Tuesday 24 April 2012

மனத்தின் பயணம்..

சாகாவரை மனதிற்
சஞ்சலங்கள் சஞ்சரிக்கும்
போகாது உயிரின் முன் புறப்பட்டு
நோகாமல்
இருந்தால் மனமில்லை அதன் பெயரும்
விட்டு விடு
வருந்திப் பின் வழிக்கு வரும்

வரும் நேரம் வாழ்க்கை
வசந்தத்தின் சாவிதனைத்
தருமென்று எண்ணிடுதல் தவறு
உருவழிந்து
வந்த தடம் கூட வழிகளிலே
இருக்காது
இந்த நிமிடந்தான் இனி

இனிக்காலம் எம்மை
எம்மை எதற்கும் தயாராக
தனிக்காட்டின் நடுவிற் தள்ளி விடும்
நுனிப் புல்லில்
பனித் துளியாய் வாழ்வு பழகி விடும்
தன் வாழ்வை
தனித்துணையாய் கொண்டு தான்

தானென்ற தன்மை
தாண்டு விட இவ்வருகை
ஏனென்ற கேள்வி எழுகையிலே
வானென்ற
அகண்டவெளி வீடாகும்
ஆகும் மனமது போல்
இகம் பரமொன்றாகும் இதம்

இதத்தை இன்மையினை
எதனையுமே உணராத
பதத்தில் மனமான பருத்திப் பூ
மிதந்தபடி
வெளிக்கப்பால் வெளிகடந்து விரைய
அன்பென்ற
ஒளிக்கப்பல் உனையேற்றும் உள்

உள்ளே ஒளி கசிய
உணர்வெழுந்த சித்தார்த்தன்
தள்ளி அரியணையைத்
தவிர்த்தான் தான் ஆனாலும்
அரசவையின் பொறுப்பை
அதன் சுவையை உணர்ந்திட முன்
தெரிந்தவன் சொல்லி வைத்த
தெளிவான சொல்லை விட

ஆண்டு அனுபவித்து
அதன் சுவையை உணர்ந்து வெற்றி
பூண்ட பின்பும் அதைப்
புறந்தள்ளிப் போட்டு விட்டு
பேசாமற் சென்று விட்ட
பேரரசன் அசோகனவன்
பேசாத வார்த்தைகளே
பேருண்மை வழியாகி
ஓருண்மையாய் உள்ளே
ஒளிரும்..

No comments:

Post a Comment