Tuesday 24 April 2012

நானெனும் ஓரலை..

ஆண்டுகளாய் வாழ்ந்தின்று
அடி பெயர்ந்து வீழ்ந்துள்ள
நீண்ட பெருமரத்தின்
நினைப்பில் படாதின்னும்
உயிர் தக்கவைத்துள்ள
ஓர் கிளையின் இளந்தளிர்
நான்

ஆழ்ந்தடங்கிப் போயுள்ள
அடரிரவில் எங்கேயோ
பாழ்விதியை நொந்தழுது
பதைபதைப்பிற் கூவுகின்ற
பறவைக் குரலலையின்
படபடக்கும் ஓரிழை
நான்

முட்டுகின்ற தொடுவான
முடிவிலிருந் தெழும்புகின்ற
வட்டச் சூரியனில்
வழிகின்ற விடியலின் மேல்
பட்டுவிட எத்தனித்துப்
பறக்கின்ற ஓரலை
நான்

எதற்குள்ளோ எங்கோ
எப்போதோ இட்ட முட்டை
அதற்கான காலத்தில்
அவிழ்ந் துயிர்க்கும் அந்நாளும்
எப்போது வருமென்று
எண்ணி அந்த வானத்தைத்
தப்பாமற் தினமேங்கித் தவிப்போடு பார்த்தபடி
அப்பாலே கடலில்
அசைகின்ற ஆமையைப் போல்
இப்பாலே காத்திருந்து
இயங்குகிற ஓர் மனம்
நான்..

2 comments: