Sunday 1 April 2012

நேரம் உறைகின்ற காலம்..

இரவென்ற ஓர் நிலையும்
இருட்டறுந்து கிழிந்து விழும்
ஒளி வண்ணம் போற் தோன்றும்
ஓர் பகலும் அது படர்ந்து
ஆயிரம் சந்ததியைக் கடந்தும்
ஆழ் மனதில் அழியாமற் படிந்து
மயக்கம் வழிகின்ற
மாலை சாய்ந்து விழும்
மருள் நிலையும் என் வாழ்வின்
காலக் கணக்கின் கண்களுக்கு
எந்த விதக்
காட்சிகளும் அதன்
கலங்கல் நிறமுமற்று
சாச் சொரியும் போது விழும்
சாயை மட்டும் தெரிகிறது

நிமிடங்கள் அறுந்து
மணி நாட்கள் அறுந்தறுந்து
மாதம், வருடங்கள் அறுந்து விழ
என் வாழ்வு
நேரங்கள் அற்ற
நிலை உறைந்து போயுள்ள
காலங்கள் நோக்கிக் கடக்கிறது

ஏனெனிலோ
உணவுண்ண வருவாயா
உறங்கி எழுந்தாயா
ஏனிரெண்டு நாளாக
எழும்பாமல் படுத்திருந்தாய்
நாளைக்குப் பின்னேரம்
நாலரைக்கு மேலாக
நானுன்னை வந்து பார்க்கட்டா
இல்லையெனில்
நீ என்னைப் பார்க்க வருவாயா
இப்படியாய்
எனை நோக்கிச் சும்மா
ஏதேனும் ஓர் வார்த்தை
ஏறெடுத்தும் கேட்பதற்கு
இங்கே யாருமில்லை

எல்லோரும் தூங்குகையில்
என் கண்கள் விழிக்கிறது
அவர் விழித்தெழுகையிலே
அயர்ந்துறங்கிப் போகின்றேன்
உணவுண்ணல் மற்றும்
எல்லாமே இப்படித் தான்
என்னோடிருக்கின்ற மனிதர்கள்
இயங்குகிற இயல்பு வழமைக்கு
எதிர்மாறாய் என் போக்கு
தலை கீழாய் நடந்து செல்கிறது

தினந்தினமும்
அடித்துடைந்த கால்கள்
அணு அணுவாய்க் கொதித்தாலும்
உடைத்துத் தெறிப்பது போல்
உள் நெஞ்சுள் வலித்தாலும்
எனக்கிங்கு துணையாக நானே தான்
அதனாலே
எனைச் சுற்றி இருப்பவைகள்
எனக்குத் தெரிவதில்லை
காலக் கணக்கெல்லாம்
மனக் கண்ணில் புரிவதில்லை
காட்டில் வளர்கின்ற மரம் போல
என் வாழ்க்கை
நாட்டில் நடந்து திரிகிறது

இப்படியே
எல்லைகள் ஏதுமற்று
இயல்பாய்க் கிடக்கின்ற
பிரபஞ்சப் பெருவெளியின்
பெயரற்ற வீதிகளில்
மனிதர்கள் தங்களது
மனம் கொண்டு போட்டிருக்கும்
புறத் தடையை எந்தன்
புறங்கையால்த் தட்டி விட்டு
நேரம் காலமற்ற
நிகழ்கால வெளி நெடுக
மூளை மனம் நின்றுவிடக்
கால் நடந்து செல்கிறது...

No comments:

Post a Comment