சனி, 6 ஜூன், 2026

இரெத்தம் தோய்ந்த செஞ்சட்டை

அவர்கள் அணிந்த செஞ்சட்டை 

விடியலின் நிறமன்று,

எங்கள் வீதிகளில் உறைந்த   

பழைய குருதியின் 

காய்ந்த செதில்.


எங்களின் 

துயரப் பாடல்களைத் திருடி

தமக்கான மகுடத்தின் இசையை 

மீட்டிக்கொண்டார்கள்.


அரியணை ஏறியதும்,

செம்போர்வையைக் கிழித்து 

பழைய நச்சுப்பற்களை நீட்டுகிறார்கள்.


துக்கத்தின் சுவடுகளுக்கு 

விலங்கிடுகிறார்கள்

எங்கள் நடுகற்களின் மேல் 

தார் ஊற்றி 

பெருவீதி சமைக்கிறார்கள்.


உதடுகளை இரும்புக் 

கம்பியால் தைக்கலாம்

ஆனால் குரல்வளைக்குள் புதைக்கப்படும் 

பாடல் அழிவதில்லை.


அது குருதிக்குள் இறங்கி,

எலும்புகளைக் கூராக்கும் 

உப்பாய் உறைகிறது,


தொண்டையை நெரிக்கும் 

உங்கள் அதே விரல்கள்தான்

பாறையைப் பிளக்கும்

வேர்களின் தீராச் சினத்தையும் 

மண்ணுக்குள் மூட்டுகின்றன.


எங்கள் அமைதி 

ஓய்ந்துபோன மூச்சல்ல

அது உங்களின் 

இரும்புச் சங்கிலிகளைத் தின்னக் காத்திருக்கும்

கூர்மையான துரு..