Saturday 21 April 2012

இது நடக்கும்..

தமக்கென்றோர் மொழி
தமக்கென்றோர் கலாச்சாரம்
தமக்கென்றோர் வாழ்வு முறை
தன்னை வடிவமைத்து
தன் போக்கில் வாழ்கின்ற
இனக் குழுமம் ஒன்றை
இடையிட்டுப் பெருகிவந்த
இன்னோர் இனம் வந்து
இடித்துத் தன் காலுள்
கண் முன்னே போட்டுக்
கதறக் கொழுத்தையிலே
அமுக்கம் தாளாமல்
அதை எதிர்க்க அவ்வினத்தின்
உள்ளே இருந்தொருவன்
எழுதல் உலக விதி
அவனின் பின்
முழு இனம் திரண்டு
மூச்சைக் கொடுத்திடுதல்
எழப் போகும் ஓரினத்தின்
இருப்பின் வரலாறு

நீண்ட போராட்ட
நெடு வெளியில் மண்ணுக்காய்
மாண்ட வீரர்கள்
மன வலிமை ஓர்மத்தை
தூண்ட, துவளாமல்
தொடர்கையிலே அவன் பற்றி
இடைவெளியில் மனம் சோர்ந்து
இடிந்தோர் விதையற்று
வடிக்கின்ற விமர்சனங்கள்
வாய் நாற்ற வீணீர் தான்
தவிர்க்கேலாதெனினும் ஓர்
தடையல்ல, படிக்கற்கள்
இதையெல்லாம் தாண்டியவன்
எடுத்தாண்டு நகர்கையிலே
இடைவெளியில் ஏதேனும்
இடர்கள் நேர்ந்திடலாம்
விடை கூடச் சொல்லாமல்
விம்பம் மறைந்திடலாம்
உடைந்துருகிச் சிலகாலம்
ஒடுங்கிடலாம் அவன் படைகள்

ஆனால்
நாடென்றால் இது தான்
நாமிதனை அடைவதற்கு
நாடிய வழிமுறைகள்
நம்பிக்கை இவைகள் தான்
தேடி உலகெல்லாம்
திரிந்தாலும் இறுதியிற் கை
கூடும் வழி இது தான்
என்கின்ற குறிப்பெங்கள்
நாடி நரம்புகளில்
நாளாந்தம் வளர்தசையில்
ஓடித் திரிகிறது உள்ளே,
அவன் இருப்பு
இறுகிய பாறை அல்ல
இயங்காமல் இருப்பதற்கு
திறந்த குபுகுபுக்கும்
நீரூற்று, அதிற் தோய்ந்த
சிறந்த மன வேர்கள்
சிந்தனைகள் எல்லாமே
உகந்த ஓர் நாளில்
ஒன்றாகும் அன்றைக்கு
திறந்த வானிருந்து
வருவது போலொருவன்
பிறந்து வருவது போல் வருவான்
அவனடுத்த
படை நடத்திச் செல்வான்
பார்த்துணர்ந்த மாதிரி யை
உடைய வழியாலே
ஒழுங்கமைப்பான் அவனொன்றும்
வேற்றுக் கிரகத்தின்வாசியல்ல
விழிப்படைந்த
நேற்றுவரை எம்மோடு
நிமிர்ந்து தோள் கொடுத்த
நம்முள் ஒருவன் தான்
நமக்காக வாழ்பவன் தான்

காலம் அவன் பெயரைக்
கட்டமைக்கும், அவனுடைய
வானத்தில் நிற்பதற்கு
வடிவமைத்த அவன் மேகம்
கானகப் பரப்பினைக்
கடக்கும், ஓர் நாளில்
நாமெல்லாம் அதனை
நம்தேச மேகம் தான்
ஓம் என்று சொல்லி
ஒன்றாய்க் கை கோர்க்கையிலே
மேகம் திறந்து
விடியல் மழை பொழிந்தெங்கள்
தாகம் தணிந்து தளிர்க்கும்
இது நடக்கும்..

No comments:

Post a Comment