சித்தன்
யூகித்துணர்ந் துரைத்த
பாகுத் தமிழ் மொழியின்
பதிவே!  கால நடை
ஆகி அதற்கேற்ப
அசைந்தோடிச் சூசகமாய்
சொல்லும் வகை உணர்ந்த
சுவையே! தமிழ்ச் சிந்தனையை
ஆங்கிலத்தில் அசைபோடும்
அறிஞ! நாம் அறிய
அற்றைத் தமிழிருந்து
அருங்கலைச் சொற்கள் வரை
இற்றைப் படுத்துகின்ற
எமதிருப்பே! எமை விட்டு
வானேகிப் போய் விட்டீர்
வரலாறாய், எம் பாடு
தேனில்லா அடையாகத்
தேம்பிக் குமைகிறது

என் வாழ்வுக் காலத்துள்
இனி என்றும் உங்களைப் போல்
அன்புளமும் அறிவும்
அரவணைப்பும் நிறைந்தூறும்
எந்த ஒரு மனிதனையும்
இனிக் காண முடியாது
நீங்கள் போய் விட்ட
நெடு வெளியை நிரப்புதற்கு
நாங்கள் அறிந்த வரை
நம்மினத்தில் யாருமில்லை
உங்கள் காலத்தில்
உமைத் தெரிந்து உம்மோடு
எங்களுக்கும் வாழக் கிடைத்ததென்ற
ஓர் நிறைவே
உள்ளே மூச்செங்கும் எழுகிறது
பிதாமகரே..

எங்கள் செல் நெறியை எமக்கான வழித் தெளிவை
உங்களது உரையாலும் உணர்ந்தோம் - எங்களது
வரலாற்றின் மைல் கல்லே வாழ்வீர்  நும் புகழை
உரையாற்றும் எங்கள் உலகு..

No comments:

Post a Comment