செவ்வாய், 23 ஜூன், 2026

மறமெனும் அறம்..

நீதியென்பது

வெறும் மன்றங்களின் மரமேசைகளில்

முத்திரை விழுந்த பத்திரமன்று, 

மண்ணை இழந்த மக்களின்

மூச்சுக்குள் இன்னும் அணையாத

சூடான சாம்பல்.


ஓரினத்தின்  தேசம்

வரைபடக்காரனின் கருநிறக் கோட்டால் மட்டும்

பிறப்பதில்லை,

அதன் முதுகெலும்பில்

நூற்றாண்டுகள் நடந்த காயங்கள்,

அதன் மொழியின் பற்களுக்குள்

கடித்துப் பிடிக்கப்பட்ட நினைவுகள்,

அதன் இறந்தவர்களின் பெயர்களை

மறக்க மறுக்கும் குழந்தைகளின் நாக்கு 

இவற்றால்தான் அது கருவுறுகிறது.


“இனிச் சாத்தியமில்லை” என்றார்கள், 

உலகம் தன் 

இரும்புக் கணக்குப் புத்தகத்தைத் திறந்து

தேசிய இனங்களின் கனவுகளை

எண்ணிக்கைக்கு வெளியே தள்ளியது, 

விடுதலை என்பது 

பெரிய அரசுகளின் அனுமதிச் சீட்டு, 

தேசம் என்பது

வல்லரசுகளின் மேசையில் 

மீதமிருக்கும் உப்பு.


ஆனால் வரலாறு

அதிகாரத்தின் வாயால் மட்டும் பேசுவதில்லை, 

சில வேளைகளில் அது 

அடக்கப்பட்ட ஒரு தாயின்

அடுப்புச் சாம்பலில் கையெழுத்திடுகிறது, 

சில வேளைகளில்

சிறைக்கதவின் இரும்பில்

ஒரு நகத்தின் கீறலாய்த் தொடங்குகிறது, 

சில வேளைகளில்

மரணத்தைக் கடந்துபோன இளைஞர்களது

என்பின் அமைதியிலிருந்து

மின்னலாக எழுகிறது.


நியாயம் மட்டுமே வெற்றியாய் ஆகாது 

காலத்தையும் கணக்கையும்

புவியின் குளிர்ந்த அரசியலையும் கடக்க வேண்டும்.

மண்ணின் உண்மைக்குக் குரல் வேண்டும்,

குரலுக்குத் தொடர்ச்சி,

தொடர்ச்சிக்கு உடைக்க முடியாத உள்ளெரி.

அந்த உள்ளெரியே

மாவீரர்களின் ஆன்மா.

அவர்கள் இறந்தவர்கள் அல்ல, 

மண்ணுக்குள் வைத்துவிடப்பட்ட

தீக்கற்கள்.

ஒரு தலைமுறை தடுமாறும் பொழுது

அவர்கள் அடியிலிருந்து வெப்பம் தருவார்கள்.

ஒரு மொழி பயத்தில் நடுங்கும் பொழுது

அவர்கள் எழுத்துகளுக்குள் இரும்பு சேர்ப்பார்கள்.

ஒரு கொடி காற்றில்லாமல் தொங்கும் பொழுது

அவர்கள் காணாத மூச்சால்

அதை மீண்டும் அசைப்பார்கள்.

அரசியல் பலம் படைகளை எண்ணும்,

ஆன்ம பலமோ

எந்தத் தராசிலும் நிறுக்க முடியாதது 

மண்ணில் புதைந்த பெயர்களின் உறங்காத ஒளி.


தமிழீழம் 

தோல்வியின் பெயரல்ல, 

அது இன்னும் நிறைவேறாத

அறத்தின் நிலப்பெயர்.

கடல் அதைச் சூழ்ந்திருக்கலாம்

முள்வேலிகள் அதைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்

ஒப்பந்தங்களின் காகிதம்

அதன் குருதியை உலர்த்த முயன்றிருக்கலாம்.

ஆனால் ஒரு தேசம்

முதலில் நிலத்தில் அல்ல 

நினைவில் உயிர்வாழ்கிறது.

நினைவில் உயிர்வாழும் தேசத்தை

எந்த ஆட்சியும் முழுதாய் வெல்ல முடியாது.


மறமென்பது வெறும் சினமன்று 

அநீதியின் கழுத்தில் வைக்கப்படும்

அறத்தின் சூடான கை.

மண் மறுக்கப்பட்ட மக்களுக்கு

மறமும் ஓர் அறம்தான், 

மீண்டும் மனிதராய் நிமிரும்

முதற் பிரார்த்தனை.


ஆகவே,

நாம் காத்திருப்பதில்லை

குருதியை கொள்கையாக்கி,

இழப்பை மொழியாக்கி,

மரணத்தை மண்ணின் உரிமைச் சான்றாக மாற்றி

தொடர்கிறோம்


ஒரு நாள்

அரசியல் தன் குளிர்ந்த கைகளைப் பின்வாங்கும், 

ஒரு நாள்

வரைபடம் தன் பொய்யைத் திருத்தும், 

ஒரு நாள்

மண்ணின் கீழெழும் 

பல்லாயிரம் அமைதிக் குரல்கள்

ஒரே ஓசையாகி

உலகின் செவிப்பறையைத் திறக்கும்.

அந்நாள்

விடுதலை வெறும் கொடியாய் ஏறாது , 

தேசிய இனங்களின் திறவு கோலாய்

பட்டொளி வீசிப் பறக்கும்..


திங்கள், 15 ஜூன், 2026

மலையென எழுக..

வேர்கள் இருளில் துடிக்க 

வீழ்ந்த பெருமரம் 

பெருங்காற்றால் சாய்ந்ததல்ல, 

மண்ணுக்குள் பதுங்கிய 

கரையான்களின் சூழ்ச்சியால்

உட்குடைந்து சரிந்த மூச்சு


நிழலருந்திப் பசியாறிய சிறகுகள் 

வீழ்ந்த மரத்தின் வேர்களை 

பழுதென்று பழித்துச் செல்லும், 

முளைத்தால் மட்டுமே 

விதையெனக் கொண்டாடும்,

பனியில் கருகிய முளையைப் 

பிழையெனத் தூற்றும். 


சந்தை மனிதர்களின் 

துருப்பிடித்த தராசுகளில் 

உன் காயங்களில் வழியும் 

செங்குருதியை நிறுக்க முயலாதே, 


வெற்றிக்கு மலர்தூவும் 

குருட்டு விழிகள் 

தோல்வியின் கையறு விம்மலை 

மரணமென்று சுட்டும் 


இது பொதுமனத்தின் பெருவியாதி


வரண்ட நிலம் பிளந்து பூத்த 

செங்குருதிப் பூவே 

அவர்கள் உன் வியர்வையை 

பிழையென அளக்கட்டும்,

நீ அதை அடுத்த பெருங்காட்டின் 

மழைநீர் என நம்பு,


இழப்பின் சாம்பலை 

நெற்றியில் பூசாதே,

அது உன் வேர்களைக் காக்கும் 

கவசப் படலம்.


காட்டுமகன் எறிந்த கூர்வேல் 

இலக்கைத் தவறவிட்டால் 

வேலின் கூரே பிழையாகாது 

திசையை வளைத்த 

பெருங்காற்றின் சூழ்ச்சி அது


முறிந்த வாளின் எஃகினை

உன் மார்புக்குள் 

நீயே குத்திச் சிதைக்காதே, 


கூட்டுமனத்தின் கூச்சல்களைப் புறந்தள்ளு, 


நெருப்பு அணைவதில்லை 

அது கனன்று உறங்குகிறது

மீண்டும் பெருநெருப்பாய் 

வெடித்தெழக் காத்திருக்கிறது, 


நீ இழந்தது விடுதலையையல்ல,

வெறும் காலத்தின் ஒரு துளியை மட்டுமே

உன் பாதங்களில் படிந்த 

செம்மண்ணின் மீது ஆணையாய் 

உன் குருதியின் திசை பிழையற்றது 

மலையென எழுக.. 


வியாழன், 11 ஜூன், 2026

விண்மீனுக்கான பதில்..

உன் கடிதம்

இன்றிரவுதான் வந்து சேர்ந்தது

நீ அணைந்து

எத்தனை ஊழிகளோ…

இருந்தும் வாசிக்கிறேன் 

ஒளியின் கையெழுத்தில்

ஒரு பிழையும் இல்லை 


நான் ஒன்றும் பெரியவன் இல்லை 

கடற்கரையில் நின்று

அலைகளை எண்ணத் தொடங்கி

இடையிலே மறந்தவன்

உலகம் என்னும் ஏட்டை

ஒருமுறை புரட்டி,

மொழி தெரியவில்லை என்று

மூடி வைத்தவன்.


என்றாலும் சொல்கிறேன் 

புரியாததால்தான்

இத்தனை அழகு, 

விடை தெரிந்த புதிரை

யார் மறுமுறை கேட்பார்?


தெருவில் நடக்கிறேன்:

ஒவ்வொரு முகமும்

எழுதி முடிக்காத கடிதம், 

எவரும் இங்கே

முழுமையாய் வாசிக்கப்படவில்லை, 


உனக்குத் தெரியுமா விண்மீனே 

இங்கும் உன்னைப் போல் 

எத்தனையோ பேர்..


வலை பின்னிய கைகளில்

சிலை தூங்கியது

சோறு வடித்த விரல்களில்

யாழ் மறந்து கிடந்தது

எவரும் அறிந்திலர் 

தாமுமே அறிந்திலர்.


ஆதலால்,

உன் காலங்கடந்த ஒளியை

முகம் நிமிர்த்தி ஏற்கிறேன்.

நான் மறையும்போது

எங்கோ ஓர் இருண்ட கண்ணை நோக்கி

என்னிடமிருந்தும் ஏதோ ஒன்று

புறப்படும் 


புரிதல் எனக்கு வாய்க்கவில்லை

அன்பு செய்யத்தான் தெரியும்.

இதோ 

உன் ஒளி விழுந்த இடத்தில்

என் கண்களின் ஓரத்தில் 

ஒரு துளி உப்பு..


சனி, 6 ஜூன், 2026

இரெத்தம் தோய்ந்த செஞ்சட்டை

அவர்கள் அணிந்த செஞ்சட்டை 

விடியலின் நிறமன்று,

எங்கள் வீதிகளில் உறைந்த   

பழைய குருதியின் 

காய்ந்த செதில்.


எங்களின் 

துயரப் பாடல்களைத் திருடி

தமக்கான மகுடத்தின் இசையை 

மீட்டிக்கொண்டார்கள்.


அரியணை ஏறியதும்,

செம்போர்வையைக் கிழித்து 

பழைய நச்சுப்பற்களை நீட்டுகிறார்கள்.


துக்கத்தின் சுவடுகளுக்கு 

விலங்கிடுகிறார்கள்

எங்கள் நடுகற்களின் மேல் 

தார் ஊற்றி 

பெருவீதி சமைக்கிறார்கள்.


உதடுகளை இரும்புக் 

கம்பியால் தைக்கலாம்

ஆனால் குரல்வளைக்குள் புதைக்கப்படும் 

பாடல் அழிவதில்லை.


அது குருதிக்குள் இறங்கி,

எலும்புகளைக் கூராக்கும் 

உப்பாய் உறைகிறது,


தொண்டையை நெரிக்கும் 

உங்கள் அதே விரல்கள்தான்

பாறையைப் பிளக்கும்

வேர்களின் தீராச் சினத்தையும் 

மண்ணுக்குள் மூட்டுகின்றன.


எங்கள் அமைதி 

ஓய்ந்துபோன மூச்சல்ல

அது உங்களின் 

இரும்புச் சங்கிலிகளைத் தின்னக் காத்திருக்கும்

கூர்மையான துரு..