Tuesday 10 April 2012

நினைவின் வாசம் நிசமாகும்..

செம்பாடாய் வெண்துகளாய்
செங்கறுப்பு நீலமதாய்
எம் பால்யக் காலத்து
மேனிகளில் இருக்கையில் நீ
எம்மோடு கொண்டிருந்த உறவை
இறக்கையிலும்
இறுதிச் சேடமதாய்
எழப்போகும் உன் நினைவை
அன்றுன்னில் வெய்யில் மண்
அடித்துத் திரிகையிலே
என்றைக்கும் நானன்று
இன்றளவுக் குணரவில்லை
ஒவ்வொரு மைல்மைலாய்
உனைப் பிரியப் பிரியத்தான்
அவ்வளவுக் கவ்வளவாய்
ஆவியில் நீ ஊறுகிறாய்

ஊரே உறங்கி உள்ள
ஓசை அற்ற ராத்திரியில்
தூரத்தில் எங்கோ
துணைதேடும் பறவையொன்றின்
பாசம் நிறைந்த மனப்
பதைபதைப்பின் குரல் போல,
மூலத்தைப் பிரிந் திடையில்
முடங்கி உள்ள நீர் நிலையில்
கூளாங்கல் எறியக்
குதிக்கின்ற நீர்த் தெறிப்பாய்,
அதிலிருந்து அகண்டு
அகண்டகண்டு விரிகின்ற
விதியின் நீர் வளைய
விரிவைப் போல்,
விசை அழுத்த
எங்கோ துப்பாக்கி வாயாற் புறப்பட்ட
அங்கம் பிளக்கவந்த குண்டு
அரங்கிப் போய்
உய்ங் கென்றென் காதை
உரசிச் செல்வது போல்,
தாகத்தில்
ஒட்டி உலர்ந்துள்ள வாய்க்கு
கிடைக்கின்ற
ஓடைக் குளிர்நீரின்
ஒரு மிடறாய், காலுரஞ்சி
குர்குர்ரென்று குளைகின்ற
பூனையென,
விபத்தொன்றில்
முழங்காலின் கீழே கால்
போனாலும் மூளைக்கு
பாதம் கடிப்பதுவாய்ப்
படுவது போல்,
இப்போதில்
உந்தன் நினைவெந்தன்
உயிருள்ளே மணக்கிறது

இன்றைக்கோ
விடியல்க் கனவோடும்
விழுப்புண் ரணத்தோடும்
அடைபட்டுக் கிடக்கின்றாய்
அன்பே, பொறுத்திரு நீ

கைகளை விலங்கினால்
கட்டினால் கால்களால்
கால்களை வெட்டியே
வீசினால் இமைகளால்
இமைகளை இழுத்துப்
புடுங்கினால் பற்களால்
பற்களை உடைத்தும்
பறத்தினால் மூச்சினால்
எப்படியேனும் எழுந்து நாம்
எம்முடை
இப்பிறப் பறுந்து செல்லுமுன்
உன்னிலே
அப்பனே நாம் எழுதுவோம்
விடுதலை..

No comments:

Post a Comment