Friday 6 April 2012

மழையும் நினைவும் மனசளையும்..

கருக்கட்டி விட்ட
மேகங்கள் வானத்தில்
உருக் கொண்டலைய
உள்ளத்தில் நினைவென்னும்
கருவும் உள் வளர்ந்து
காலுதைக்கத் தொடங்கி விடும்

மேகம் பிரண் டிருண்டு
மிதந்திணைய நினைவலைகள்
மோகம் கொண்டுவிட்ட
முரட்டாண் யானையைப் போல்
ஏகமாய் உள்ளிரைந்து
இயலாமல் உடல் பிரட்டும்

ஏதோ ஓர் வகையான
இத இருளில் ஈரத் தீ
மோதி உரசி விட
மொய்த்தூரும் காற்றினிலே
போதி மர நிழலீரம்
பொழிய நினைவு வலி
ஆதிப் பிறப்பொன்று
அவதரிக்கப் போவதெண்ணி
வேதனையின் இன்ப
வெப்பத்தில் குளிர்ந்துருகும்

மெள்ளத் தூவான
விழுதிறங்கி மண் மணக்க
உள்ளே இருக்கின்ற
உயிர்க் குழந்தை வருவதற்காய்
வெள்ளை கறுப்பாக
விழத் தொடங்கும் நினைவுகளும்

பெருந்துளியாய் மேகம்
பிறப்பிக்கும் ஒவ்வொன்றும்
அறுந்தவிழ்ந்து மண்ணை
அடைகின்ற போதிலங்கு
தெறிக்கின்ற சின்னத்
துளிகளாய் என் நினைவு
பறந்து ஊர்க் கோடிப்
பக்கத்தில் வீழுகையில்

நீண்ட நினைவின் நோ
நேரமும் கூடி வர
மாண்டு பிறப்பது போல்
மன யோனி திறந்து விட
ஆண்டு அனுபவிக்க
அழகான கவிக் குழந்தை
தோன்றி வெண் தாளில்
துள்ளி விழுந்திடுவான்

மேகம் பெற்றெடுத்த
மென் குழந்தை மழையாலே
யோகம் பெற்றுவிட்ட நிலமும்
அதனாலே
தாக நினைவெழுந்து
தான் பெற்ற கவியாலே
போகும் வழி அறிந்த மனமும்
இப்போது
ஏகம் அகமாகி
இரண்டற்ற ஒன்றாகி
ஈக மனம் போல
ஈரலிப்பாய்க் கிடக்கிறது..

No comments:

Post a Comment