Friday 6 April 2012

ஏழுகடல் ஏழுமலை தாண்டி..

தூக்கத்தில் வந்தென்னைத்
தொட்ட கனவுக்குள்
தூங்கி ஓர் கனவைக் காண்பதுவாய்க்
கனவொன்று

நிரை நிரையாய் மரங்கள்
நிழலைச் சொரிந்த படி
உரையும் கொப்புகளின்
உயிரோசை கிரீச் என்று
கரையும் குருவிகளின்
காந்தக் குரலோசை
புரியாவிட்டாலும்
புல்லரித்துச் சிலிர்க்கிறது
பல முறை நான் சென்று
பழகிய இடம் போல
அழகிய குளக்கரை
அப்பாலே மணற்கும்பி
மன வெளியை நிரப்புகிற
மணல் வெளிகள் வெளிதாக
ஆத்ம சரீரத்தில்
அதன் மணத்தை நுகருகிறேன்
ஆளரவம் இல்லாத
அமைதி ஒலி எங்கணுமே

ஆண்டாண்டு காலமாய்
அனுபவித்துத் திளைத்திருந்த
பூண்டு எனைப்போற்றி
பூக்க வைத்த மண்ணுக்கு
மீண்டு நான் வந்துவிட்ட
மிதப்பில், புழுகத்தில்
உங்காலும் அங்காலும் ஓடி
உடல் வேர்த்து, களைத்துப் போய்
எங்காலும் மரத்தடியில்
இருப்பமெனக் குந்தி விட
அப்படி ஓர் தூக்கம்
அதற்குள்ளும் ஓர் கனவு

இப்போது நான் பார்த்த
இதே போன்ற நிலக் காட்சி
எப்போதோ நான் கண்ட
என் பால்ய நண்பர்கள்
தென்னங் குரும்பைத்
தேரோடும்,உருட்டுகிற
சின்னப் பனை நுங்குச்
சில்லோடும் அப்படியே
அப்படியே நிஜமாக
அதே அந்தக் காலத்தில்,
அப்பன் வந்துள்ளே
சாப்பிட்டு விளையாடு
எப்போதும் எனை அதிரப்பேசாத
என் அப்பா
அப்பாலே நின்று அழைக்கின்றார்
இப்போது
கனவுக்குள் வந்த கனவென்னுள்
கலைகிறது, இன்னும்
கலையாத கனவுள்
கண் விழித்துப் பார்க்கின்றேன்
கனவின் கனவுள்ளே
கண்டவைகள் கலையாத
கனவின் கண்களுக்கு
காட்சி தர மறுக்கிறது

அப்பன் எழும்பிச்
சாப்பிட்டுப் படனப்பன்
அப்பாதான் மீண்டும்
இப்போதும் அழைக்கின்றார்..

ஓம் என்று சோம்பல்
உதறி முழிக்கின்றேன்
ஒருத்தருமே இல்லை!
உலகொன்றின் மூலைக்குள்
தரித்திரம் பிடித்துப் போய்த்
தனியே நான் கிடக்கின்றேன்

கனவுக்கு அதன் கனவு
கலைந்து விட்ட பின்னாலே
காட்சியாய் அதை மீண்டும்
காணக் கிடைக்கவில்லை
இரு கனவும் கலைந்து விட்ட
இப்போதில் நனவினிலே
ஒரு காட்சி கூட இப்ப
உயிர்ப்பாகத் தெரியவில்லை
நினைவுகள் மட்டுமே
நெடுஞ்சாணாய்க் கிடக்கிறது

காமம் கடுங்கோபம்
காழ்ப்புணர்வு காசீட்டம்
வெற்றி வேட்கை என்ற
வெறித்தன்மை படிந்துள்ள
மூளை, விழித்திருந்து
முழுதாக எம்மைத் தன்
ஆளாக நடத்தும் போதினிலே
எம்மாலே
காலங்களைக் கடக்க முடியாது
அது சோர்ந்து
கண்ணயர்ந்து போகும்
கட்டத்தில் ஆழ் மனது
விண்ணுயர எழுந்து விரிந்து காலத்தை
மண்ணளவாய்த் தன் கையுள்
மடக்கும், அதனாலே

பசிய நினைவுகளும் பாசங்கில்லாத
பாச உறவுகளும் பால்யமும்
முன்போல
கசிந்து வழிந்தோடும்
காலத்தின் காட்சிகளைக்
கண்டுணர்ந்து வாழ்ந்தெந்தன்
காலத்தைக் கடப்பதற்காய்
ஆழ் மனதை அது தோன்றும்
ஆழுறக்க நிலைதன்னை
அப்படியே கட்டி அணைத்தபடி
அசராமல்
ஏழுகடல் ஏழுமலை கடந்து
எழுந்துள்ள
காலத்தைப் பிளந்து கடக்கின்றேன்
இதை விடவும்
ஏதும் வழி தெரிந்தால்
எந்தனுக்கும்  சொல்லுங்கள்..

No comments:

Post a Comment