Friday 6 April 2012

பல்லுள்ள போதே பறை..

எவ்வளவு சீக்கிரமாய்
இயல்கிறதோ முடிந்தளவு
அவ்வளவு சீக்கிரமாய்
எழுதி விடு, கவி மனதை

எங்கிருந்தோ வரும்
அழைப்பொன்று, மீண்டோடி
மங்கலாய்த் தெரியும்
முகமொன்று, எண்ணாமல்
நண்பன் உனை வைத
வரி ஒன்று, தலை சுற்றி
கண் முன்னால் வெண் பூச்சி
கடக்க நினைவின் மேல்
எதிர்காலம் பற்றி
ஏதேனும் ஓரெண்ணம்
எழுந்து கவி மனதை
எட்டிட முன் விரைவாக
வழிந்தோடி விழுகின்ற வரியை
வரைந்து விடு, உன் பழைய
 காதல் பற்றி ஏதும்
கரைந்துருகிக் கிறுக்கிடு முன்
மோதல் குடும்பத்துள்
முட்டி வெடித்திட முன்
விசாரணைக்கு நீ விளக்கம்
வீழ்ந்தடித்துச் சொல்லிட முன்
விளக்கத்தைக் கேட்காமல்
விவாகம் ரத்தாயிடு முன்
எதுவுமே எழுதி விட
இயலாமல் நீ முடங்கி
நான் விரும்பும் பெரியார்
நம்முடைய ஆசிரியர்
சீலை,நகைக் கடைகள்
செருப்பழகு பற்றி எல்லாம்
மாலை மாற்றிய அம்
மாதுன்னைக் கேட்ட படி
ஏதேனும் நீ எழுதித்
தொலைத்திடு முன்
இப்போதே
பக்கத்தை நிரப்பி
மறு பக்கம் தொடங்கி விடு

வறுமை உனை வளைத்து
வலைக்குள்ளே இறுக்கிடு முன்
இறுக்கம் தாங்காமல்
இதயத்தூண் தகர்ந்திட முன்
தகர்ந்து உடல் நலிந்து
தள்ளாடிப் போய்விட முன்
தள்ளாட்டம் தாங்காது
தளிர் மனது சோர்ந்திட முன்
சோர்ந்தது கண்டுந்தன்
சொந்தங்கள் விலகிட முன்
விலகிப் போய் உன்பாதை
வெறிச்சோடிப் போய்விட முன்
போய் விட்ட வாழ்வெண்ணிப்
பொறி கலங்கி வீழந்திட முன்
வீழந்து விட்டான் இவன் வாழ்வு
விழல் என்று தூற்றிட முன்

சொல்லுள்ளே வாழ்வின் சூட்சுமத்தை வாயிற்
பல்லுள்ள போதே பறை

No comments:

Post a Comment